புதன், 27 மே, 2009

கட்டுரைகள்
இந்த வாரம் காலரசிகன்

First Published : 24 May 2009 12:50:00 AM IST தினமணி


நவீன தமிழ் இலக்கியத்திற்கு அ.மாதவையாவின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தமிழ் நாவல்களின் வளர்ச்சியில் பிரதாப முதலியார் சரித்திரத்தையும், கமலாம்பாள் சரித்திரத்தையும் தொடர்ந்து மாதவையாவின் பத்மாவதி சரித்திரமும் பெரும் பங்கு வகிக்கிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கு சற்று அதிகமாக வாழ்ந்தவராயினும், அ.மாதவையாவின் படைப்புகள் காலத்தால் அழியாதவை. கவிதை, கதை, நாவல், நாடகம், வாழ்க்கை வரலாறு, உரை என்று எழுதிக் குவித்தவர் அ.மாதவையா. நெல்லை மாவட்டம் பெருங்குளத்தில் பிறந்து நெல்லையிலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்து அரசு உத்தியோகத்தில் இருந்தவர் அவர். "விவேக சிந்தாமணி' என்ற பத்திரிகையில் "சாவித்திரி சரித்திரம்' என்கிற தொடர் நாவலை எழுதத் தொடங்கினார் மாதவையா. என்ன காரணத்தாலோ ஆறு இயல்களுடன் அது நின்று போனது. அந்த நாவல் தொடர்ந்து வெளியாகி முழுமை பெற்றிருக்குமேயானால் அதுதான் தமிழின் இரண்டாவது நாவலாக இருந்திருக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் ராஜம் அய்யர் தனது கமலாம்பாள் சரித்திரத்தை எழுதினார் என்பதுதான் உண்மை. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீர்திருத்தமும், நாத்திகவாதமும் பேசியவர் அ.மாதவையா. சனாதன வேஷதாரி ஜனங்களுக்கு எதிராக முழங்கியவர் அவர் என்பதுடன், நவீன வாழ்க்கை முறைக்கு சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்பதிலும் ஆணித்தரமாக இருந்தவர். மாதவையாவின் படைப்புகளில் சமுதாயச் சீர்திருத்தம், தனிமனித ஒழுக்கம், பெண்ணுரிமை, தமிழ் மொழி உணர்வு, தேசிய எழுச்சி போன்ற கருத்தாக்கங்களைக் காணலாம். படைப்பிலக்கியத் துறையில் முன்னோடியாகவும், சாதனையாளராகவும் விளங்கிய அ.மாதவையாவின் பணிகளும் சாதனைகளும் முழுமையாக உணரப்படவோ, போற்றப்படவோ இல்லை. முதலில் "தமிழர் நேசன்' பத்திரிகையில் பகுதி நேர ஆசிரியராகப் பணியாற்றிய மாதவையா ஓய்வு பெற்ற பின் சொந்தமாகவே "பஞ்சாமிர்தம்' என்ற பத்திரிகையை வெளியிட்டார். சென்னை பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக இருந்த மாதவையா அன்றைய கூட்டத்தில், பட்டப் படிப்பில் தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாகப் பேசிவிட்டு அமர்ந்த சில நொடிகளில் திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கு அளப்பறிய பங்களிப்பு நல்கிய அ.மாதவையாவின் சில அற்புதமான படைப்புகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள் "காவ்யா' பதிப்பகத்தார். நன்முத்தைத் தேடி எடுத்துக் கோர்த்த முத்துச்சரம் போன்ற தொகுப்பு!*****தர்மமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டியைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சென்னையில் வாழ்ந்த தன வணிகர்களில் ஒருவர் அவர். பசி என்று வந்தவர்களுக்கெல்லாம் அன்ன சத்திரம் அமைத்து அவர்களைப் பசியாறச் செய்தவர். கல்விச் சாலைகளை உருவாக்கி ஏழை எளியோரின் அறிவுக் கண்ணைத் திறந்தவர். இல்லை என்று வந்தோர்க்கெல்லாம் இல்லை எனாது வாரி வழங்கிய வள்ளல். தனது சொத்து முழுவதையும் தர்மத்துக்கு எழுதி வைத்து, தனது அரண்மனை போன்ற பங்களா முதல் எல்லாவற்றையும் கல்விச்சாலைகளும், மருத்துவமனைகளும் கட்டி ஏழைகளுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டும் என்று உயில் எழுதி வைத்து மறைந்தவர். இலவசக் கல்வி புகட்டத் தனது திரண்ட சொத்தை எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எழுதி வைத்த கண்ணையா செட்டி போன்றவர்கள் வாழ்ந்த காலம். சென்னையை அடுத்த பட்டாபிராமில், தர்மமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரியின் ஆண்டு மலர் அடியேனின் பார்வைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதிலிருந்த விவரங்கள்தான் மேலே தரப்பட்டவை. அந்த ஆண்டு மலரில் இடம் பெற்றிருந்த ஒரு கவிதை மனதைத் தொட்டது. அந்தக் கல்லூரியின் தமிழ்த் துறை விரிவுரையாளர் லோகநாதன் எழுதிய "அஞ்சல் பெட்டி வானம்' என்ற கவிதை நெஞ்சைத் தொட்டது என்பதைவிட நெஞ்சில் தைத்தது என்பதுதான் நிஜம். இதோ,புஞ்சைக் காட்டில்நன்செய்பயிரிடத்தான்அப்பாநினைக்கின்றார்!அம்மாவுக்கும்ஆசைதான்தென்னை மரத்தின்நிழலில் நின்று இளநீர்குடிக்க!என்னநினைத்துஎன்ன செய்யவெறும் வாயைமென்றகதையாய்எப்பொழுதும்வாய் திறந்தேகிடக்கும்அஞ்சல்பெட்டியாகவே வானம்!*****"இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு' என்றொரு கவிதைத் தொகுப்பு. கவிஞர் சூர்யநிலாவின் இரண்டாவது தொகுப்பு இது. இவரது முதல் தொகுப்பான "சில்லுகள்' தொகுதியில் இடம்பெற்றிருந்த நடை என்ற கவிதை கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. படித்து, ரசித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழையும் சில அழுத்தமும் ஆழமுமான ரசனைமிக்க வரிகள்.""ஆலையொன்று எங்களூருக்குவந்தது.தினமும் கிடைத்தக் கூலிகள்எங்கள் வயிற்றின்ஈரத் துணிகளைஉலர்த்திப் போனது,மிகவும் மகிழ்ச்சியாகயிருந்தோம்.ஒரு நாள் போல்ஆனந்த காலங்கள்அதிக நாள் தொடராமல்ஆலைக் கழிவுகளால்மலடாகத் தொடங்கினஎங்கள் மண்.இளநீரில் கூடபரவத் துவங்கின பச்சையம்வீழத் தொடங்கின.எங்களின் வாழ்க்கை.மிகவும் மகிழ்ச்சியாயிருந்தோம்,முன்பெல்லாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக