செவ்வாய், 13 அக்டோபர், 2009

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தது தமிழக எம்.பி.க்கள் குழு



கொழும்பு, அக். 12: மத்திய இலங்கையில் நுவரேலியா மாவட்டத்தில் ஹட்டன் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை தமிழக எம்.பி.க்கள் குழு திங்கள்கிழமை சந்தித்தது.

இலங்கையில் அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிவதற்காக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்களை கொண்ட குழு சென்றுள்ளது.
ஹட்டனில் உள்ள பலகலை பயிற்சி மையத்தில் எம்.பி.க்கள் குழு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது. இங்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பலவிதமான விஷயங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இங்கு தொழிலாளர்களின் பணியிட நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இங்கு பணிபுரியும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர் இந்தியாவில் இருந்து சென்று குடியேறியவர்கள்.
தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் ஊதியம் உயர்ந்தபோதும், அவர்களது பிரதிநிதி அரசில் இருந்தபோதும், அவர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
தமிழக எம்.பி.க்கள் குழு வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
முகாம்களில் உள்ள இடநெருக்கடி குறித்தும், அங்கு தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்தும் குழுவிடம் தமிழர்கள் கண்ணீருடன் விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாங்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு விரைவில் செல்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் குழுவிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விக்ரமசிங்கவுடன் இன்று சந்திப்பு: இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுடன் எம்.பி.க்கள் குழு செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது.
அதிபர் ராஜபட்சவை இக் குழு எப்போது சந்திக்கும் என்பது உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே, அதிபர் ராஜபட்சவின் மீது இந்திய அரசு வைத்துள்ள நம்பிக்கையையே தமிழக எம்.பி.க்கள் குழுவின் சுற்றுப்பயணம் காட்டுகிறது என இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ரோஹித பொகலகாமா தெரிவித்துள்ளார்.


கருத்துக்கள்

வதைமுகாம்களில் உள்ள நிலையைக காணச் சென்றவர்கள் அங்குதானே செல்ல வேண்டும். வெளியே உள்ளவர்களைச் சந்தித்துப் பொழுது போக்குவது ஏனோ? இவர்களெல்லாம் சிங்கள இறையாண்மைக்குக் கட்டுப்படுவதாகவும் அதைக் காப்பாற்றும் காங்கிரசு திமுக வினரைப் போற்றுவதாகவும் ஒரு சில இட நெருக்கடி தவிர நன்றாகத்தான கவனிக்கபபடுகிறார்கள் என்றும் உலகத் தமிழினத் தலைவராகக் கலைஞரை வணங்குகிறார்கள் என்றும் எனினும் இவர்களை விரைவில் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சிங்கள அரசை வற்புறுத்தியுள்ளதாகவும் இலஙகை இந்திய நட்புறவு தொடர திமுக பாலமாக இருக்கும் என்றும் இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க திமுக எப்பொழுதும் தயங்காது என்றும் கூறி சோனியாவிடமும் கொலைகாரக் கும்பலிடமும் பாராட்டு பெற அப்பொழுதுதானே முடியும்.

ஆழ்ந்த வருத்தத்துடன்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/13/2009 3:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக