திங்கள், 12 அக்டோபர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 133: பிரேமதாசாவுடன் சந்திப்பு!



அன்டன் பாலசிங்கம் - அடேல்
பாலசிங்கத்துடன் பேசிய பிரேமதாசா, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தமது விருப்பத்தை வெளியிட்டார். வன்னியில் உள்ள பிரபாகரனுடன் தொடர்புகொண்டு அவரது விருப்பம் அறிந்ததும் பேசலாம் என பாலசிங்கம் பதிலளித்தார். அப்போது பாலசிங்கம் அமைதிப்படையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று பிரேமதாசா வெளிப்படையாக அறிவிப்பது பலன் தரும் என்றும் யோசனை கூறினார். அதன்படியே, பிரேமதாசாவும் தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினமான 1989 ஏப்ரல் 12-ஆம் நாள், விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, போர்நிறுத்தம் அறிவித்தார். இந்திய அமைதிப்படையும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பிரேமதாசாவின் அறிவிப்பையொட்டி, இலங்கை அதிபருக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டது. அக் கடிதத்தில், "இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவ்வமைதிப்படை இம்மண்ணை விட்டு அகலும் வரை போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று அரசு அழைப்பை உடனடியாக நிராகரித்தார்கள். பிரேமதாசா நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கான ஏற்பாட்டைச் செய்வதாகக் கூறியிருந்ததையும் அக்கடிதத்தில் நினைவுபடுத்தியிருந்தார்கள் (சுதந்திர வேட்கை: அடேல் பாலசிங்கம்-பக்.281). இதன் பின்னர் அடுத்த நாளிலேயே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரேமதாசா, "அமைதிப்படையை இன்னும் 3 மாதத்திற்குள் இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்' என்று அறிவித்தார். அதே நாளில் வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னா அமைதிப் பேச்சுக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, லண்டனில் இருந்த பாலசிங்கம், பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் தயார் என்றும் அதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறும் பிரேமதாசாவுக்குக் கடிதம் எழுதினார். பாலசிங்கம் விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசுவார் என்பது உறுதியானது. அவரும் அடேலும் கொழும்பு (ஏப்ரல்-26) வந்தனர். இவர்களுக்கென ஹில்டன் ஓட்டலில் அறை எடுக்கப்பட்டிருந்தது. அங்கு பிரேமதாசாவின் செயலர் விஜயதாசா, பாதுகாப்புத்துறைச் செயலாளர் சேப்பால அட்டிகல, வெளியுறவுத்துறை அமைச்சகச் செயலாளர் ஃபீலிக்ஸ் டயஸ் அபேசிங்கா ஆகியோர் வந்து பாலசிங்கத்தையும் அடேலையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர். மறுநாள் சேப்பால அட்டிகல மற்றும் ராணுவத் தளபதி ரணதுங்கா இருவரும் வந்து, விடுதலைப் புலிகளின் இதரப் பிரதிநிதிகளை வன்னியிலிருந்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். 1989 மே 3-இல் பயணம் என்றும், உடன் பத்திரிகையாளர்களும் வன்னிப் பகுதிக்கு இன்னொரு ஹெலிகாப்டரில் வருவார்கள் என்றும் முடிவாகியது. கொழும்பிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வன்னிப் பகுதிக்கு பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் கிளம்பினார்கள். விடுதலைப் புலிகளின் சார்பில் பாலசிங்கத்துடன் பங்கேற்க இருக்கும் தளபதிகளை அழைக்கவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது குறித்து பொதுவாக வரவேற்றது இந்தியா. இந்த நிலையில் வன்னிப் பகுதி நோக்கிச் சென்ற இலங்கைப் படையின் ஹெலிகாப்டர்களை, அமைதிப் படையின் எம்124 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டு வழிமறித்து, பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பறந்து வந்தன. அமைதிப் படை பராமரிப்புப் பகுதியில் உள்ள வன்னிப் பகுதிக்கு சிங்கள ஹெலிகாப்டர்கள் செல்ல இருக்கின்றன என்ற தகவலைக் கூட அவர்களிடம் தெரிவிக்காமல்தான் புறப்பட்டு இருந்தன. இலங்கையின் வான் எல்லையில், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பறக்க அனுமதி கோருவதை, தவிர்க்கவே இவ்வாறு எதுவும் சொல்லாமல் புறப்பட்டனர். இதனை அறிவுறுத்தும் நோக்கத்துடன்தான், இந்திய அமைதிப் படையின் ஹெலிகாப்டர்கள் பின்தொடர்ந்து வந்து, பிறகு தங்கள் வழியே சென்றன. நெடுங்கேணிக் காட்டில் குறிப்பிட்ட அடையாளத்தைப் பார்த்து ஹெலிகாப்டர்களை இறக்க விமானிகள் மிகுந்த சிரமப்பட்டனர். இவர்கள் தேடிய இலக்கு விமானிகளுக்குத் தெரியவில்லை. பிறகு சிலுவை குறியிடப்பட்ட அந்த அடையாளத்தைக் கண்டு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. எல்லாம் சரியாக நடைபெறுகிறது என்று உறுதிப்படுத்திய பின்னர்தான் காட்டின் மறைவிலிருந்து, பாதுகாப்புக்கு நின்ற போராளிகள் புடைசூழ யோகரத்தினம் யோகியும், பரமு மூர்த்தியும் இவர்களது மெய்க்காவலர் ஜுட்டும் வெளிவந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், விமானிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அந்தக் காட்டிலும் பிஸ்கட், கேக், தேநீர் வழங்கப்பட்டது. சிறிது நேர பேச்சுக்குப் பிறகு இவர்களை அழைத்துக் கொண்டு ஹெலிகாப்டர் கொழும்பு சென்றது. விமானப் படை விமானதளத்தில் இறங்கிய விடுதலைப் புலி தளபதிகள் கொழும்பு ஹில்டன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதே ஹெலிகாப்டர்கள், முன்பு தமிழர் பகுதியில் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் ஏவியதுண்டு. விடுதலைப் புலிகள், இந்த ஹெலிகாப்டர்களைக் கண்டால் சுடவும் முயற்சி எடுத்ததுண்டு. ஆனால் இன்று தலைகீழ்த் திருப்பமாக, அதே ஹெலிகாப்டரில் பயணம்; நட்சத்திர ஓட்டலில் தங்க ஏற்பாடு. "இது ஒரு புதிய அத்தியாயம்' என்கிறார் அடேல் பாலசிங்கம் தனது "சுதந்திர வேட்கை' நூலில். பிரேமதாசாவைச் சந்திக்கும் முன்பாக அவரைப் பற்றிய குறிப்புகளைத் தனது அணியினருக்கு பாலசிங்கம் விளக்கினார். இளவயதில் தான் பத்திரிகையாளராக இருந்த போது பிரேமதாசாவை நன்கு அறிந்தவர் அவர். "பிரேமதாசா தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். எளிமையானவர் -எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பவர். கடும் உழைப்பாளி. கவிஞர். நாவலாசிரியர். பிரதமராக இருந்த காலத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர். ஒரே தேசிய இனம் -ஒரே தாயகம் -ஒரே மக்கள் என்ற லட்சியத்தில் பிடிப்பு கொண்டவர். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்ப முதலே எதிர்த்தவர். இன்றும் எதிர்க்கிறார். நமது நோக்கமும் அதுதான். இந்தப் பின்னணியில் நமது பேச்சு செயல் எல்லாமே இருக்கும்; இருக்க வேண்டும் -முரண்பாடுகள் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது' என்றும் வலியுறுத்தினார் பாலசிங்கம். (சுதந்திர வேட்கை -அடேல் பாலசிங்கம் -பக். 283-284).பிரேமதாசா விடுதலைப் புலிகளைச் சந்திக்க மே 4-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நேரம் ஒதுக்கி இருந்தார். இலங்கை அதிபர் வசிக்கும் மாளிகையான சுக்சித்ராவில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொண்டமைக்கு பரஸ்பரம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர். தாம் தமிழர்களின் நண்பன் என்றும், அவர்களின் துன்பங்களையும் போராட்டத்தையும் புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "இனப் பிரச்னை என்பது அண்ணன் -தம்பிக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை. நமக்குள் தீர்க்க வேண்டிய இந்தப் பிரச்னையில் இந்தியாவைக் கொண்டு வந்துவிட்டது ஜே.ஆர். செய்த தவறு' என்று ஜெயவர்த்தனாவைக் குற்றம் சுமத்தினார். "இதனாலேயே நாடு பூராவும் வன்செயல் இடம்பெற்று ரத்த ஆறும் கிளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாகவும்' கூறினார். பாலசிங்கம் இந்திய அமைதிப் படை, புலிகளின் தற்காப்புப் போர், மக்கள் படும் இன்னல்கள் ஆகியவற்றின் பக்கம் பேச்சைத் திருப்பினார். "அமைதிப் படையை எதிர்த்து தெற்கில் போராட்டம் என்ற பெயரில் மக்களைக் கொல்கிறார்கள். விடுதலைப் புலிகளோ அமைதிப் படையை எதிர்த்து அவர்களுடன் போரிடுகிறார்கள். உண்மையில் அவர்களே தேசியவாதிகள்' என்று பாலசிங்கம் சொன்னதை பிரேமதாசா ஏற்றுக்கொண்டு பிரபாகரனையும் அவரது வீரத்தையும் பாராட்டினார். ஜேவிபியினரைக் கோழைகள் என்றும் அமைதிப் படையினரைப் பார்த்து அவர்கள் ஒரு கல்லைக் கூட வீசவில்லை என்றும் கூறினார் பிரேமதாசா. பாலசிங்கம் பேசுகையில், மக்கள் தொண்டர் படை என்கிற பெயரில் ஒரு படைப் பிரிவு உருவாக்கி, அதில் மாணவர்களைச் சேர்த்து, அந்தப் படையை தமிழ்த் தேசிய ராணுவமாக, தனியார் படையாக, ஈபிஆர்எல்எஃப் கையில் வழங்க இருப்பதாகவும் கூறினார். பேச்சுவார்த்தைக்கென ஒரு நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படும் என்று பாலசிங்கத்தின் கேள்விக்குப் பதிலளித்தார். முதலில் அரசின் பிரதிநிதிகள் குழு, பின்னர் அதிகாரிகள் குழு, அமைச்சர்கள் குழு எனப் பேசப்பட்டு இறுதியில் அதிபருடன் பேச்சு என பட்டியல் தயாரானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக