வியாழன், 14 ஏப்ரல், 2011

Thirumaa dreams about prohibition : பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கருணாநிதியின் முதல் கையெழுத்து: திருமாவளவன் கோரிக்கை

நல்ல வேண்டுகோள். ஆனால் ஏற்கும் நிலையில் இருந்தால் முதல்வர் அதனை இப்பொழுதே செய்திருக்கலாம் அல்லது அறிவித்து இருக்கலாம். தன்னால் செய்யயப்பட்டப் பாவச் செயலைப் போக்கியதாகவும் அமைந்திருக்கும். இலவசங்களும் வேண்டா ! மதுவும் வேண்டா என இயக்கம் தேவை!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 




பூரண மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதியின் முதல் கையெழுத்து: திருமாவளவன் கோரிக்கை


கடலூர், ஏப். 13: கருணாநிதி மீண்டும் முதல்வராக வருவார். அப்போது அவரது முதல் கையெழுத்து, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் கோரிக்கை விடுத்தார். திட்டக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார். ஏற்கெனவே நாங்கள் அறிவித்தபடி, தி.மு.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். கூட்டணி ஆட்சிக்கு வற்புறுத்தமாட்டோம். பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து பூரண மதுவிலக்குக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம். தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரே வீட்டில், பல குடும்பங்கள் வசிக்கும் அவல நிலை இருந்து வருகிறது. இந்த நிலையைப் போக்க அனைவருக்கும் வீட்டுமனை, அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் வழங்க வரும் 5 ஆண்டுகளில் முதல்வர் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். தேர்தலில் ஜெயலலிதா பிரசாரம் செய்ய, திட்டங்கள், சாதனைகள் எதுவும் இல்லாததால் கருணாநிதியின் குடும்பத்தினர் மீது வசைமாரி பொழிந்து இருக்கிறார். அவரது தனிநபர் விமர்சனம், மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தது. அவரது இந்த அணுகுமுறை மக்களிடம் கருணாநிதி மீது அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையிலான உறவு தேர்தலுக்காக மட்டுமன்றி மேலும் தொடர்ந்து வலுப்படும். எதிர்பார்த்ததைவிட இரு கட்சித் தொண்டர்களும் தேர்தலில் இணக்கமாகச் செயல்பட்டனர்.சிறுபான்மையினர் நலன்களை பாதுகாக்க பாடுபடுவோம். அ.தி.மு.க.வினர் வன்முறையை தூண்டிவிட்டு தேர்தலை நிறுத்த சதி செய்தனர். ஆனால் அது முடியவில்லை என்றார் திருமாவளவன். பேட்டியின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக