சனி, 16 ஏப்ரல், 2011

Kalaignar reports against E.C. regarding counting date : தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி மீண்டும் புகார்

சரியான கருத்துகள். நாடாளுமன்றத் தேர்தல் எனில் பிற மாநிலத்தேர்தல் முடிவிற்காகக் காத்திருக்கலாம். சட்ட மன்றத் தேர்தல் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் தன்மையது. எனவே, உடனே வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கலாம்.  கடைசி நேரப பணப்பரிமாற்றம் நடைபெற வழி வகுத்ததால் சிறிது பாராட்டு கிடைத்திருக்கலாம்.  ஆனால், மக்களின் பாராட்டு அதன் கிடுக்கிப் பிடி நடவக்கைக்காகத்தான். எனவே, முதல்வரின் நியாயமான கருத்திற்குச் செவி மடுத்துத் தேர்தல் அணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!   

தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி மீண்டும் புகார்


சென்னை ஏப். 15: வாக்குப் பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் அரசு நிர்வாகம் எந்தப் பணியையும் செய்ய முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். முடிவுகள் மே 14-ம் தேதிதான் தெரியும். ஆனால் இப்போதுள்ள சட்டப்பேரவைக் காலம் மே 16-ம் தேதி முடிவுற்று அடுத்த சட்டப்பேரவை மே 17-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். எனவே மே 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் ஒரு புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும். இடையில் இருக்கின்ற நாள்கள் மே 15, மே 16 ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே. அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்கும். எண்ணிப் பார்த்துவிட்டுதான் இந்தத் தேர்தல் தேதிகளை அறிவித்திருக்கின்றது.மே 17-ம் தேதி புதிய சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால் எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாள்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதத்தின் முதல் வாரத்திலோ அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம் அல்லவா? இந்த கேள்விகளை நான் ஏற்கெனவே எழுப்பி உள்ளேன்.இது ஒருபுறம் இருக்க, தமிழக மக்கள் அளித்த தீர்ப்புகள் மே 13-ம் தேதி வரை அறைகளிலே பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்படமாட்டாது, எடுக்கப்பட கூடாது. திடீரென ஏதாவது ஒரு முக்கிய முடிவு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அப்போது என்ன செய்வது? தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம்! அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அந்த நிலைதான்! இப்போதே பத்திரிகைகள் எல்லாம் தலைமைச் செயலகம் வெறிச்சோடி கிடப்பதாகவும் அதிகாரிகள் எல்லாம் குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.அது மாத்திரமல்ல, அரசு சார்பில் நாட்டில் நடைபெற்றாக வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இது. அந்தப் பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்றால் தான் ஜூன் மாதத்தில் தொடங்கவிருக்கும் தென்மேற்குப் பருவக்காற்று காலத்தின்போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காகச் செய்திட முடியும். அதிகாரிகள் பராமரிப்புப் பணிகளை ஆய்வு கூட செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளதாம். அதனால் அடிப்படைப் பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளது.மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதன் அமைச்சர்களும் ஐந்தாண்டு காலத்துக்கு அதாவது மீண்டும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை அவர்களது பொறுப்புகளை நிறைவேற்ற தகுதி படைத்தவர்கள். ஆனால் அவர்களின் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது எந்த வகையில் நியாயமோ? சட்டம் படித்தவர்களும் தேர்தல் ஆணையமும்தான் இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக