திங்கள், 11 ஏப்ரல், 2011

Pro L.T.T.E. magazine attacks kalaignar: கருணாநிதி மீது தாக்குதல் தொடுத்துள்ள எல்டிடிஈ ஆதரவு பத்திரிகை

விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதாகத் தவறான தகவல் அந்தஇணைய இதழில் வராத பொழுது அவ்வாறு எழுதியிருப்பது ஏன்? இருப்பவரை இல்லாதவர் எனச் சொல்வதில் அவ்வளவு ஆர்வமா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கருணாநிதி மீது தாக்குதல் தொடுத்துள்ள எல்டிடிஈ ஆதரவு பத்திரிகை







புதுதில்லி, ஏப்.11: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி எம்பி ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக புலிகள் ஆதரவு பத்திரிகை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.கனிமொழியுடன் புலிகளின் மூத்த தலைவர் ஒருவர் தொடர்பில் இருந்து வந்தார். ஆனால் கனிமொழியோ, அவரது தந்தையோ விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை என மேற்குப் பகுதியில் தமிழர்களிடையே வெளியிடப்படும் ஈழமுரசு தெரிவித்துள்ளது.கனிமொழிக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பி.நடேசன் 2008 அக்டோபர் மற்றும் 2009 மார்ச்சுக்கு இடைப்பட்ட காலங்களில் எழுதிய கடிதங்களை அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. மேலும் விடுதலைப் புலிகளுக்கு கனிமொழி எழுதிய 2 பதில் கடிதங்களையும் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது. கருணாநிதிக்கும் நடேசன் ஒரு கடிதம் எழுதியதாகவும், ஆனால் அதற்கு பதில் இல்லை என்றும் அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிவு.காம் இணையதளச் செய்தியின்படி. நடேசனிமிருந்து வந்த கடைசி கடிதம், தந்தையிடமும், மகளிடமும் அவசரகால உதவி கோரி எழுதப்பட்டது. அதில் திமுக அங்கம் வகிக்கும் இந்திய கூட்டணி அரசை வலியுறுத்தி ராணுவ தாக்குதலை நிறுத்த இலங்கையை சம்மதிக்க வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.இந்த நேரத்திலும் கருணாநிதியும், கனிமொழியும் செயல்படவில்லையெனில் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் போரினால் எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்படும் என நடேசன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு நெருக்கடியான அந்த காலகட்டத்தில் நடேசனின் வேண்டுகோளுக்கு உடனடியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை என ஈழமுரசு பத்திரிகை தெரிவித்துள்ளது.ஏப்ரல் 7-ம் தேதி கனிமொழி எழுதிய பதில் கடிதத்தில், விடுதலைப் புலிகள் அவர்களது ஆயுதங்களை கைவிட்டால், மேலும் தனது அறிவுரையை கவனத்தில் எடுத்துக்கொண்டால், அவர்களின் உதவிக்கு இந்திய அரசு வருவதற்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது சாத்தியமில்லை எனில் விடுதலைப் புலிகள் இந்திய அரசுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளலாம் என கனிமொழி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.மற்றொரு கடிதத்திலும் கனிமொழி இதைக் குறிப்பிட்டுள்ளார். 2009-ல் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் போர்நிறுத்தம் கோரி ஏப்ரல் இறுதியில் சென்னையில் கருணாநிதி உண்ணாவிரத நாடகம் இருந்ததாக ஈழமுரசு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்தம் ஒருபோதும் ஏற்படவில்லை. மேலும் மே 3-வது வாரத்தில் இலங்கை அரசால் விடுதலைப் புலிகள் ராணுவரீதியாக ஒடுக்கப்பட்டனர்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் மே மாதம் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் போலீஸ் பிரிவுத் தலைவரான நடேசனும் உயிரிழந்தார்.முதல்வர் என்ற வகையில் கருணாநிதி மீது பெரும் எதிர்பார்ப்புகளை தமிழ் மக்கள் வைத்திருந்தனர். அவர்களுக்கு கருணாநிதி. மரணத்தை பரிசாகக் கொடுத்துவிட்டார். மேலும் ஒரு துரோகியைப் போன்று அவர் நடந்துகொண்டார் செயல்பட்டார் என அந்த பத்திரிகையில் கடுமையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கு புதன்கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விடுதலைப் புலிகளுக்கும், திமுக தலைவர்களுக்கும் இடையே நடந்த கடித பரிமாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக