புதன், 9 மார்ச், 2011

attack on M.P. - condemned by EEzha govt;:நா.உ. மீது தாக்குதல்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கண்டனம்

தமிழ்ஈழப் புற அரசு மட்டும் அல்ல அனைவருமே கண்டிக்க வேண்டும். என்றாலும் இதுதானே சிங்கள இந்தியக் கூட்டுத் திட்டம். எனவே, முன்னிலும் முனைப்பாகத் தமிழ் ஈழத் தேவையை உலகநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!/



எம்.பி. மீது தாக்குதல்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கண்டனம்


கொழும்பு, மார்ச் 8- இலங்கை எம்.பி. ஸ்ரீதரன் மீதான தாக்குதலுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனும் அவரது உதவியாளர்களும் பயணம் செய்த வாகனம் மீது கைக்குண்டுகள் வீசியும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் நடத்தப்பட்ட தாக்குதலை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வன்மையாகக் கண்டனம் செய்கிறது.இத் தாக்குதலில் ஸ்ரீதரனும் அவரது உதவியாளர்களும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரிய வருகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட இடம், விதம் போன்றவை இவர்களைக் கொலை செய்யும் நோக்குடனேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசினால் இயக்கப்படும் ராணுவப் புலனாய்வுக் குழுவினரே இத்தாக்குதலின் பின்னணியில் இருந்திருக்க வேண்டும். இலங்கை அரசின் உயர்பீடத்தின் திட்டத்தின் அடிப்படையிலேயே தாக்குதல் நடத்தியோர் இயங்கியிருக்க வேண்டும். இத்தகைய சந்தேகங்கள் எழுவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.அண்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சக ஆவணங்களும் இலங்கை அரசின் உயர்மட்ட ஆதரவுடன் சட்டத்துக்குப் புறம்பான முறையில் ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இயங்கி வந்ததை அம்பலப்படுத்தியது. இத்தகைய சம்பவங்கள் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று இலங்கை அரசு தொடர்ந்தும் எண்ணுகிறது என்பதை இச்சம்பவத்தின் மூலம் உணர முடிகிறது. அண்மையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அன்னையின் அஸ்தி சிதைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பது சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது. இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த காலம் முதல் ஈழத் தமிழ் மக்கள் மீது சிங்களம் தொடுத்த வந்த போரும், முள்ளிவாய்க்கால் பேரவலமும் ஈழத் தமிழர் தேசத்திடம் மூட்டியுள்ள கோபக்கனலை இத்தகைய சம்பவங்கள் மேலும் கொழுந்துவிட்டு எரிய வைக்கக் கூடியவை.இலங்கை அரசு மீதான போர்க்குற்றம் மற்றும் தமிழர் மீதான இனப்படுகொலை போன்றவை குறித்து அனைத்துலக விசாரணை தேவை என்ற குரல்கள் மேலெழுந்துவரும் சூழலில், மக்கள் பிரதிநிதி ஒருவர் மீதான கொலை முயற்சியும் நடைபெற்றிருக்கிறது. இலங்கை அரசே இந்த குற்றச்செயலுக்குப் பின்னணியில் இருப்பதாக நாம் கருதுவதால் இச்சம்பவமும் அனைத்துலக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோருகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

இலங்கை தமிழனுக்கான முதல் குரல். வரவேற்கிறோம் - தமிழ் சங்கம். டெல்லி
By சதீஷ்
3/8/2011 5:54:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக