வாஷிங்டன்: அமெரிக்காவுக்குச் சென்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் குழுவினரை விமானத்திலிருந்து இறக்கி அமெரிக்க அதிகாரிகள் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவில் நடைபெறும் ராணுவ மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 9 ராணுவ உயர் அதிகாரிகள் அந்நாட்டுக்குச் சென்றிருக்கினறனர். நேற்று காலை வாஷிங்டனில் இருந்து மாநாடு நடைபெறும் தம்பா நகருக்கு அமெரிக்க ஏர்வேஸ் விமானத்தில் செல்லத் தயாராகினர். விமானம் புறப்படத் தயாரானபோது அவர்களை விமானத்திலிருந்து கீழே இறக்கி அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை வாஷிடங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.விமான ஊழியரிடம் ராணுவ அதிகாரிகளுள் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்காகவே அவர்கள் அனைவரும் இறக்கி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த முழு விவரமும் அந்தப் பத்திரிகை செய்தியில் வெளியிடப்படவில்லை.கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் அந்த ராணுவ அதிகாரிகள் அனைவரும் அமெரிக்க அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும், தூதரகத்துடனோ, அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடனோ பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அந்தச் செய்தி கூறுகிறது.அவர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்கிற முடிவுக்கு வந்தபிறகே அவர்களை அமெரிக்க அதிகாரிகள் விடுவித்ததாகவும் தெரிகிறது.இந்தச் சம்பவத்தையடுத்து, பயணத்தை ரத்து செய்துவிட்டு, நாடு திரும்பும்படி அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது. அவர்கள் இன்று பாகிஸ்தான் திரும்புவார்கள் எனத் தெரிகிறது.
கருத்துக்கள்
By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2010 3:41:00 PM
9/1/2010 3:41:00 PM