வியாழன், 14 அக்டோபர், 2010

வியட்நாம் ராணுவத்துக்கு உதவி: இந்தியா முடிவு


வியட்நாமில் உள்ள ஹனோயில் புதன்கிழமை அந்நாட்டு ராணுவம் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி.
ஹனோய், அக்.13: வியட்நாம் நாட்டின் ராணுவத்தை வலுப்படுத்துவதற்கு உதவி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.  வியட்நாம் தலைநகர் ஹனோயில் செவ்வாய்க்கிழமை ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி பங்கேற்றார்.  இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் வியட்நாம் பிரதமர் என்குயேன் தன் துங், பாதுகாப்பு அமைச்சர் புங் குவாங் தாங் ஆகியோரை சந்தித்துப் பேசினார் ஏ.கே. அந்தோனி.  இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் ராணுவத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது.  வியட்நாம் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்த தேவையான அனைத்து உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக ஏ.கே. அந்தோனி தெரிவித்தார்.  வனம் மற்றும் மலைப் பகுதியில் போர்ப் பயிற்சியை இணைந்து மேற்கொள்ளுதல், ராணுவம் தொடர்பான அனுபவம் மற்றும் அறிவை பகிர்ந்து கொள்ளுதல், ராணுவ மையங்களுக்கு இடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதென இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.  இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்பு ஏற்படுத்திக்கொள்ள வியட்நாம் ஆவலாக உள்ளது. இதை இந்தியாவும் வரவேற்றுள்ளது.  குறிப்பாக அந்நாட்டின் கடற்படையை வலுப்படுத்த உதவ தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.  ராணுவத் துறை தவிர்த்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதென முடிவெடுத்துள்ளன.    
கருத்துக்கள்

பெரும் வல்லரசு நாட்டை எதிர்த்து வெற்றி கண்ட வியத்துநாம் அரசு தங்களைப் போன்ற விடுதலை உணர்வு கொண்ட ஈழத்தமிழர்கள் பக்கம் நிற்க வேண்டும். ஆனால், முந்தைய சூழலில் தங்கள் பக்கம் இருக்கும் இந்தியாவின் பக்கம் இருந்து ஈழத்தைஎதிர்ப்பதற்காக இந்தியா உதவியது; உதவுகிறது. எனவேதான் வியத்துநாம் சிங்களத்துடன் கை கோத்தது. மனித உரிமைகளைக் காக்கும் நல்லரசாகத் திகழ வேண்டிய இந்தியா மனித இனங்களை அழிக்கும் வல்லரசாக மாறி வருவதன் விளைவே இது போன்ற ஒப்பந்தங்கள். 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/14/2010 3:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக