ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

ஊழலுக்கு த் துணை போகும் பதவிகள்

உரத்த சிந்தனை :  
ஊழலுக்கு த் துணை போகும் பதவிகள்
எசு.ஏ.சுந்தரமூர்த்தி

மக்கள் வளம் முதல், எல்லா வளமும் நம் நாட்டில் உள்ளது. இந்த வளத்தை, பலத்தால் அடைய வேண்டும் என்று, எத்தனையோ படையெடுப்புகள், இந்தியா மீது துவங்கப்பட்டன. ஒவ்வொரு முறையும் இந்தியா, புதுபொலிவுடன் தன்னைக் காத்துக் கொண்டது.

லட்சக்கணக்கான உயிர்களை இழந்து, ஆங்கிலேயர் ஆட்சியை விரட்டி, மக்கள் கண்ட சுதந்திரம் என்று வர்ணிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் பாலும், தேனும் ஓடும் என்றனர். ஆட்சி மாறியது; ஆனால், காட்சி மாறவில்லை. உலகக் கொள்ளைக்காரன் போய், உள்ளூர் கொள்ளைக்காரர்கள் பலர் வந்து விட்டனர்.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் அடிப்படையில் எல்லாருக்கும், "சம நீதி' என்று நாம் படைத்து, நாமே ஏற்றுக் கொண்ட அரசியல் சாசனம், நம்மை வழிநடத்த துவங்கியது. புனிதமான அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவி வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறும் நிலைக்கு வந்துவிட்டது.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய போது, ராணுவத்திலும், பொது வினியோகத்திலும் உள்ள லஞ்சம் மற்றும் ஊழலை கண்டறிய, "சிறப்பு காவல் அமைப்பு' 1941ல் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், "டில்லி சிறப்பு காவல் அமைப்பு' எனும் பெயரில், உள்துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், நாட்டில் லஞ்சம், ஊழல் குறைய வேண்டும் என்று எண்ணிய அன்றைய பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல், தன் சட்ட ஆலோசகர் கரம் சந்த் ஜெயின் மூலம், டில்லி சிறப்பு காவல் படையை நிர்வகித்து வந்தார்.இந்த, டில்லி சிறப்பு காவல் அமைப்பு, 1963, ஏப்., 1ம் தேதி முதல், மத்திய புலனாய்வு அமைப்பு என்றும், சி.பி.ஐ., என்றும் அழைக்கப்பட்டது.

இப்போது சி.பி.ஐ., இத்தாலி ஆயுத இடைத்தரகன், போபால் விஷவாயுக்கு சொந்தக்காரனை, "யுனைடெட் கார்பைடு' என்று, உலக குற்றவாளிக்கு உதவி வருகிறது. உள்ளூரில் நடக்கும் கொலை, கொள்ளைகளை கண்டறியும், "துப்பறியும் சாம்பு'வாக மாறிவிட்டது சோகத்திலும் சோகம்."ஊழல் ஒழியவே இல்லை. இந்தியா இனி உருப்படாது' என்று சந்தானம் கமிட்டி அறிக்கை சமர்ப்பித்த பின் உருவானது தான், ஊழல் கண்காணிப்பு ஆணையம், 1964ல் ஏற்படுத்தப்பட்டது.
*இது ஒரு ஆலோசனைக் குழு, இதன் முடிவை ஏற்க வேண்டுமா என, முடிவு செய்யும் அதிகாரம் அரசிடமே உள்ளது.
*1,500 துறைகள் (மாநில - மத்திய) ஊழலை கண்காணிக்க, 300 ஊழியர்களுடன் உலா வருகிறது.
*சி.பி.ஐ.,க்கு விசாரணை செய்ய உத்தரவிட்டாலும், வழக்கு விவரங்களை சி.பி.ஐ.,யிடம் கேட்க முடியாத ஆணையம்.
*ஆளும் கட்சியான பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஆணையரை தேர்வு செய்யும் போது, மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சித் தலைவரால் எதிர்ப்பு மட்டுமே காட்ட முடியும். திருடன் கையில் சாவி கொடுத்த கதையாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து, பி.ஜே.தாமசை துரத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு பெற வேண்டி வந்தது. உத்தரவு வந்த பின்பும் நாற்காலியை
காலி செய்யாமல் அடம்பிடித்த புண்ணியவான்.

ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சொத்தை கைப்பற்ற, ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஆனால், பல் பிடுங்கிய பாம்பை பார்த்து, நாம் மகிழ்ந்து கொண்டு இருக்கிறோம்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 324வது ஷரத்து படி அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம், கொள்ளைக் கூட்ட தலைவன் கூட தேர்தலில் நின்றால், ஒன்றும் சொல்லாது. "கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் நிற்கக் கூடாது' என்று அறிக்கை தர அச்சப்படுகிறது. எப்படியோ, தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் சொத்து மதிப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுப் பெறுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின், 148 ஷரத்துப்படி உருவாக்கப்பட்டது தான், இந்தியத் தலைமைத் தணிக்கையாளர் பதவி. மத்திய, மாநில அரசுகளின் வரவு-செலவுகளை தணிக்கை செய்து, ஜனாதிபதியிடமோ, மாநில கவர்னரிடமோ அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

தற்போது, தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராய், 2008ல் தலைமைத் தணிக்கையாளராக பதவி ஏற்றார். இவருக்கு முன், 10 பேர் இந்த பதவியை வகித்துள்ளனர்.அரசுக்கு சாதகமாக இவர்கள் போனதால், பல பல ஊழல்கள் வெளிச் சத்திற்கு வராமல் போய்விட்டன. வினோத் ராய் பதவி ஏற்ற பின், பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.தற்போது கிட்டத்தட்ட, 59 அறிக்கைகளை மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து வருகிறது. தலைமைத் தணிக்கையாளர் தந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டு, விவரம் பெற்று, மத்திய கணக்குக் குழு ஆய்வு செய்து, ஓர் இறுதி அறிக்கை தரும் முன் லோக்சபா, ஆயுள் காலம் முடிந்து விடும். மத்திய கணக்குக் குழுவின் தலைவராக உள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், ஆளும் கட்சியாக மாறிவிடுவர்.
தற்போது, இந்தியத் தலைமைத் தணிக்கையாளராக உள்ள வினோத் ராயின் பதவி காலம், மே. 22, 2014 வரை உள்ளது. அதற்குள் எத்தனை ஊழலை இவர் அம்பலப்படுத்துவார் என்று, ஆளும் கட்சி அரண்டு போய் உள்ளது.

எல்லாத் துறைகளையும் போன்று, நீதித் துறையிலும் ஊழல் வேர் விட்டுள்ளது. நீதித் துறையையும் ஆளும் கட்சி ஆட்டிப் படைக்க முடியும் என்பதை, ஆள் கொணர்வு வழக்கு, 1976ல் உணர்த்தியது. இந்திரா கொண்டு வந்த மிசா சட்டத்தில், "சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையை பறிக்க, அரசுக்கு அதிகாரம் உண்டு' என, நான்கு நீதிபதிகள் கூறினர். தலைமை நீதிபதி ஏ.என்.ராய், பி.என்.பகவதி, யு.வி.சந்திரசூட், எம்.எச்.பெக் ஆகியோர் தான் அவர்கள்.ஆனால், "மிசா' சட்டம் செல்லாது; சிறையில் உள்ள கைதிகளின் அடிப்படை உரிமையில் அரசு தலையிட முடியாது' என்று, நீதிபதி எச்.ஆர்.கன்னா மட்டும் கூறினார். இந்திராவின், "மிசா' சட்டத்திற்கு எதிராகத் தனிப்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மூப்பின் அடிப்படையில், இந்தியாவின் தலைமை நீதிபதியாக வரவேண்டிய அவருக்கு வாய்ப்பு தராமல், ஜன., 29, 1977ல், எம்.எச்.பெக் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

எனவே, தன் பதவியை கன்னா, ராஜினாமா செய்தார். அவர் தலைமை நீதிபதியாக இருந்திருந்தால், ஜூலை.2, 1977 வரை, பதவியில் இருந்து இருப்பார். "மிசா' சட்டத்தை எதிர்த்த எச்.ஆர்.கன்னா தலைமை நீதிபதியாக வருவதை, இந்திரா விரும்பவில்லை.இந்திராவுக்கு சாதகமான அடிப்படையில் தீர்ப்பு கூறிய பிற நீதிபதிகள் எல்லாம், இந்தியாவின் தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்துச் சென்றனர்.

இந்திய ஜனாதிபதிக்கு இணையாக உள்ள தலைமை நீதிபதி, தன் மருமகன்கள் பெயரில் சொத்துகளை குவித்தபின், இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியை அலங்கரிப்பது என்பது, நம் நாட்டில் மட்டுமே முடியும்.மதுரையில் வெடிகளை வைத்து, "பல்லவ மன்னன்' போல கல்லை எல்லாம் குடைந்து விட்டனர். ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல், இது நடந்து இருக்குமா? மலையை காணவில்லை எனவும், குளத்தை காணவில்லை எனவும் எப்.ஐ.ஆர்., போட வேண்டிய நிலை."எல்லா வளமும் போய் சேரும் வெளிநாட்டில்... நாம் கையை நக்க வேண்டும் உள்நாட்டில்...'
இ-மெயில்: asussusi@gmail.com

எசு.ஏ.சுந்தரமூர்த்தி வழக்கறிஞர்  -தினமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக