வியாழன், 4 அக்டோபர், 2012

தமிழக அரசியல்வாதிகளுக்கு ச் சிங்கள த் தளபதி அறை கூவல்: திசம்பர் மாதம் 45 பேரை ப் பயிற்சிக்கு அனுப்புகிறோம்- முடிந்தால் தடுத்து ப் பாருங்கள்

தமிழக அரசியல்வாதிகளுக்கு ச் சிங்கள த் தளபதி அறை கூவல்: திசம்பர் மாதம் 45 பேரை ப் பயிற்சிக்கு அனுப்புகிறோம்- முடிந்தால் தடுத்து ப் பாருங்கள்
தமிழக அரசியல்வாதிகளுக்கு சிங்கள ராணுவ தளபதி சவால்: டிசம்பர் மாதம் 45 பேரை பயிற்சிக்கு அனுப்புகிறோம்- முடிந்தால் தடுத்து பாருங்கள்
சென்னை, அக். 4-

ஈழத்தில் நடந்த போரின் போது சுமார் 1 1/2  லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். லட்சக் கணக்கான தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டதால், இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள ஈழத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இடம் பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வு பற்றி கண்டு கொள்ளாத சிங்கள அரசு, தன் ராணுவ அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பி நவீன பயிற்சிகளை பெற்று வருகிறது.

இதற்கு தமிழக அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டுக்கு பயிற்சிக்கு வந்த ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப வைத்தனர். என்றாலும் எதிர்வரும் மாதங்களில் தமிழகத்தில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி இந்த பயிற்சி கொடுக்கப்படும் என்று இந்தியாவும் இலங்கையும் கூறி வருகின்றன.

அதை உறுதிபடுத்தும் வகையில் சிங்கள ராணுவ தளபதி ஜகத் ஜெயசூரியாவும் ஆணவமாக பேசி உள்ளார். இலங்கை ராணுவத்தின் 63-வது ஆண்டு நிறைவையொட்டி நேற்று அனுராத புரத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் கூறியதாவது:-

யுத்தத்தின் பின் தீவிர வாதத்தை எமது நாட்டில் இருந்து முழுமையாக அகற்றியுள்ளோம். இந்த யுத்தத்தில் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாகவே உள்ளோம். இதன் அடிப்படையிலேயே இந்திய ராணுவத்தினருடன் இணைந்து கூட்டுப்பயிற்சிகளை இலங்கை ராணுவம் அண்மையில் நடத்தியது. இந்தியாவில் சுமார் 800 இலங்கை ராணுவ வீரர்கள் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர்.

அதே போன்று இந்திய ராணுவ வீரர்களும் இலங்கையில் குறிப்பிட்ட சில தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். எமக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக நெருங்கிய புரிந்துணர்வு உள்ளது. ஆனால் தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான சில குரல்கள் ஒலிக்கின்றன. இது குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

ஏனெனில் இந்தியாவின் ஒரு சிறிய பகுதிதான் தமிழகம். இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்புகளுக்கு இந்த சிறிய பிரதேசம் சவாலாக அமையாது. தமிழக அரசியல் வாதிகளுக்கு நாமே தகவல் தருகிறோம். எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை சிறப்பு படை அணியை சார்ந்த 45 உயர் அதிகாரிகள் பயிற்சிக்காக இந்தியா செல்ல உள்ளனர். முடிந்தால் தடுத்துக் கொள்ளட்டும்.

இவ்வாறு இலங்கை ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக