திங்கள், 25 ஜூலை, 2011

இலங்கைத் தேர்தல்: வட பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி

இலங்கைத் தேர்தல்: வட பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி

First Published : 25 Jul 2011 01:24:00 AM IST


கொழும்பு, ஜூலை 24: இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வட பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இது விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சியாகும்.  தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கை வட பகுதியில் இக் கட்சி 18 மாகாண சபைகளை கைப்பற்றியது; ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வட பகுதியில் 2 மாகாண சபைகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.  இலங்கையில் மொத்தம் உள்ள 65 மாகாண சபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.  வட பகுதியில் மொத்தம் உள்ள 26 மாகாண சபைகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் 18 மாகாண சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. மற்றொரு தமிழ் அமைப்பான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) இரண்டு மாகாண சபைகளையும், ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2 சபைகளையும் கைப்பற்றி உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இத்தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.  இக்கட்சியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா ராஜபட்ச அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இதனால்தான் வட பகுதியில் இரு மாகாண சபைகளை ராஜபட்ச கட்சி பெற முடிந்தது.  தேசிய அளவில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 45 மாகாண சபைகளை கைப்பற்றி உள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான மாகாண சபைகளில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டவர்கள் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.  இத்தேர்தலில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன.  குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி ஆகிய கட்சிகள் ஒரு மாகாண கவுன்சிலைக்கூட கைப்பற்றவில்லை.  ஆனால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான வீரசிங்கம் ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 2 மாகாண சபைகளைக் கைப்பற்றி உள்ளது.  இத்தேர்தலில் ரஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 512 இடங்களிலும்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பு 183 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. அதுபோல்  முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 137 இடங்களிலும் ஜேவிபி 13 மற்றும் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  தேர்தல் குறித்து இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே கூறுகையில்,  இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. மொத்தம் 2,200 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடந்தது. ஒருசில சிறிய சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக