வியாழன், 27 ஆகஸ்ட், 2009


கொத்துக் கொத்தாக கொன்றொழிக்திட்டார்!
நித்தமெம் தமிழர் செத்தழிகின்றார்!
சத்தமின்றி சுத்துதம்மா வெற்றுப் பூமி!
பித்தமேறி களிக்கிறது பௌத்தசேனையங்கே!
வஞ்சமறியாப் பிஞ்சுகளை வஞ்சனையாய்க்கொன்றுவிட்டு
வெஞ்சினப்பகை முடித்தோமென கொக்கரிக்கும் சிங்களம் பார்!

செத்துப் போன புத்தருமே
செத்துப்போன பௌத்தமெண்ணி
குருதிகொட்டுகின்றார் விழியோரம்!
ஊறு உயிர்க்கு நேரா நெறி தந்த பௌத்தம்
நரபலியெடுத்துக் குருதி குடிக்கக்கண்டு
கண்மூடிகிடக்கின்றார் விழிதிறக்க விரும்பாமல்!

“பித்தர் கூட்டமாய் அழுது புலம்பியே
உலக வீதியெங்கும் கத்தித் திரியும்
சொத்தைத் தமிழன் என்ன செய்வான்
நாதியற்ற ஈழத்தமிழரின் உயிரை
சத்தமின்றி நாமிங்கு பறிக்கின்?”
கிள்ளுக்கீரைகளாய் கிள்ளியள்ளி வீசுகின்றான்
கேட்கவிங்கு யாருமின்றி!
மெத்ததுணிவுகொண்டே எம் இனமழிக்கின்றார்;!
செத்தான் தமிழன் என களியாட்டமாடுகின்றான்!


சொந்தச் சகோதரர்கள் சாதல் கண்டும்
சிந்தை இரங்கான் தமிழன் என
கனவுகண்டோரே..
ஈழத்தில் நீரிட்ட தீ
தமிழகத்திலும் ஜெனிவாவிலும்
உன் முகத்திரை கிழித்துக் காட்ட
எரியுண்ட தமிழரில் தெரிந்ததை மறந்தீரோ?

நான்கு சுவருக்குள் நசுக்கிட
நாதியற்றவனா தமிழன்?
அற்பப் புழுவென
அடித்து நொருக்க
வேடிக்கைப் பார்த்திருக்கும்
ஈனச்சாதியரோ நாம்?
எட்டுக்கோடியாய் திக்கெட்டும்
உள்ளவர் நாம்!
வாய் திறவா சர்வதேசம் பற்றி கவலை எமக்கில்லை
சர்வதேசமாகவே நாம் உள்ளோம்
நம்மவர்க்காய் குரல் கொடுக்க!

வீதிதோறும் இறங்குகிறோம்…
விதியை மாற்ற எழுகின்றோம்..
வடியும் கண்ணீரை எம் புறங்கைகள் துடைக்கட்டும்!
விடியும் பொழுதுக்காய் எம் தோள்கள் புடைக்கட்டும்
இணைந்த கைகள் ஒன்றாக
நீண்டுநிற்கும் மனிதச்சங்கிலி பார்..
தனி தமிழன் இனி இல்லை!
தோப்பாய் திரண்டெழுவர் தேசங்கள் தோறும்
செந்தமிழர் உயிர்காக்க!


புறப்படு தமிழா புறப்படு!
புதுவிதி எழுத புறப்படு!
“வீதிநாம் வந்தும் வந்தாரில்லை
விழுதுநாம் அழுதும் கைதந்தாரில்லை
மனிதம் விழித்தெழ நினைக்குதுமில்லை
இனிநாம் வாழ வழியெதுமில்லை”
வீடுகளுக்குள் முடங்கி
அழுது வடிப்போரே..
போதும் போதும்…
வெற்றுக்கதை பேசி செயலிழந்து நின்றது போதுமினி!


சோர்வில் துவண்டு
செத்தொழிந்ததும் போதும்!
சாவிலும் வாழும் மறத்தழிழர் நாமாவோம்!
சாகும் வரை போராடும் தற்துணிவு கொள்வோம்!
மனிதம் தாள் திறக்கும் வரை
மானுடத்தின் குரலெழுப்பி
மனசாட்சிகளின் கதவுகளை தட்டிப்பார்ப்போம்
திறவாத கதவுகள் மூடியேகிடக்கட்டும்!
திரைகள் திறந்து நீதி சிறையுடைக்கட்டும்!
கொட்டமிடும் அநீதியின் முன் நீதிக்கே இறுதி வெற்றி!

காலம் காலமாக சொல்லிச் சென்றன
உலகசரிதங்கள்....
நீதி நிச்சயமாய் வெல்லும்
அதுவரை
உறங்காமல் உழைத்திடுவோம்..
சத்தியராய் வாழும் சரித்திரநாயகரின்
வீரச்சாவுகள் உயரிய பொருள் சொல்பவை!
சித்திபெறச்செய்வோம் நித்தியநாயகர்
சிந்தை நிறை கனவுகளை..
சத்தியம் செய்வோம் நீதியை
வென்றெடுக்க
நித்தம் உழைப்போமென்று!


வீழ்வது நாமாயினும் வாழட்டும் நம்மினமிங்கு
வாழ வழி தேடி மடிவிலும் வாழும்
ஈழவர் வாழ விடியலுக்காய்; நாம் உழைப்போம்!
விழி துடைத்துப் புறப்படுடா தமிழா
வுழிகாண புறப்படு!
உறங்கிக் கிடந்தது போதுமினி
உறவைக்காக்க புறப்படு!
தலை நிமிர்ந்த தமிழனாய்
விடுதலைக்காக குரல்கொடு!
விடியலும் ஒரு நாள் வருமென நம்பு
துயரம் துடைத்து நிமிர்வோம் நம்பு
அழ அழ நாம் அழ அழுந்தமிழன்றோ?
எழு எழு நீ எழு எழும்தமிழினமாய்!

தமிழ்மகள்
சிவவதனி.பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக