திங்கள், 31 டிசம்பர், 2012

முயலும் ஆமையும் பிடிக்கும்; முயலாமை பிடிக்காது'

முயலும் ஆமையும் பிடிக்கும்; முயலாமை பிடிக்காது'

சோர்ந்து விடாதே பிறையே, உன்னுள் தான் பூரண சந்திரன் புதைந்து கிடக்கிறான்' என்னும் வைர வரிகளுக்கு ஏற்ப, பார்வையற்ற வாலிபர் சந்திரசேகரன், படித்து பட்டம் பெற்றதுடன், வேலை இல்லையே என்று வெட்டி கதை பேசாமல், சோம்பலைச் சுடும் தீயாய் மாறி, சுய தொழிலில் ஈடுபட்டுள்ளார். ரயில்களில் பொருட்கள் விற்பதுடன், நடைபாதைகளில் வசிக்கும் பார்வையற்றோருக்கு என, "அகதீப ஒளி அறக்கட்டளை' என்ற அமைப்பை தண் டுரையில் துவங்கி, நடத்தியும் வருகிறார். அவரிடம் உரையாடியதில் இருந்து...

உங்கள பத்தி சொல்லுங்களேன்?

கரூர் அடுத்த சூளபுரம் என் சொந்த ஊர். குடும்பத்தில் நாங்க மொத்தம் ஐந்து பேர் . நான் மூன்றாவது பிள்ளை. மற்றவர்களை காட்டிலும், எனக்கு வீட்டில் செல்லம் அதிகம்.கரூரில் பள்ளி படிப்பு. பரமத்தி வேலூரில் பட்ட படிப்பு முடித்தேன். எங்களை போன்றோர் படிப்பதற்கு, சென்னையில் வசதிகள் இருப்பதால், எம்.ஏ., படிக்க இங்கு வந்தேன்.தற்போது, தமிழில், எம்.ஏ., - எம்.பில்., - பி.எட்., முடித்துள்ளேன். எல்லாமே, "மெரிட்'ல தான் கிடைச்சது. போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டிருப்பதால், சென்னையிலேயே தங்கிட்டேன்.

உங்களை போன்றோருக்காக அறக்கட்டளை துவங்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?


ஒரு நாள், ரயில் நிலைய நடைபாதையில் வசிக்கும், என் போன்ற பார்வையற்றவர்களை சந்தித்தேன். அப்போது, அனைவரும் சேர்ந்து ஒன்றாக தங்கி, சுய தொழில் செய்யலாம்; நம்மை போன்ற பிறருக்கும் உதவலாம் என்று அவர்களிடம் சொன்னேன்.அவர்களும் சம்மதிக்க, இன்று ஓரளவு வளர்ந்து நிற்கிறது, "அகதீப ஒளி' அறக்கட்டளை.கடந்தாண்டு முதல், பார்வையற்ற மாணவர்களுக்கான சதுரங்க போட்டிகளையும் நடத்தி வருகிறோம்.

தற்போது, உங்களுக்கு போதுமான வருமானம் கிடைக்கிறதா?


சிரமம் தான். மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து, ரேஷன் கார்டு கவர், டார்ச் லைட், கடலை மிட்டாய் மற்றும் அந்தந்த பருவத்திற்கேற்ற பொருட்களை வாங்கி வந்து, ரயில்களில் விற்பனை செய்கிறோம். 1,000 ரூபாய்க்குவிற்றால், 200 ரூபாய் கிடைக்கும்.

சில நேரங்களில், வியாபாரமே இருக்காது. தினமும், ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பாக, 30 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், கட்டாயப்படுத்த மாட்டோம். எது எப்படி இருந்தாலும், இரவு, 9:00 மணிக்கு வீடு வந்து சேர்ந்து விடுவோம்.

ரயிலில், உங்களுக்கு என்ன விதமான அனுபவங்கள் கிடைத்தன?

சில நேரங்களில், "இதுங்கெல்லாம், வீட்டுல கெடந்தா என்ன? ரயில்ல வந்து, இத வாங்கு, அத வாங்குன்னு உயிரெடுக்குதுங்க' என,பயணிகள் திட்டுவார்கள்.சிலர் அலுத்து சலித்துக் கொள்வார்கள். பல சமயங்களில் ரயில்வே போலீசார், பொருட்களை பிடுங்கி வீசிய சம்பவங்களும் நடந்ததுண்டு. அப்போது, மனசு ரொம்பவலிக்கும். எந்த தொழிலில் தான் இடைஞ்சல் இல்லை என, என்னை நானே தேற்றிக் கொள்வேன்.

உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன?

தகுதி தேர்வில் வெற்றி பெற்று, ஆசிரியர் ஆவதற்காக என்னை தயார்படுத்திகொண்டிருக்கிறேன். ஆசிரியர் ஆனவுடன், கிடைக்கும் வருமானத்தில், பார்வையற்றவர்களுக்கு, தொழிற்
பயிற்சி அளிப்பதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்குவேன்.

பிடித்த, பிடிக்காத விஷயங்கள்?
பாரதிதாசன் கவிதைகள், பட்டிமன்றங்கள் கேட்பதில் அதிக ஆர்வம் உண்டு. இது தவிர, எனக்கு பழைய கதைகளில் வரும் முயலும், ஆமையும் ரொம்ப பிடிக்கும்; ஆனால், முயலாமை தான் பிடிக்காது.

தகுதி தேர்வில் வெற்றி பெற்று,ஆசிரியர் ஆவதற்காக என்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறேன். ஆசிரியர் ஆனவுடன், கிடைக்கும் வருமானத்தில், பார்வையற்றவர்களுக்கு உதவுவேன்!
ந்திரசேகரன் "அகதீப ஒளி அறக்கட்டளை' நிறுவனர்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக