புதன், 8 ஜூன், 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை: மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை

தமிழக அரசிற்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். வெற்றியில் பெரும்பங்கு வகித்த தமிழ் உணர்வாளர்களை மதித்தும் மனித நேய அடிப்படையிலும் துணிந்து இத்தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வருக்கும் பாராட்டுகள். தமிழ் ஈழத்தை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என ஒரு தீர்மானமும்  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


இலங்கை மீது பொருளாதாரத் தடை: 
மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை
First Published : 08 Jun 2011 01:09:23 PM IST

சென்னை, ஜூன் 8- இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது:இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. எனவே, போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐநா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.  இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

+++++++++++++++++++++
  இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும்; சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம்
சென்னை, ஜூன். 8-
 
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-
 
தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
 
இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படு வதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.
 
பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.
 
இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.
 
எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இதையடுத்து இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் உரைக்கு பிறகு தீர்மானம் நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக