புதன், 1 டிசம்பர், 2010

தி.மு.க.வைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: இல. கணேசன்

தி.மு.க.விற்கு மாற்றாக எந்தக் கட்சியையும் தம்மைத் தகுதிப்படுத்தாத சூழலில் இருப்பனவற்றுள் மேல் எனத் தி.மு.க.தானே முதன்மையுறும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் 
ஓரணியில் திரள வேண்டும்: இல. கணேசன்

சென்னை, நவ. 30: வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் வேண்டுகோள் விடுத்தார்.இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:திமுக அரசை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. நெருக்கடிநிலை அமலில் இருந்த போது  கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன. அதுபோல இப்போது நடந்தால் தான் திமுகவை தோற்கடிக்க முடியும்.எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால்தான் போக்குவரத்து தொழிலாளர் சங்கத் தேர்தலில் திமுகவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.சாதிப் பெயரைச் சொல்லி ஸ்பெக்ட்ரம் ஊழலை திசை திருப்பும் முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டு வருகிறார். ஆரியம் - திராவிடம் என்ற வராலற்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட சித்தாந்தத்தைக் கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியும் இனி தமிழகத்தில் எடுபடாது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றத்தை பாஜக உள்ளிட்ட கட்சிகள் முடக்கி வருகின்றன.நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே பிரதமர் உள்ளிட்ட செல்வாக்கு மிக்கவர்களையும் விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர முடியும். பொதுக்கணக்கு குழுவுக்கு அந்த அதிகாரம் இல்லை. உண்மை வெளிவந்து விடும் என்பதால் தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் தயக்கம் காட்டுகிறது.விரக்தியில் இருந்த நாட்டு மக்களுக்கு பிகார் தேர்தல் முடிவுகள் நம்பிக்கையைத் தந்துள்ளது. இது 2014 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது.பிகார் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தெரிய வந்தது. அதுபோல தமிழகத்திலும் அக்கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு தெரிய வரும்.தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் பிர்சனைகளை சந்தித்து வரும் நிலையில் மழைக் காலங்களில் வீணாகும் நீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையைத் தருகிறது. தமிழகத்திலும் தடுப்பணைகள் அமைத்து மழை நீரை சேமிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் அமைத்து வீதிகளில் ஓடும் மழை நீரை சேமிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவதுபோல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரசார யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.யாத்திரையின் நிறைவாக 2011 ஜனவரி 29-ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் இல. கணேசன். பேட்டியின்போது பாஜக மாநில துணைத் தலைவர்கள் டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன், திருமலைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக