வியாழன், 18 நவம்பர், 2010

ங்கும் இங்குமாகப் பலர் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வியை உதயை வீரையன் தினமணி மூலம் அருமையாகக் கேட்டுள்ளார்.  வ்ல்லரசின் கைப்பொம்மையாகச் செயல்படும் அமைப்பை எவ்வாறு பன்னாட்டு அவை என்று சொல்ல முடியும். செல்வாக்கு உள்ளவர்களின் சொல்வாக்கிற்கேற்ப முடிவெடுக்கும் ஓர்
அமைப்பை எவ்வாறு அனைத்து நாடுகளின் அமைப்பாகச் சொல்ல முடியும்.   ஈழததில் படுகொலை புரிந்த பொழுது  அதைத் தடுத்து நிறுத்த வேண்டியவர்களுடன் இணையாமல் கொலைகாரக் கூட்டணியுடன் இணைந்த கொடுங்கோலர் பொறுப்பில் இருந்தும் யாராலும் தட்டிக்  கேட்காமல்   இருந்த அமைப்பபை எவ்வாறு  உலக அமைதிக்கான அமைப்பாகக்கூற முடியும்?  ஒபாமா வருகையின்  பொழுது மட்டுமல்ல, மாவீரர் நாள் நெருங்குவதற்கு முன்பும் ஆனச் சரியான காலத்தில் வந்துள்ள அருமையான கட்டுரை.இதனை வெளியிட்டுத் தன் உணர்வையும் வெளியிட்டு்ள தினமணிக்குப் பாராட்டுகள். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்


ஐ.நா. மன்றம் அவசியமானதா?


ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்த இடம் அளிக்கப்பட வேண்டும்; இதற்கு அமெரிக்கா ஆதரவு தரும்...'' என்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியளித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தாற்காலிக இடம்பெற்றுள்ள இந்தியாவுக்கு இது ஆறுதலான செய்திதான். ஆனால், உலக அமைதிக்கு இந்த அவை உருப்படியாக ஏதாவது செய்திருக்கிறதா?இப்படி ஒரு கேள்வி எழுவதற்குக் காரணம் என்ன? உலகெங்கும் வாழும் மக்களிடம் சில நேரங்களில் இப்படி ஒரு கேள்வி எழுவதற்குக் காரணம் இருக்கிறது. உலக அமைதிக்காகவும், மனித உரிமைக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் அதைச் செயல்படுத்த இயலாதபோது அதற்கு என்ன மரியாதை இருக்கும்?அமெரிக்க ஏகாதிபத்திய நாடு ஆப்கானிஸ்தான்மேல் படையெடுத்தபோதும், இராக்மேல் படையெடுத்து அதன் அதிபரை அநியாயமாகக் கைது செய்து, விசாரணை என்ற பெயரால் மரண தண்டனை விதித்து தூக்குமேடை ஏற்றியபோதும் இந்த அவை வேடிக்கையே பார்த்துக் கொண்டிருந்தது.இலங்கையில் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்தபோதும், மூன்று லட்சம் பேரை முள் வேலிக்குள் போட்டு சித்திரவதை செய்கிறபோதும் ஐ.நா. அவையும், அதன் பொதுச் செயலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, "இந்த ஐ.நா. அவை எதற்காக இருக்கிறது?' என்ற கேள்வி எழுகிறது.இந்த உலகம் இரண்டு உலகப் போர்களைக் கண்டுவிட்டது; அதன் விளைவுகளையும் உணர்ந்துவிட்டது. முதல் உலகப் போரின் முடிவில் "சர்வதேச சங்கம்' அமைக்கப்பட்டது. அது ஒழுங்காகச் செயல்படாததால்தான் இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டது. அதன் முடிவின் தொடக்கமாகவே 1945 அக்டோபர் 24 அன்று ஐ.நா. அவை உதயமானது. இரண்டாம் உலகப் போர் மக்களுக்கு அளவற்ற துன்பங்களையும், இழப்புகளையும் கொண்டு வந்தது; இந்தப் போரில் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்; 4 திரில்லியன் டாலர்கள் பொருள்சேதம் ஏற்பட்டது; ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மற்ற கண்டங்களிலும் எண்ணற்ற நகரங்களும், கிராமங்களும் தரைமட்டமாக்கப்பட்டன; மனித மேதைமையின் மாபெரும் படைப்புகள் அழிக்கப்பட்டன. பல லட்சம் மக்கள் காயம், நோய் நொடிகள், பட்டினியால் வாடினர். ஹிட்லரால் உருவான இரண்டாம் உலகப் போருக்கு மனிதகுலம் தந்த விலை எழுத்தில் அடங்காதது. சோவியத் யூனியன் 20 மில்லியனுக்கும் அதிகமானோரைப் பறிகொடுத்தது; அமெரிக்கா 4 லட்சம் பேரையும், பிரிட்டன் 3 லட்சத்து 70 ஆயிரம் பேரையும் இழந்தது. ஜெர்மன் தரப்பில் 13.6 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர்; காயம் அடைந்தனர்; சிறைப்பிடிக்கப்பட்டனர். இதன் ஐரோப்பியக் கூட்டு நாடுகளின் தரப்பில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஜப்பானின் இழப்பு வரலாறு மறக்காதது. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 அன்று ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்டன. ஒரே நொடியில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரைச் சாம்பலாக்கியது; 1,56,555 பேரை முடமாக்கியது. 1945 நவம்பர் 20 முதல் 1946 அக்டோபர் 1 வரை நியூரென்பர்கில் சர்வதேச ராணுவ டிரிப்யூனலில் முக்கிய ராணுவக் குற்றவாளிகளின் மீது நீதி விசாரணை நடந்தது. இது ஆக்கிரமிப்பை மிகக் கொடுமையான சர்வதேசக் குற்றமாக அறிவித்தது; நியாயமாகத் தண்டித்தது. நியூரென்பர்க் டிரிப்யூனலின் தீர்ப்பில் காணப்படும் சர்வதேச உரிமை பற்றிய கோட்பாடுகளை ஐ.நா. சங்கப் பொதுச்சபை உறுதிப்படுத்தியது. இதன்மூலம், ஆக்கிரமிப்புப் போரும், மனிதகுலத்துக்கு எதிரான போர்க் குற்றங்களும் மிகக் கொடுமையான சர்வதேசக் குற்றமாகும் என்று ஐ.நா. அவை அறிவித்தது. இந் நிறுவனம் தோன்றிய உடனே மனித உரிமைகளை வரையறை செய்ய பொருளாதார, சமூகக் குழுவின்கீழ் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சர்வதேச மனித உரிமைகள் மசோதாவை வரைந்தது. அதனை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1948 டிசம்பர் 10 அன்று ஏற்றுக்கொண்டது. "மனித உரிமைகள் பொதுப் பிரகடனம்' அனைத்து நாடுகளும் ஏற்று நடக்க வேண்டிய ஒன்றாகும். 1993-ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மீதான உலக மாநாடு, உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மனித உரிமைகள் மீறலால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கருத்தில் கொண்டது. அந்த மாநாடு வியன்னா பிரகடனம் ஒன்றையும், செயல்திட்டம் ஒன்றையும் ஏற்றுக்கொண்டது. அதன்படி மனித உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும் பன்னாட்டு மக்களின் தார்மிகப் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டது. ஐ.நா.வின் மனித உரிமைகள் பொதுப் பிரகடனம் 30 விதிகளில் குறிப்பிட்டுள்ள உரிமைகளைக் குடியியல், அரசியல் உரிமைகள் என்றும், பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். குடியியல், அரசியல் உரிமைகள் இக்கால மக்களாட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவ்வுரிமைகளைப் பாதுகாப்பது மக்களாட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. வாழ்க்கை, சுதந்திரம், தனிமனிதப் பாதுகாப்பு உரிமைகள், அடிமைத்தனம், சித்திரவதையிலிருந்து விடுதலை, சட்டத்தின் முன் சமத்துவம், சட்டத்துக்குப் புறம்பான கைது, சிறையீடு அல்லது நாடு கடத்துதலுக்கு எதிரான பாதுகாப்பு, நியாயமான விசாரணை என இந்த உரிமைகள் தொடர்கின்றன. இத்தனை மனித உரிமைகளையும் காலிலே போட்டு மிதிக்கும் இலங்கை அரசு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை; எச்சரிக்கைகள் மட்டுமே பலன் தந்துவிடுமா? ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் எல்லாம் முடிந்த பிறகு கொழும்பு சென்றார். ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டார். அவர் சென்றபோது தென்பகுதியில் சிங்களர்கள் "வெற்றி விழா' கொண்டாடிக் கொண்டிருந்தனர். வடக்கே தமிழ் மக்கள் முள்வேலிக்குள் அடைபட்டு, போதிய உணவு, மருந்து, தண்ணீர் இன்றி வேதனையின் விளிம்பில் இருந்தனர். இதேபோன்று ருவாண்டா, போஸ்னியா, காஸô மற்றும் டாவூரில் இனப்படுகொலை நடந்தபோதும் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. இதனால் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். ஆண், பெண், குழந்தைகள் என்று வேறுபாடு இல்லை. எஞ்சியோர் உயிர் பிழைப்பதற்காகவே இடம்பெயர்ந்தனர். ஐ.நா. அமைப்பு ஒருசில நாடுகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிப் பாதுகாப்பு அவையில் விவாதிப்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டுவர விரும்பியபோது சீனா அதன் "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாகக் கூறி அதனைத் தடுத்துவிட்டது. பாதுகாப்பு அவையில் 5 நிரந்தர உறுப்பினர்களும், 10 சாதாரண உறுப்பினர்களும் இருக்கின்றனர். அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நிரந்தர உறுப்பு நாடுகளுக்கே "வீட்டோ' அதிகாரம் உள்ளது. பெரிய சோஷலிச நாடு என்று சொல்லிக்கொள்ளும் சீனா இனப்படுகொலையை ஆதரிக்கிறதா? ஐ.நா. மனித உரிமை அவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 16 நாடுகள் கையொப்பமிட்டால்தான் ஒரு தீர்மானம் விவாதிக்க முடியும் என்பது விதி. இலங்கையில் இருதரப்பும் இழைத்த போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுவிட்சர்லாந்து கொண்டுவந்த தீர்மானமும் கைவிடப்பட்டது. இதற்கு மாறாக இலங்கை முன்மொழிந்த தீர்மானம் 20 - 12 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜப்பான் உள்பட 6 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இலங்கை அரசைப் பாராட்டி ஐ.நா. மனித உரிமை அவை நிறைவேற்றிய தீர்மானம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. "இந்த முடிவு ஏமாற்றத்தைத் தருகிறது; இது மனித உரிமை அவையின் கையாலாகாத் தன்மையைக் காட்டுகிறது' என மன்னிப்பு சபை சாடியுள்ளது, "ஐ.நா. மனித உரிமை அவை படுதோல்வியைச் சந்தித்துள்ளது' என்று லண்டன் மனித உரிமை கண்காணிப்பகத்தின் இயக்குநர் கூறியுள்ளார். இந்த இனப்படுகொலையை முற்போக்கு முகாமைச் சேர்ந்த சீனா, ரஷியா, வியட்நாம், கியூபா முதலிய இடதுசாரி நாடுகள் ஆதரித்து வருவதையே உலகம் வேதனையோடு விமர்சனம் செய்கிறது.இவர்களுக்கு மானிட விடுதலை பற்றி அக்கறையே இல்லையா? சொந்த நாட்டின் சுயநலத்தில் அடங்கிவிட்டார்களா? மனித உரிமை பற்றியும், உலக அமைதி பற்றியும் பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?  இந்தியாவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. 'காந்தியம்' என்பதும் "ராஜீவ் காந்தியம்' எனக் குறுகிப் போய்விட்டது. இந்திய நாடு இலங்கையை ஆதரித்து நிற்பது ஒன்றும் வியப்பல்ல. "இந்தியாவின் போரை இலங்கை நடத்தியது' என இலங்கை அதிபர் ராஜபட்ச வெளிப்படையாகவே பேசியுள்ளார். இந்தியா இதனை மறுக்காமல் பெருமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதில் யாருக்கும் வெட்கமில்லை. மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாகவும் இருக்க வேண்டும். அதுபோல உலகத்தின் அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஐ.நா. அவை வலிமைமிக்கதாக இருக்க வேண்டாமா? இல்லாவிட்டால் மூன்றாவது உலகப் போரை உலகம் சந்திக்கும்.  அதன்பிறகு மனித இனமே இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக