திங்கள், 18 அக்டோபர், 2010

மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை: முதல்வர் கருணாநிதி

மாமல்லபுரம் அருகே பட்டிபுலத்தில் பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் சிற்பங்கள் செதுக்கும் பணிகளுக்கான உளியை வழங்குகிறார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.
காஞ்சிபுரம், அக். 17: மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை. நம் கலாசாரத்துடன் அக் கலையை வளர்க்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என தமிழக முதல்வர் மு.கருணாநிதி பேசினார்.  ÷மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் கிராமத்தில் பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும் பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  ÷பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியது:  ÷எனது நண்பரும், விடுதலைப் போராட்ட வீரருமான சுப்பிரமணியத்தின் மகன் பத்மா சுப்பிரமணியன், இந்த அறக்கட்டளையை நிறுவி உள்ளார். இந்த இடத்தில் "பரதமுனி நாட்டியாலயம்' என்பதை உருவாக்க ஜெயலலிதா ஆட்சியில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.  ÷தமிழ் கலாசாரப் பெருமையை நாங்கள் என்றைக்கும் விட்டுக் கொடுத்தது கிடையாது. இச் சூழ்நிலையில் எங்கள் ஆட்சி வந்தவுடன் அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டதால் நீதிமன்றம் சென்றார் பத்மா சுப்பிரமணியன்.  ÷நான் அவரிடம், "நீதிமன்ற வழக்கு தேவையில்லை. நாம் சமாதானமாக சென்று விடுவோம். நீங்கள் பரதமுனி பெயருடன் இளங்கோவடிகள் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றேன்.  ÷அவரும் "பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையம்' என்ற பெயரில் அறக்கட்டளையை பதிவு செய்துள்ளார்.  ÷நாட்டியம் என்பது மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு கலை. அக் கலையை வளர்க்கும் முயற்சிக்கு நானும் ஒரு கலைஞன் என்ற முறையில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். எங்கள் அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும்.  ÷நானும், பத்மா சுப்பிரமணியமும் கலைக் குடும்பம் என்ற வகையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர் வெளிநாடுகளில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ÷அவர் தொடங்கியுள்ள இந்த ஆராய்ச்சி மையம் உலக அளவில் சிறந்து விளங்கி நாட்டியக் கலையை வளர்க்கும் என்று நம்புகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.  ÷மாநிலங்களவை உறுப்பினர் க.கனிமொழி: இந்த ஆராய்ச்சி மையத்தில் பரத நாட்டியம் மட்டும் இல்லாமல் கிராமப்புறக் கலைகளையும் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  ÷மேலும் இம் மையம் பல்வேறு நாடுகளின் கலாசார வடிவிலான கட்டடங்களுடன் பல கோடி செலவில் அமைக்கப்படுகிறது. நடனமாடும் சிவன் போன்ற சிலைகள் 108 நிறுவப்பட உள்ளன.  ÷இளங்கோவடிகள் பெயரில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது என்றார் கனிமொழி.  ÷இந் நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலரும் நாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியம் வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.  ÷முதல்வரின் மனைவி ராஜாத்தி அம்மாள், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
கருத்துக்கள்

இது குறித்து முழுமையாக எழுதினால் தினமணி கருத்தை வெளியிடாது. எனினும் ஒன்று மட்டும் உண்மை. இப்படிப்பட்ட தவறான கருத்தை அவ்வப்பொழுது முதல்வர் தெரிவிப்பது வேதனையானது. எல்லாக் கலைகளுமே மொழிகளுக்கு அப்பாற்பட்டுப் போற்றப்பட வேண்டும். அதே நேரம் மொழிகள் இல்லாமல் கலைகள் இல்லை. திருக்குறள் கருத்தை விளக்கி நாட்டியம் ஒன்று நடப்பதாக வைத்துக் கொள்வோம். மொழி புரியாத ஒருவர் பொருள் புரியாமல் எப்படி நடனத்தை முழுமையாகச் சுவைக்க முடியும்? தமிழ் நாட்டில் நாட்டியக் கலைகள் எனில் தமிழ்ப்பாட்டிற்கு ஆடுவதாகத்தான் இருக்க வேண்டும். மொழி வேறுபாடு இல்லை என்றால் தெலுங்குப் பாடடிற்கும் சமசுகிருதப் பாட்டிற்கும் ஆடத் தொடங்கி விடுவார்கள. அதனை ஏற்பாரா முதல்வர்? காலத்தால் மூத்த இளங்கோ அடிகள் பெயரைப் பின்னுக்குத் தள்ளிப் பெயர் சூட்டலாமா? வரலாற்றுப் பிழையல்லவா? யாருடைய நிகழ்ச்சிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதே தவறு என்று சொன்னாரோ அவருடைய நிகழ்ச்சியிலேயே பஙகு கொள்ளும் கனிவான மாற்றம் பாராட்டிற்குரியதுதான். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/18/2010 2:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக