dance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
dance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஜனவரி, 2012

Andaman jarawa tribe tortured to dance before the tourists

 அந்தமான் பழங்குடியினரை ஆடச் செய்து ரசித்த சுற்றுலா பயணிகள் : "டிவி' காட்சியால் யூனியன் பிரதேசத்திற்கு நெருக்கடி


போர்ட் பிளேர்: அந்தமானில் ஜாரவா பழங்குடி பெண்களை நடனமாட செய்து, சுற்றுலா பயணிகளை மகிழ்வித்ததாக செய்தி வெளியிட்ட "டிவி' நிறுவனங்களுக்கு அந்தமான் நிகோபார் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்திடமிருந்து, மத்திய அரசும் அறிக்கை கேட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில், ஜாரவா பழங்குடியினர் வசிக்கின்றனர். இன்று வரை அவர்கள் எந்த ஆடையும் உடுத்தாமல், நிர்வாணமாகவே வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலானோர் இறந்து விட, தற்போது 403 பேர் மட்டுமே இந்தத் தீவில் உள்ளனர். இந்த பழங்குடி இனத்தை பாதுகாக்கும் பொருட்டு, இவர்கள் வாழும் காட்டு பகுதியை நோக்கி செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பத்திரிகை செய்தி : இதற்கிடையே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர், இந்த பழங்குடிகளை பார்க்க சென்றதாகவும், இவர்களை அழைத்து சென்ற போலீஸ்காரர் ஒருவர், பழங்குடியின பெண்களுக்கு பிஸ்கெட்டுகளையும், இனிப்புகளையும் வழங்கி அவர்களை நடனமாட செய்ததாகவும், இதற்காக இந்த சுற்றுலா பயணிகளிடம் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் பிரிட்டனை சேர்ந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பொதுவாக, காட்டுப் பகுதியில் சுற்றுலா செல்பவர்கள் வனவிலங்குகளை பார்வையிடுவார்கள். ஆனால், அந்தமானில் இந்த நிர்வாண பழங்குடியினரை பார்ப்பதற்காகவே உள்ளூர் போலீசார் உதவியுடன் "காட்டு மனிதர்' சுற்றுலா நிகழ்ச்சி நடப்பதாக பிரிட்டனை சேர்ந்த "அப்சர்வர்' மற்றும் "கார்டியன்'பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த செய்தியை மையப்படுத்தி டில்லியை சேர்ந்த இரண்டு "டிவி' சேனல்கள் பழங்குடி பெண்களின் நடன நிகழ்ச்சியை ஒளிபரப்பின.

சேனல்களுக்கு நோட்டீஸ் : இதுகுறித்து அந்தமான் டி.ஜி.பி., எஸ்.பி.தியோல் குறிப்பிடுகையில், "அப்சர்வர் பத்திரிகை குறிப்பிட்டுள்ள பழங்குடி பெண்கள் படம் 2002ல் எடுக்கப்பட்டது. எனினும், பழங்குடியினரை காட்சி பொருளாக்கி சுற்றுலா பயணிகளுக்கு காட்டுவது சட்டப்படி குற்றமாகும்' என்றார். பழங்குடி பெண்களின் கவுரவத்தை இழிவுபடுத்தும் வகையில், அவர்களது நடனத்தை ஒளிபரப்பிய டில்லியை சேர்ந்த இரண்டு சேனல்களுக்கு அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "பழங்குடி பெண்களை நடனமாட செய்தவர் ஒரு போலீஸ்காரர் என்பது தவறானது. அவர் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற அங்கீகாரம் பெறாத வழிகாட்டி. இது தொடர்பாக அவர் அரசிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அந்தமான் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

படம் பழையது : அந்தமான் நிகோபார் எம்.பி., விஷ்ணு பாதா ரே குறிப்பிடுகையில், "டிவியில் காட்டப்பட்ட பழங்குடி பெண்களின் நடன படம் பழமையானது. எனினும், இந்த காட்சியை ஒளிபரப்பியது தவறாகும். எனவே, உரியவர்கள் மீது அரசு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

அப்பட்டமான பொய் : இந்த "வீடியோ' காட்சிகளை எடுத்த "பிரிட்டிஷ்' டிவி நிருபர் சாம்பர்லின் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், "இந்த "வீடியோ' காட்சிகளை அந்தமான் தீவுகளில் சமீபத்தில் தான் படமெடுத்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன் எடுத்த பழைய காட்சி என்று அந்தமான் கவர்னர் கூறியிருப்பது அப்பட்டமான பொய். "ஜாரவாஸ்' பழங்குடியின மக்கள் இன்றும் சுற்றுலா பயணிகளால் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அந்தமான் போலீஸ் அதிகாரிகளில் சிலர் சுற்றுலா "ஆபரேட்டர்'களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, பயணிகளை பழங்குடியின மக்கள் வாழும் காடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு பழங்குடியின மக்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்கின்றனர்' என்றார்.

காட்சிப் பொருளாக சித்தரிப்பதா? : மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் கிஷோர் சந்திர தியோ, அந்தமான் கவர்னர் புபிந்தர் சிங்கை நேற்று தொடர்பு கொண்டு, இந்த சம்பவம் குறித்து விவரமான அறிக்கை ஒன்றை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மத்திய உள்துறை அமைச்சகமும், அந்தமான் மாநில அரசிடம் இது குறித்து ஒரு அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

சம்பவம் குறித்து கி‌ஷோர் சந்திர தியோ நிருபர்களிடம் கூறியதாவது: அந்தமானில் உள்ள பழங்குடி மக்களை காட்சிப் பொருளாக சித்தரிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மாநில அரசிடம் இந்த சம்பவம் குறித்து அறிக்கை அனுப்புமாறு கேட்டிருக்கிறேன். அடுத்த மாதம் அந்தமான் தீவுகளுக்கு சென்று, இந்த சம்பவம் குறித்து நேரடி விசாரணை நடத்துவேன். நேற்று முன்தினம் வெளிவந்த "வீடியோ' காட்சிகள் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை. இது, தற்போது நடந்த சம்பவம் அல்ல என, கவர்னர் என்னிடம் தெரிவித்தார். "ஜாரவா' பழங்குடி மக்கள் வாழும் தனிக்காடுகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி கிடையாது. அந்தக் காடுகளின் வழியாகச் செல்லும் பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு உண்டு. நான்கு அல்லது ஐந்து பஸ்கள் தொடர் வண்டியாக போலீஸ் பாதுகாப்போடு இந்த காட்டுப் பகுதியில் அனுப்பப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பயணிகள் பஸ்சை விட்டு இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிஷோர் சந்திர தியோ கூறினார்.

சனி, 5 நவம்பர், 2011

குரங்குகள் நடத்திய பொதுக்கூட்டம்!

குரங்குகள் நடத்திய பொதுக்கூட்டம்!

First Published : 23 Oct 2011 09:22:08 AM IST


அகத்திய மலை, உலகின் பழமையான மலைகளில் ஒன்று. தமிழ் மொழியும் தமிழ் இலக்கணமும் தோன்றியதாகக் கருதப்படும் எழில் கொஞ்சும் அரும்பெரும் இயற்கை பொக்கிஷம். உலகில் பல்லுயிர் பெருக்கம் உயிர்ப்போடு உள்ள சில பகுதிகளில் இந்த அகத்திய மலைக் காடுகளும் ஒன்று.  இத்தகைய சிறப்பு வாய்ந்த அகத்திய மலையில், சுமார் 1300 சதுர கிலோ மீட்டர்கள் பரந்து விரிந்திருக்கும் அகத்திய மலையின் காடுகளில், 2000 கிலோமீட்டர்கள் தன் வனபாரதி மீடியாஸ் படப்பிடிப்பு குழுவுடன் கால் நடையாக அலைந்து திரிந்து அந்த மலைக் காடுகளின் வனப்பையும் சிறப்பையும் கேமிரா லென்சுக்குள் அடைத்து வந்திருக்கிறார், "ஓர் அருந்தமிழ் காடு' என்ற ஆவணப்படத்தின் இயக்குநர் எஸ்.மோகன் ராம்.  இன்னும் படத்தொகுப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் சில முக்கிய காட்சிகளை நம்மிடம் காண்பித்தார்.  அந்த சில காட்சிகளிலேயே அந்தக் குழுவின் உழைப்பு தெரிந்தது. அவரிடம் பேசத் தொடங்கினோம், இயற்கை சுற்றுச்சூழலை காப்பதில் தன்னால் இயன்றதைச் செய்த மகிழ்ச்சி அவர் பேச்சில் தெரிந்தது.  மோகன் ராமிடம் பேசியதிலிருந்து...  அகத்திய மலைக் காட்டை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?  என் பூர்வீகம் நெல்லை மாவட்டம் சுரண்டை என்ற ஊர். சிறு வயதில் இருந்தே அந்த மலையை பற்றியும் அதன் காடுகள் பற்றியும் கேட்டு இருக்கிறேன். என்னுடைய 17-ம் வயதிலிருந்து பல முறை அந்த மலையின் மீது ஏறியுள்ளேன். நான் பார்த்து ரசித்த அந்த மலையை அனைவரும் பார்க்க வேண்டும், அதனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையாலும் இயற்கையை காக்கும் முயற்சியில் என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தாலும் இந்தப் படம் எடுக்கும் எண்ணம் வந்தது.  இந்தப் படத்தில் எதையெல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள்?  அகத்திய மலையில் மட்டுமே உள்ள மூத்துப்பழம், லேடிஸ் ஸ்லிப்பர் ஆர்கிட் மலர், இன்னும் பெயரிடப்படாத பல அரிய வகை உயிரினங்கள், உடலில் தமிழ் எழுத்துகள் பொறித்துள்ள உயிர்கள், குரங்குகளுக்குள் நடக்கும் பொதுக் கூட்டம், இந்தியாவின் பெரிய பட்டாம்பூச்சி, தேசியக் கொடியைப் போன்ற நிறங்கள் கொண்ட பறவை, கல்லாகிப்போன மரத்தின் வேர் உள்ளிட்ட பல அரிய காட்சிகளை ஆவணப்படுத்தியுள்ளேன்.  படப்பிடிப்பு முடிய எத்தனை நாள்கள் ஆனது?  இந்த படம் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு முடிய மூன்று ஆண்டுகள் ஆனது. சுமார் 200 நாள்கள் காட்டிலேயே தங்கியிருந்தோம்.  படப்பிடிப்பின் பொது எந்த வகையான சிரமங்களையும் ஆபத்துகளையும் நீங்களும் உங்கள் குழுவினரும் சந்தித்தீர்கள்?  முக்கியமாக நாங்கள் சந்தித்த மிகப்பெரிய சிரமம், அட்டைகள் தான். உடல் முழுவதும் அட்டைகள் தொற்றிக்கொள்ளும். இதனால் எங்கள் குழுவினர் பல பேர் பாதிக்கப்பட்டனர்.  மலை உச்சிக்கு ஏறும்போது, நான்கு பேரைக் கொன்றதாக கூறப்படும் யானை வழிமறித்தது. நாங்கள் தங்கியிருந்த குகையில் பாம்பு ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்தது. இது போன்ற ஆபத்துகளை எதிர்கொண்டோம். கேமிரா பாட்டரி சார்ஜ் செய்வதற்கு பல கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டியிருக்கும், மேலும் இறுதிக் காட்சி எடுப்பதற்காக மட்டும் மலை உச்சிக்கு மூன்று முறை 375 கிலோமீட்டர்கள் நடந்தோம்.  இந்தப் படத்துக்கு இதுவரை எந்த விதமான வரவேற்பு கிடைத்துள்ளது?  முதலில் நான் அகத்திய மலையைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் இதனை பார்த்த சில ஆராய்ச்சியாளர்கள் இந்தப் படத்தில் உள்ள அறிவியல் சிறப்புகளைத் தெரிவித்தனர். இதற்கு பல சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு உள்ளது. பொது மக்களிடமும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.  இந்தப் படத்தில் எந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்படுகின்றன?  தமிழ்மொழி தோன்றிய இடத்தைப் பற்றியும், தன்னை தக்க வைத்துக்கொள்ள இயற்கை செய்யும் சில மாற்றங்கள், இயற்கையின் விந்தையான அணுகுமுறை ஆகியவற்றையும் சொல்கிறேன்.  உங்களின் அடுத்த கட்ட திட்டம் என்ன?  இந்த ஆவணப்படத்தை மீண்டும் எச்.டி. உயர்தரத்தில் எடுக்கவேண்டும். அடுத்து அமைதிப் பள்ளத்தாக்கை பற்றிய விரிவான ஆவணப்படம் இயக்கவேண்டும். உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் இந்த ஆண்டை சர்வதேச வன ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்குள் இந்த படத்தைக் காட்சிப்படுத்த வேண்டும்.  இந்த படத்தை பார்ப்பவர்கள் நிச்சயமாக இயற்கையின் விந்தையையும் அதனைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் உணர்வார்கள்.
கருத்துகள்

இது போன்ற ஆவணப்படங்களை எங்கே காண்பது. சந்தைமயமாக்கப்பட்ட திரைப்படங்களைப் பற்றிய விடயங்கள் இணைய முழுக்க வியாபித்துக் கிடக்க, இது போன்ற உண்மையானவையானவும் அறிவுசார் விடயங்களையும் எங்கு காண்பது என்று விளங்கவில்லை. தயவுசெய்து அதைக் காண்பதற்கான சுட்டி, உசாவிகளைத் தந்தால் செய்தியின் பொறுப்பும் தகவலும் முழுமையுறும்.
By ஈஸ்வர்
10/27/2011 4:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திங்கள், 18 அக்டோபர், 2010

மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை: முதல்வர் கருணாநிதி

மாமல்லபுரம் அருகே பட்டிபுலத்தில் பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் சிற்பங்கள் செதுக்கும் பணிகளுக்கான உளியை வழங்குகிறார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.
காஞ்சிபுரம், அக். 17: மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை. நம் கலாசாரத்துடன் அக் கலையை வளர்க்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என தமிழக முதல்வர் மு.கருணாநிதி பேசினார்.  ÷மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் கிராமத்தில் பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும் பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  ÷பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியது:  ÷எனது நண்பரும், விடுதலைப் போராட்ட வீரருமான சுப்பிரமணியத்தின் மகன் பத்மா சுப்பிரமணியன், இந்த அறக்கட்டளையை நிறுவி உள்ளார். இந்த இடத்தில் "பரதமுனி நாட்டியாலயம்' என்பதை உருவாக்க ஜெயலலிதா ஆட்சியில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.  ÷தமிழ் கலாசாரப் பெருமையை நாங்கள் என்றைக்கும் விட்டுக் கொடுத்தது கிடையாது. இச் சூழ்நிலையில் எங்கள் ஆட்சி வந்தவுடன் அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டதால் நீதிமன்றம் சென்றார் பத்மா சுப்பிரமணியன்.  ÷நான் அவரிடம், "நீதிமன்ற வழக்கு தேவையில்லை. நாம் சமாதானமாக சென்று விடுவோம். நீங்கள் பரதமுனி பெயருடன் இளங்கோவடிகள் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றேன்.  ÷அவரும் "பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையம்' என்ற பெயரில் அறக்கட்டளையை பதிவு செய்துள்ளார்.  ÷நாட்டியம் என்பது மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு கலை. அக் கலையை வளர்க்கும் முயற்சிக்கு நானும் ஒரு கலைஞன் என்ற முறையில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். எங்கள் அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும்.  ÷நானும், பத்மா சுப்பிரமணியமும் கலைக் குடும்பம் என்ற வகையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர் வெளிநாடுகளில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ÷அவர் தொடங்கியுள்ள இந்த ஆராய்ச்சி மையம் உலக அளவில் சிறந்து விளங்கி நாட்டியக் கலையை வளர்க்கும் என்று நம்புகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.  ÷மாநிலங்களவை உறுப்பினர் க.கனிமொழி: இந்த ஆராய்ச்சி மையத்தில் பரத நாட்டியம் மட்டும் இல்லாமல் கிராமப்புறக் கலைகளையும் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  ÷மேலும் இம் மையம் பல்வேறு நாடுகளின் கலாசார வடிவிலான கட்டடங்களுடன் பல கோடி செலவில் அமைக்கப்படுகிறது. நடனமாடும் சிவன் போன்ற சிலைகள் 108 நிறுவப்பட உள்ளன.  ÷இளங்கோவடிகள் பெயரில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது என்றார் கனிமொழி.  ÷இந் நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலரும் நாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியம் வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.  ÷முதல்வரின் மனைவி ராஜாத்தி அம்மாள், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
கருத்துக்கள்

இது குறித்து முழுமையாக எழுதினால் தினமணி கருத்தை வெளியிடாது. எனினும் ஒன்று மட்டும் உண்மை. இப்படிப்பட்ட தவறான கருத்தை அவ்வப்பொழுது முதல்வர் தெரிவிப்பது வேதனையானது. எல்லாக் கலைகளுமே மொழிகளுக்கு அப்பாற்பட்டுப் போற்றப்பட வேண்டும். அதே நேரம் மொழிகள் இல்லாமல் கலைகள் இல்லை. திருக்குறள் கருத்தை விளக்கி நாட்டியம் ஒன்று நடப்பதாக வைத்துக் கொள்வோம். மொழி புரியாத ஒருவர் பொருள் புரியாமல் எப்படி நடனத்தை முழுமையாகச் சுவைக்க முடியும்? தமிழ் நாட்டில் நாட்டியக் கலைகள் எனில் தமிழ்ப்பாட்டிற்கு ஆடுவதாகத்தான் இருக்க வேண்டும். மொழி வேறுபாடு இல்லை என்றால் தெலுங்குப் பாடடிற்கும் சமசுகிருதப் பாட்டிற்கும் ஆடத் தொடங்கி விடுவார்கள. அதனை ஏற்பாரா முதல்வர்? காலத்தால் மூத்த இளங்கோ அடிகள் பெயரைப் பின்னுக்குத் தள்ளிப் பெயர் சூட்டலாமா? வரலாற்றுப் பிழையல்லவா? யாருடைய நிகழ்ச்சிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதே தவறு என்று சொன்னாரோ அவருடைய நிகழ்ச்சியிலேயே பஙகு கொள்ளும் கனிவான மாற்றம் பாராட்டிற்குரியதுதான். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/18/2010 2:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 12 மே, 2010

செம்மொழி மாநாடு: மாநாட்டில் முதல்வரின் பேத்தி பங்கேற்கும் வீணை நிகழ்ச்சி



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொது அரங்கில் முதல்வர் கருணாநிதியின் பேத்தி எழிலரசி ஜோதிமணியின் வீணை நிகழ்ச்சி, பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுற்றுலாத் துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜனின் தலைமையிலான கலை நிகழ்ச்சி மற்றும் சுற்றுலாக் குழுவின் மூலம் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மாநாட்டின் பொது அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய கலைஞர்கள், அவர்களுக்கான நேரம், ஒரு குழுவில் எத்தனை கலைஞர்கள் பங்கேற்கின்றனர் என்பவையும் முழுமையாக இறுதி செய்யப்பட்டுவிட்டன.கலை நிகழ்ச்சிகள் ஜூன் 19-ம் தேதி தொடங்கி மாநாட்டு நிறைவு நாளான ஜூன் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன.முதல்வர் கருணாநிதியின் பேத்தி செல்வி எழிலரசி ஜோதிமணி பங்கேற்கும் வீணை நிகழ்ச்சி ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் 6 கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.போர்வாளா, பூவிதழா என்ற தலைப்பில் பத்மா சுப்பிரமணியம் குழுவினரின் நிகழ்ச்சியும், பிறப்பொக்கும் என்ற கலை நிகழ்ச்சி பிரசன்ன ராமசாமி குழுவினரும், புஷ்பவனம் குப்புசாமியின் தமிழிசை மற்றும் மக்களிசை நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தோம்பல் குழுவின் மூலம் கலைக் குழுவினருக்கு உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதுதவிர மாநாட்டு தொடக்க விழாவுக்கு முன்னதாக 3 நாள்களுக்கு கோவை நகரில் 10 இடங்களில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
கருத்துக்கள்

அடுத்தவருக்கு ஒரு நீதி! தனக்கொரு நீதி என்பதே அரசியல்வாதிகளின் பண்பாடா? பத்மா சுப்பிரமணியம் விழா ஒன்றிற்கு வாழ்த்துரை கேட்ட செயலரைக் கண்டித்து அதனைப் பெருமையாக வெளிப்படுத்திய முதல்வர் இன்றைக்கு அவருக்கு உலக மாநாட்டில் வாய்ப்பு தருகிறார். தனக்குப் பாதிப்பு என்றால் சாமானியனுக்கு எதிரான ஆரியச் சூழ்ச்சி என்பதும் தனக்குப்பங்கிருக்கிறது என்றால் ஆரியத்திற்கு ஆலவட்டம் அளி்ப்பதும் என்று மாறும்? பேத்தியின் வீணை அரங்கேற்றத்தின் பொழுதே முதல்வர் உலக மாநாட்டிற்கான வாய்ப்பை உறுதி செய்து விட்டார். பேத்திக்கு வாய்ப்பளிக்க வழியில்லையெனில் முதல்வர் பதவியால் என்ன பயன்? ஆனால், பத்மா சுப்பிரமணியத்திற்கு ஏன் வாய்ப்பு? ஒன்று விழாவிற்கான வாழ்த்தினை அனுப்ப மறுத்துத் தெரிவித்த வீர உரைகளைத் திரும்பப் பெற வேண்டும். அல்லது உலக மாநாட்டில் தரப்படும் வாய்ப்பைத் திரும்பப் பெற வேண்டும்.(பத்மா சுப்பிரமணியம் நாட்டிய நிகழ்ச்சி தருவதாயின் தமிழறிஞர்கள் மூலம் பொருளை நன்கு புரிந்து கொண்டு நிகழ்ச்சியை அமைக்க வேண்டுகிறேன்.) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/12/2010 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்