கச்சத்தீவு பற்றிப் பேச வெளியுறவு த்துறை தடை
கச்சத்தீவு பற்றி பார்லிமென்ட்டில் விவாதம் நடத்துவதற்கு, வெளியுறவுத்
துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ளது. "நட்பு நாடாக, இலங்கை
இருப்பதால், கச்சத்தீவு பற்றி இனிமேல் பேசுவது, பெரும் தர்ம சங்கடத்தை
ஏற்படுத்தும்' என, வெளியுறவுத் துறை கவலை தெரிவித்துள்ளதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. எனினும், கச்சத்தீவை மீட்பது குறித்து, பார்லிமென்டில்
விவாதம் நடத்தப்படும் என, தமிழக எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர்.
தடைவிதிப்பு:
இந்தியாவுக்கும்,
இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் அருகே, கச்சத்தீவு உள்ளது. இரு
நாடுகளுக்கும் இடையே, 1974ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி,
கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதையடுத்து, அந்த தீவு
அருகில், நம் மீனவர்கள் மீன் பிடிக்கவோ, அந்தத் தீவில் வலைகளை உலர்த்தவோ
கூடாது என, இலங்கை கடற்படை தடை விதித்து வருகிறது. அந்தப் பகுதிக்குச்
செல்லும், நம் மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.நீண்ட நெடுங்காலமாக,
கச்சத்தீவில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடு நடத்தக் கூட, இலங்கை அரசிடம்
அனுமதி பெற்றே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. "கச்சத்தீவு, இலங்கைக்கு
வழங்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு பெரும் பாதிப்பாக
உள்ளது. எனவே, அந்தத் தீவை, மீண்டும் இந்தியா வசம் கொண்டு வர வேண்டும்;
அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்' என, தமிழக மீனவர்கள்
மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
எனினும், மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது.கச்சத்தீவு விவகாரம்
குறித்து, பார்லிமென்ட்டில், சிறப்பு விவாதம் நடத்த வலியுறுத்தி, தி.மு.க.,
எம்.பி.,யான இளங்கோவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., லிங்கம் ஆகிய
இருவரும், சபாநாயகரிடம், நோட்டீஸ் அளித்துள்ளனர்.நடப்பு மழைக்கால
கூட்டத்தொடர் முடிவதற்குள், இதுகுறித்து விவாதம் நடத்த வேண்டுமென்று,
கேட்டு இருந்தும், அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.இந்த
சூழ்நிலையில் தான், கச்சத்தீவு பற்றி பார்லிமென்ட்டில் பேசுவதற்கு,
வெளியுறவுத்துறை அமைச்சகம், முட்டுக்கட்டை போட்டுள்ள விவகாரம்
அம்பலமாகியுள்ளது.
ஒப்பந்தம் :
எம்.பி.,க்கள்
சார்பில், இதுபோன்ற கோரிக்கைகளுக்காக, "நோட்டீஸ்' அளிக்கப்பட்டால்,
சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் மூலம், சபாநாயகர் அலுவலகம் கருத்துக்
கேட்பது வழக்கம்.அது போல், கச்சத்தீவு நோட்டீஸ் குறித்து, வெளியுறவுத் துறை
அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.அதற்கு பதிலளித்து, கடந்த,
5ம் தேதி, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின், இணைச் செயலர் அந்தஸ்த்தில் உள்ள
ஹர்ஷ் வர்தன் சிரிங்லா என்பவர், பார்லிமென்ட் செயலகத்துக்கு கடிதம்
எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவுக்கும்
இலங்கைக்கும் இடையிலான, கடல் எல்லைகள் எவை என்பது குறித்து, ஏற்கனவே
வரையறுக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து, இரண்டு ஒப்பந்தங்களில், இரு
நாடுகளும் கையெழுத்தும் இட்டுள்ளன. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில், இந்த
ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.
முடிந்து போனது:
தன்
கடல் எல்லைப் பரப்பில், எதையும் இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை.
இருதரப்பும், ஒப்புக் கொண்ட படியே, எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு, முடிவு
செய்யப்பட்டது. அவ்வாறு செய்ததில், கச்சத்தீவு, இலங்கை கடல் பரப்புக்குள்
அமையும் படி ஆனது.எனவே, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி; இந்த
விஷயம், முடிந்துபோன ஒன்று; அதை திரும்பவும் பரிசீலனை செய்ய
முடியாது.இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு; நெருக்கமான நட்பு கொண்ட அண்டை
நாடாக, இலங்கை இருக்கும் போது, கச்சத்தீவு குறித்து, பார்லிமென்ட்டில்
விவாதம் நடத்துவது, ஏற்புடையது அல்ல. அவ்வாறு, விவாதம் செய்தால்,
இருநாடுகளின் நட்புறவில், மிகப்பெரிய தர்மசங்கடத்தை, ஏற்படுத்தும். எனவே,
எம்.பி.,க்களின் கோரிக்கையை ஏற்க கூடாது. தவிர, இந்த தகவல்கள் எல்லாமே,
வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித்தின் ஒப்புதலின் படியே
தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு, அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இளங்கோவன் எம்.பி.,யிடம் கேட்ட போது,
""ஏற்கனவே நடைபெற்ற, அலுவல் ஆய்வுக்குழுவில், டி.ஆர்.பாலு இப்பிரச்னை
குறித்து எழுப்பினார். இன்னொரு முறை, நானும் எழுப்பினேன். எனவே, இந்த
பிரச்னையை விட மாட்டோம். இன்னும், நாட்கள் உள்ளன. எப்படியும்,
பார்லிமென்ட்டில், இந்த பிரச்னையை கிளப்புவோம்,'' என்றார்.
மற்றொரு எம்.பி.,யான லிங்கம், ""நானும் இப்பிரச்னை குறித்து, விவாதம் நடத்த வேண்டுமென்று, மறுபடியும் வலியுறுத்துவேன்,'' என்றார்.
- தினமலர் தில்லிச் செய்தியாளர் -