வெள்ளி, 11 டிசம்பர், 2015

இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 2/2 : புகழேந்தி தங்கராசு

இரத்த ஈழம் 02 : eezham_written_in_blood02 தலைப்பு  : இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம்ூ eezham_written_in_blood

2

  பாரீசு வன்கொடுமையைத் திரித்துக் கூறி, போர்க் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க இலங்கை முயல்வது இயல்பானது. எந்த இண்டுஇடுக்கையாவது பயன்படுத்தித் தப்பிக்க நினைப்பது குற்றவாளிகளின் இயல்வு. நம்மைப் பொறுத்த வரை, கொல்லப்பட்ட நூற்றைம்பதாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்க எது தடையாக இருந்தாலும் அதைத் தகர்த்தாக வேண்டும்.
  ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புகளில் இடம்பெறாத தனித்த அமைப்புகளின் வன்கொடுமையைக் காட்டிலும், பன்னாட்டு அமைப்புகளில் இருக்கும் ஓர் அரசின் வன்கொடுமை கடுமையானது.
  பன்னாட்டு அமைப்புகளில் இடம்பெற்றிருக்கிற ஓர் அரசின் வன்கொடுமையையே தடுத்து நிறுத்த முடியாத உலகம் -இனப்படுகொலையையே செய்து முடித்த அதன் வன்கொடுமைக்கு முறைமை (நியாயம்) பெற்றுத்தரக் கூட முடியாத உலகம் – தன்னுடைய கட்டமைப்புக்குள் இல்லாத ஓர் அமைப்பை மட்டும் எப்படிக் கட்டுப்படுத்திவிட முடியும்? இந்தக் கேள்வியை எழுப்புகிற அறம்சார் உரிமை இன்றைய நாளில் தமிழினத்துக்கு மட்டுமே இருக்கிறது.
  ௧௯௪௮(1948)இல் இலங்கை விடுதலை பெற்ற நாளிலிருந்து, தமிழினம் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது; தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது. தமிழ்த் தங்கைகள் சீரழிக்கப்படுவது காலம் காலமாகத் தொடர்கிற கொடுமை. இதற்கு நீதி கேட்கிற கடமை நம்மைத் தவிர வேறெவருக்கு இருக்கிறது?
  உலகத்திடம் கேட்க நிறையக் கேள்விகள் இருக்கின்றன, எமது உறவுகளிடம். ௧௯௫௬ (1956), ௧௯௫௮ (1958), ௧௯௫௯ (1959), ௧௯௭௩ (1973), ௧௯௮௩ (1983)ஆம் ஆண்டுகளில் பௌத்த சிங்கள அரசுகளின் துணையுடன் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலைகளைக் கண்டித்த நாடுகள் எத்தனை? சொந்த மக்களையே கொல்கிறாயே – என்று இலங்கையிடம் கேட்ட நாடுகள் எத்தனை? ௧௯௮௩(1983)இல் இலங்கையில் தமிழர்கள் மீது நடந்தது இனப்படுகொலை – என்று இந்திராகாந்தியைப் போல் துணிவுடன் சொல்ல அருகிலேயே இருக்கிற பாகித்தானால் முடிந்ததா?
  வெள்ளைத் தோலுக்காக மட்டுமே கண்ணீர் சிந்துகிற நாடுகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால்தானே, திட்டமிட்டு ஓர் இனப்படுகொலையைச் செய்து முடித்துவிட்டு, அதற்கான உசாவலிலிருந்து(விசாரணையிலிருந்து) தப்பித்துவிடவும் முயல்கிறது இலங்கை? அதற்காகப் பாரீசு வன்கொடுமையைக் கூடப் பயன்படுத்த முயல்கிற அந்த இழிபிறவியை, இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிற எந்த நாட்டையும், அது அமெரிக்காவாகவே இருந்தாலும், சீனமாகவே இருந்தாலும், இந்தியாவாகவே இருந்தாலும், பாகித்தானாகவே இருந்தாலும் நாம் மன்னிக்கக் கூடாது.
  பாரீசில் கொல்லப்பட்ட ௨௦௦(200) பேருக்காக உலகே பேசலாம். ஈழத்தில் கொல்லப்பட்ட நூற்றைம்பதாயிரம் பேருக்காகப் பேசுகிற முதல் குரல் நமது குரலாகத்தான் இருக்க வேண்டும். நீதி கேட்கிற நமது குரல்தான், உலகின் பார்வையைத் திருப்ப வேண்டும்.
  கொள்கைத்தீவிரமும் வன்கொடுமையும்(பயங்கரவாதமும்) ஒன்றில்லை- என்பதைப் பாரீசு கொடுமை உலக நாடுகளுக்குக் கண்டிப்பாக உணர்த்தியிருக்கும். நேதாசியின் இந்திய தேசியப் படை எப்படி மென்மையான இலக்கு (SOFT TARGET) எதையும் வைத்துக் கொள்ளவில்லையோ, அதே மாதிரிதான் விடுதலைப் புலிகளும்! மென்மையான இலக்கு என்கிற பேச்சுக்கே அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றில் இடமில்லை. இந்த உண்மையை உலகம் புரிந்து கொள்ளும் என்கிற அச்சத்தால்தான் தட்டைத் திருப்பிப் போடப் பார்க்கிறது இலங்கை. அதன் குரல்தான், சில்வாவின் குரல்! அந்தத் தன்னலக் குரலை அம்பலப்படுத்துவதில் நாம் பின்வாங்கக் கூடாது.
  சொந்தத் தாய்மண்ணின் விடுதலைக்காகப் போராடிய எந்த நாட்டிலும், மிதக் கொள்கையாளர்களும் தீவிரக் கொள்கையாளர்களும் முற்றிலும் முரண்பட்ட போராட்ட முறைகளைத்தான் கையாண்டிருப்பார்கள். காந்தியின் வழியும் நேதாசியின் வழியும் ஒரே மாதிரியாகவா இருந்தது? இரண்டும் வேறு வேறாக இருந்தாலும், இருவரின் இலக்கும் விடுதலையைத் தவிர வேறெது? உலக நாடுகளுக்கு இதைக் குறித்து வகுப்பெடுப்பது நமது வேலையில்லை என்றாலும், இதை உணர்த்தியாக வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம்.
  பாரீசு வன்கொடுமையைக் கேடயமாகப் பயன்படுத்தி, போர்க்குற்ற உசாவலிலிருந்து தப்பிக்க முயல்வதுடன் நின்றுவிடவில்லை இலங்கை. அதைப் பயன்படுத்தி இலங்கையிலிருக்கும் முசுலிம் உடன்பிறப்புகள் மீது வெறுப்பை ஏற்படுத்தவும் முயல்கிறது.
  இலங்கையில் முசுலிம் குமுகத்தைக் கருவறுப்பதில் முழுமூச்சாக இறங்கியிருக்கும் பொதுபல சேனா, “இ.அ.(IS) அமைப்பின் அடுத்த இலக்காக இலங்கை இருக்கக்கூடும்” – என்கிற பெருங்கேடு விளைக்கும் சோதிடத்தைக் கடைவிரிக்கப் பார்க்கிறது. இதைச் சொல்லியிருப்பவர், அதன் தலைமைக் கோமாளியான கலகொட அத்த ஞானசார தேரர். கோத்தபாய இராசபக்சவின் வாழ்த்தில்லாமல் தேரரின் வாயிலிருந்து ஒரு சொல் வராது. சவாகிருல்லா போன்ற நேர்மையான தலைவர்கள், தேரரின் தேரக்கொள்கை வன்கொடுமைத்தனத்தை முறியடிக்க வேண்டும். தமிழ்த் தலைவர்களும் அதற்குத் துணை நிற்க வேண்டும்.
  நம்மைப் பொறுத்த வரை, அழிக்கப்பட்ட நம் இனத்துக்கான நீதியும், சீரழிக்கப்பட்ட தங்கைகளுக்கான நீதியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப் பார்க்க இயலாதவை. பாரீசு வன்கொடுமையையோ, வேறெந்த நிகழ்வையோ, தான் தப்பிப்பதற்கான குறுக்கு வழியாகப் பயன்படுத்த இலங்கையை நாம் விட்டுவிடக் கூடாது.
  மனித உரிமை ஆணையம், பௌத்த சிங்கள நச்சுப் பெருச்சாளியைப் பிடிக்க வைத்திருக்கிற பொறி, இண்டு இடுக்குகள் இருக்கிற பொறிதான். அந்தப் பொறியை மேலும் வலுப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டும்.
இன்றைய நமது இலக்கு, நீதி….
நீதி மட்டும்தான்!
நமது நிலையான இலக்கு, ஈழம்….
ஈழம் மட்டும்தான்!
  ௧௯௪௮(1948)இலிருந்து எம் இனம் சிந்திக் கொண்டேயிருந்த இரத்தத்தால்தான் எழுதப்பட்டது ‘ஈழம்’ என்கிற எம் நாட்டின் பெயர். உதிரம் சிந்தச் சிந்தத்தான் அந்தக் கோரிக்கை வலுவடைந்தது. ஒரு போர் மட்டுமே அதற்கு முடிவு கட்டிவிடுமென்று நினைக்கிறீர்களா நீங்கள்?
ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு
புகழேந்தி தங்கராசு : pughazhendhi-thangarasu
— தமிழக அரசியல் – கார்த்திகை 3, 2046 / 19.11.2015.
தரவு :மடிப்பாக்கம் அறிவொளி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக