சனி, 28 ஜூலை, 2012

3 குழந்தைகள் பலி: பள்ளிக் குழந்தைகளை க் காவு கொடுக்கும் பேருந்துகள்

அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி க் குழந்தைகளை  க் காவு கொடுக்கும்  பேருந்துகள்



சுருதி... படிப்பில் சுட்டி. சுதியோடு பாடுவது... ஜதியோடு ஆடுவது... எல்லாவற்றிலும் அவள் கெட்டிக்காரி. ஏழு வயதே நிரம்பிய அந்த இளம் பிஞ்சு, பள்ளி பஸ்சின் ஓட்டை வழியே கீழே விழுந்து அநியாயமாக பலியாகி போனாள்.

மரணத்தை தழுவுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தாயை பார்த்து சுருதி போட்ட கடைசி “டாடா” “அம்மா, நான் போகப் போகிறேன்” என்று போட்ட இறுதி டாடாவாக மாறிபோக தாய் பிரியாவும், தந்தை சேதுமாதவனும் கண்ணீரில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் வாசனையை உணருவதற்கு முன்பே சிலரது அஜராக்கிரதையால் சுருதியின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது. பதறிப்போனது பெற்றோர் மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழகமே கதறியது. இதயம் உள்ள எல்லோரது இதயமும் ரணமாய் வலித்தது. அதனால்தான் நீதி தேவதையே (ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம்) தானாக முன்வந்து வழக்கு எழுதி கொலைக்கு சமமானது இது என்று தன் உள்ள குமுறலை வெளியிட்டுள்ளது.

தாம்பரம் அருகே நடந்த இந்த கோர விபத்து நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கும் போதே வேலூரில் இருந்து வந்த செய்தி நெஞ்சை பிழிகிறது. ஈச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் குமாரின் மகள்கள் சுவேதா (1-ம் வகுப்பு), சுஜிதா (எல்.கே.ஜி.) இருவரும் மாலையில் பள்ளி பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்கள். கையைப் பிடித்துக் கொண்டே பிஞ்சுகள் இரண்டும் வீடு நோக்கி தளர் நடை போட்டார்கள். அதற்குள் டிரைவர் அவசரமாக பஸ்சை கிளப்பியதால் கண்ணிமைக்கும் நேரத்தில் சுஜிதா பஸ் சக்கரத்தில் சிக்கி சிதைந்து போனாள்.

வட தமிழ்நாட்டில் குலைநடுங்க வைத்த இந்த சம்பவங்களைத் தொடர்ந்து சிதம்பரத்தில் இருந்து அடுத்த செய்தி. தீபிகா என்ற 6-ம் வகுப்பு மாணவி பஸ் நிலையத்தில் பஸ் ஏறியபோது தவறி கீழே விழுந்தாள். மாலை நேரத்தில் கூட்டம் இப்படித்தான் மொய்க்கும்... யார் ஏறினால் என்ன? அசட்டுத் தனத்தில் டிரைவர் பஸ்சை கிளப்பியதால் பஸ் சக்கரத்தில் தீபிகா அநியாயமாக உயிர் இழந்தாள்.

அடுத்தடுத்து அநியாயமாக பறிக்கப்பட்ட இந்த 3 இளந்தளிர்களின் உயிரும் மீண்டும் வரப் போவதில்லை. ஆனால் முடிந்துபோன இந்த சம்பவங்கள் நெஞ்சை பதற வைக்கிறதே? எத்தனை ஆசைகள்? கனவுகளுடன் குழந்தைகளை வளர்க்கிறோம்!. பள்ளிக்கு அனுப்புகிறோம். கடவுளுக்கு நிகராக குருவையும் (ஆசிரியரையும்) கோவிலாக கல்வி கூடங்களையும் நினைத்துத்தானே குழந்தைகளை அனுப்புகிறார்கள். பெற்றோர்களைவிட பள்ளியில்தான் குழந்தைகள் அதிக நேரம் இருக்கிறது. அவர்களை பெற்ற தாயைவிட கவனமாக பேணி காக்கும் கடமை பள்ளிகளுக்கு உண்டல்லவா?

ஆனால் அந்த கடமையை பள்ளிகள் சரிவர செய்கிறதா? என்பதுதான் இப்போதைய கேள்வி. பள்ளி வளர்ச்சி கட்டணம், கல்வி கட்டணம், பஸ் கட்டணம் என்று பல கட்டணங்களில் குறியாக இருக்கும் பள்ளிகள் மாணவர் நலனிலும் குறியாக இருக்க வேண்டுமல்லவா? ஏதாவது பிரச்சினை வந்தால் பழியை யார் மீதாவது போட்டுவிட்டு தப்பிக்க பார்க்கிறார்களே! பணம் மனிதாபிமானத்தையும் சாப்பிட்டு விட்டதா? பஸ் ஓட்டை வழியாக சிறுமி சுருதி விழுந்து பலியானாள் என்றதும் பஸ் உரிமையாளர் மீது பழியை போட்டு தப்பிக்க நினைத்தது சீயோன் பள்ளி நிர்வாகம்.

ஆனால் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆப்பு வைத்து விட்டனர். இனி வழக்கு நடக்கும். தீர்ப்பு வரும். இந்த 3 இளம் பிஞ்சுகளின் உயிரோடு இந்த சோக அத்தியத்துக்கு முடிவுரை எழுதுவோம் என்பது தான் எல்லோரது எதிர்பார்ப்பும்.

எனவேதான் ஐகோர்ட்டும் பல சட்ட விதிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தர விட்டுள்ளது. சட்டங்கள் தவறு செய்பவர்களை தண்டிக்கலாம். ஆனால் தவறு செய்யாமல் இருப்பது பல உயிர்களை காக்கும். இந்த களேபரத்துக்கு இடையேயும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் ஒரு பள்ளி பஸ்சில் ஓட்டை இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அந்த பஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி பஸ்களை தினமும் பள்ளி நிர்வாகம், பஸ் டிரைவர், பஸ் உரிமையாளர்கள் பார்வையிட வேண்டும். சுருதியை காவு வாங்கி பஸ்சை 15 நாட்களுக்கு முன்புதான் போக்குவரத்து அதிகாரிகள்ஆய்வு செய்து தகுதிச் சான்றிதழ் வழங்கி இருப்பது வெட்கக்கேடான விஷயம்.

தகுதி சான்று வழங்கும் அதிகாரிகள் தகுதி இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும். பணத்துக்காக தன் தகுதியை இழந்து விடக்கூடாது. அவரவர் கடமையை ஒவ்வொருவரும் சரிவர செய்தால் இந்த அவலங்கள் அரங்கேறாது. அன்பு மகள் சுருதியை பறிகொடுத்த சேதுமாதவன் எப்படி கடமையாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

சுருதி விபத்தில் சிக்கிக் கொண்டாள் என்ற தகவலை அறியும்போது சேதுமாதவன் தனது ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சவாரி சென்று கொண்டிருந்தார். அந்த இக்கட்டான நேரத்திலும் பதட்டப்படாமல் தன் பாதுகாப்பில் இருந்த பள்ளி குழந்தைகளை பத்திரமாக அவரவர் வீடுகளில் இறக்கி விட்டுவிட்டு மகளை பார்க்க ஓடினார். இப்படி ஒவ்வொருவரும் பொறுப்புடன் தமது கடமைகளை செய்தால் இந்த மாதிரி அவலங்கள் நிகழாது என்பதை உணர வேண்டும்.

வருங்காலத்தில் சரித்திரம் படைக்கப் போகும் பச்சிளம் குழந்தைகளை காவு கொடுப்பது, கொடுமையிலும் கொடுமை. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி. சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக