வியாழன், 12 ஏப்ரல், 2012

அரசு அதிகாரிகள் விழிப்பாகச் செயல்பட வில்லையே!

௧. மின்வெட்டால் சரியான செய்தி அறிய முடியாமல் குறை அல்லது மிகையான செய்திகளும் புரளிகளும் பரவின. இவ்வாறான சூழலில் மின் வெட்டை நீக்கிவிட்டு வேறொரு நாளில் கூடுதலாக மின்வெட்டை மேற்கொள்ளலாமே! சூழலுக்கு ஏற்பச் செயல்படும் அறிவு இன்றிச் செக்குமாடு போல் இயங்குவதால் என்ன பயன்?  எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒரே செய்தியின் அடுத்தடுத்த வரிகள்  முரண்பட்ட தகவலைத் தெரிவித்தன. ௨௮ நாடுகளில் கடல்கோள் ஏற்படும் என்றும் கடல்கோள் வாய்ப்புள்ள நேரம் நீட்டிக்கப்பட்டது என்றும் முதல் நில அதிர்விற்குக்கடல்கோள்வராது என்றும் அடுத்து  அடுத்த நிலஅதிர்வு வந்ததாகவும் கடல்கோள்  வாய்ப்பு இனி இல்லை என்றும் குழப்பினார்கள். தமிழக அரசு அல்லது தலைமைச் செயலர் அல்லது பேரிடர்மேலாண்மைத் துறை தெரிவிததாக  எந்த ஒரு செய்தியும் வரவில்லையே. அரசு சரியான முறையான அறிவிப்பை வெளிவரச் செய்திருக்க வேண்டுமே! செய்யவில்லையே!கடற்பகுதியில் இருந்து இடம் பெயர வேண்டியதற்கான தொலைவைக் குறிப்பிடாமையால் தேவையற்ற இடர்ப்பாடுகளும் குழப்பங்களும் நேரிட்டனவே. இரவு சொன்ன முதல்வர் அறிவிப்பை உரிய காலத்தில் தெரிவித்திருக்கலாமே!அடுக்கிக் கொண்டே போகலாம்.   இனியேனும்  சூழலுக்கேற்றவவாறு செயல்படுங்கள் அலுவலர்களே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

(எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /  என்னும் முழக்கம் இடம் பெறுவதால் என் செய்திகளை வெளியிடுவதைத் தினமணி தவிர்ப்பது நல்லதன்று.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /)

இந்தியக் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை நீட்டிப்பு


சென்னை, ஏப்.11: இந்தோனேசியாவில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்திய கடலோரங்களில் சுனாமி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தோனேஷியாவில் இன்று மதியம் சுமத்ரா தீவை மையம் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.இந்தோனேசியாவில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் அரை மீட்டரிலிருந்து 1 மீட்டர் அளவுக்கே சுனாமி அலைகள் எழும்பும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்திய கடற்கரையோர பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்தோனேசியாவில் 2வது முறை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்திய கடல்பகுதியில் சுனாமி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 7 மணி வரையும், புதுச்சேரியில் 6.30 வரையும் சுனாமி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தோனேஷியாவில் முதல் நிலநடுக்கத்தை அடுத்து தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது சுமார் 6 மீட்டர் அளவில் அலைகள் எழும்பும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இந்திய கடற்கரையோரப் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக