வியாழன், 28 அக்டோபர், 2010

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறை: ரிசர்வ் வங்கிக்கு மன்மோகன் பரிந்துரை

கோலாலம்பூர், அக்.27: இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரை செய்துள்ளார்.  மலேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர், அங்கு நடைமுறையில் உள்ள இஸ்லாமிய வங்கி சேவை குறித்து பார்வையிட்டதோடு, இம்முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.  பல சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய வங்கிச் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இம்முறை இதுகுறித்து பரிசீலிக்குமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளேன். மலேசியாவில் இது எவ்விதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆராயுமாறு கூறப்பட்டுள்ளது.  இஸ்லாமிய வங்கிச் சேவை என்பது வட்டியில்லாமல் வங்கிச் சேவை அளிப்பதாகும். இத்தகைய சேவை தொடங்கினால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதலீடுகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உலகம் முழுவதும் 500 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில் புழங்கும் தொகை 1 லட்சம் கோடி டாலராகும். அடுத்த பத்து ஆண்டுகளில் இது 4 லட்சம் கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தாலும், நீதிமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது சந்தேகமே. இஸ்லாமிய வங்கி போன்ற வட்டியற்ற வங்கிச் சேவையை மாநில அரசு ஆதரிக்கக் கூடாது என்று சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.  தமிழர்கள் பிரச்னை: மலேசிய வாழ் தமிழர்களால் ஏற்படும் பிரச்னைகளை மலேசியா திறம்பட நிர்வகிக்கும் என நம்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம் என்றும் இதைத் தாங்களே தீர்த்துக் கொள்வதாக மலேசிய பிரமதர் நஜீப் ரஸôக் கூறியதாக மன்மோகன் சிங் கூறினார். மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடியாகும். இதில் 8 சதவீதம் பேர் இந்தியர்களாவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். 2007-ம் ஆண்டு 20 ஆயிரம் தமிழர்கள் பங்கேற்ற மிகப் பெரிய ஊர்வலம் நடைபெற்றது.
கருத்துக்கள்

மலேசியா வாழ் தமிழர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் என்று சொல்லாமல் தமிழர்களால் ஏற்படும் சிக்கல்கள் என்று சொல்வதிலிருந்தே தமிழ்ப்பகைப் போக்கைக் கடைப்பிடிக்கும் மத்திய அரசின் நிலைப்பாடு நன்கு புரிகின்றது. நம் நாடு தமிழ்த்தேசியக் கூட்டரசு நாடுகள் என வலிவும் பொலிவும் வாய்ந்த கூட்டரசாகத் திகழ்ந்தால்தான் உலகில் தமிழர்கள் உரிமையுடன் வாழ முடியும். நம் நாட்டிலும் தேசிய இனங்கள் உரிமையுடனும் எழுச்சியுடனும்வாழ இயலும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/28/2010 3:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக