வெள்ளி, 29 அக்டோபர், 2010

உ.வே.சா. சிலைக்கா இந்த நிலை...!

மதுரை, அக். 28: தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் சிலையை மறைத்து, தீபாவளிக்கான ஆடை விற்பனைக் கடை அமைத்திருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மதுரையில் 1981-ம் ஆண்டு 5-ம் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது, மதுரை-அழகர்கோவில் சாலையில் உள்ள அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் முன்புள்ள மைதானத்தில் "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதய்யரின் மார்பளவுச் சிலை திறக்கப்பட்டது.  இந்தச் சிலையைச் சுற்றிலும் இப்போது, தீபாவளி தாற்காலிக ஆடை விற்பனைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியால் இக்கடைக்கு அனுமதி தரப்பட்டதாக கடை அமைத்துள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். உ.வே.சாமிநாதய்யர் சிலை மீது ஆடைகளை தொங்கவிட்டும், துணிப் பொட்டலங்களை சிலையைச் சுற்றி அடுக்கிவைத்தும் சுறுசுறுப்பாக "தீபாவளி' வியாபாரம் நடைபெற்று வருகிறது.  இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, வழக்கமாக அந்த இடத்தைத்தான் ஆடை விற்பனைக் கடைக்கு ஒதுக்கி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில், ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து தொகுத்துத் தந்த "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.வின் சிலை தீபாவளிக் கடையால் மறைக்கப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் கடைக்காரர்களும், வாடிக்கையாளர்களும் இதையெல்லாம் சட்டை செய்யவா போகிறார்கள்?
கருத்துக்கள்

நான் மதுரையில் இரு்நத பொழுது சங்கப்புலவர்கள் தூ ணுக்கும் தமிழ்ப்புலவர்கள் அறிஞர்கள் சிலைக்கும் மாலை அணிவிக்க அமைச்சர் வருகிறார்; சிலைகளைத் தூய்மை செய்து தாருங்கள் என மாநகராட்சிக்கு மடல் அனுப்புவேன். உடன் தூய்மை செய்து தருவார்கள். அவ்வாறே அவர்களைக் கொண்டு மாலை அணிவிக்கவும் செய்வேன். அதனால் இப்படிப்பட்ட நிலை ஏற்படவில்லை.அதனை இப்பொழுதும் பின்பற்றலாம். நான் இவ்வாறு செய்யத் தொடங்கியபின்தான் சுவரொட்டிகளாலும் கொடிகளாலும் மறைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையே மக்களுக்குத் தெரிய வந்தது. புதர் மண்டிக்கிடந்த சங்கப்புலவர் தூண் ஒன்று இருப்பதே அப்பொழுது தெரிய வந்தது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2010 2:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக