வியாழன், 18 ஜூன், 2009

மீண்டும் தமிழீழ முழக்கம்? இலங்கை அரசு மறுப்பு
தினமணி


கொழும்பு, ஜூன் 17: இலங்கையில் தனித் தமிழீழத்தை அரங்கேற்றுவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து செயல்பட்டுவரும் விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர்கள் அதற்கான நடவடிக்கையை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக வந்த செய்தி வெறும் கனவாகும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. "தமிழீழத்துக்கான போராட்டம் மீண்டும் புத்துயிர் பெற்று புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கான நேரம் வந்துள்ளதால் அரசியல்ரீதியில் அதை கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளோம்' என்று இமெயில் மூலம் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவு நாடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் செல்வராசா பத்மநாதன் தெரிவித்துள்ளார். தமிழீழ ஆதரவு மின்னூடகங்களிலும், தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளிலும் இந்த செய்தி வேகமாக பரவியுள்ளது. பிபிசி உள்ளிட்ட பிரிட்டன் ஊடகங்களும், டைம்ஸ் நாளிதழும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஆயுதப் புரட்சி மீண்டும் தொடருமா என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லையெனினும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவோம் என பத்மநாதன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாம, பத்மநாதன் கூறுவது வெறும் பிரமை. தமிழீழ அரசாங்கம் என்பது வெறும் கனவுதான். அதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.
கருத்துக்கள்

இது குறித்த அச்சம் எதுவும் இல்லையெனில் சிங்கள அரசு படைவீரர்கள் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து, போர்ச் செலவுகளையும் மிகுந்த அளவு குறைத்து அத் தொகையை ஒட்டு மொத்த இலங்கையின் மறுவாழ்வுப் பணிகளுக்குச் செலிவடலாமே! எதற்காக மேலும் 100,000 வீரர்கள் சேர்ப்பும் படைத்துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடும்? காலம் ஒருநாள் மாறும்! தமிழ் ஈழம் அமைந்தே தீரும்! என்னும் அச்சம்தானே காரணம். தமிழ் ஈழம் என்பது கனவாயினும் உயிரிலும் உணர்விலும் கலந்த நம்பிக்கைக் கனவு. எனவே விரைவில் நனவாகும். இதை நம்பாதவர் ஆசை பகற்கனவாகும்! மலர்க தமிழ் ஈழம்! வெல்க தமிழ் ஈழம்! இலங்கை-ஈழ நட்புறவு, இந்திய-ஈழ நட்புறவு, உலக நாடுகளிடையேயான ஈழ நட்புறவு ஓங்குக!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/18/2009 5:48:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக