சனி, 28 மே, 2011

C.M.'s interesting story about speaker: ஸ்பீக்கர்' இனி ஓட வேண்டாம் பேரவையில் முதல்வரின் சுவையான பேச்சு

சுவையாகத்தான் உள்ளது. பேரவையில்  அவையை நடத்துநருக்கு மட்டுமே பேசும் உரிமை உள்ளது. பிறருக்கு அவர்  இசைவு அளித்தால் மட்டுமே பேசும் உரிமை உண்டு.  எனவே, அவையை நடத்துநர்
பேசுநர் (speaker)  என அழைக்கப்பட்டார். இச் சொல் கி.பி.௧௪௦௦ இல் பழக்கத்தில் வந்துள்ளது. விருப்பம் தெரிவித்துப் போட்டியிட்டு வென்றபின் ஓட வேண்டிய தேவையில்லை. எனினும் மன்னர் அல்லது அரசியிடம்  அவரது விருப்பத்தைப் பேரவை மறுத்தததைத் தெரிவிக்கும சூழலை உணர்ந்து இது போன்ற கதை வந்திருக்கும் போலும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தங்கள் அவைத்தலைவராக  ஏற்றுக் கொள்வதற்கு அடையாளமாகவும் யாரது ஆதரவில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் அவையை நடத்த வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவும் இரு கட்சியைச்  சேர்ந்தவர்களும் அவரை அழைத்து அமரச் செய்கிறார்கள்.  இங்கிலாந்தில் பல கட்சி ஆட்சி முறை கிடையாது. பல கட்சி ஆட்சி முறை  இருப்பதால் நம் நாட்டில் ஏற்கப்பட்ட முதன்மை எதிர்க்கட்சித்  தலைவர் அழைத்துச் செல்கிறார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

"ஸ்பீக்கர்' இனி ஓட வேண்டாம் பேரவையில்
முதல்வரின் சுவையான பேச்சு

First Published : 28 May 2011 02:33:05 AM IST


சென்னை, மே 27: பேரவைத் தலைவரை ஆங்கிலத்தில் அழைக்கும் "ஸ்பீக்கர்' என்கிற வார்த்தை வந்தது எப்படி என்கிற தகவலை வரலாற்றுப் பின்னணியுடன் சுவைபடக் கூறினார் முதல்வர் ஜெயலலிதா. இது, பேரவையில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவர், துணைத் தலைவரை வாழ்த்தி, சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையின் போது இந்த சுவாரஸ்ய தகவலைக் கூறினார். அவர் பேசியது:பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படவுடன் அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும், பேரவைத் தலைவரின் கரங்களைப் பிடித்து அழைத்துச் சென்று தலைவருக்கான இருக்கையில் அமர வைப்பது மரபாகும். இது சம்பிரதாயமாக நடைபெறுகின்ற ஒரு நடைமுறை.இந்தப் பழக்கம் எப்படி வந்தது? என்பதை எடுத்துச் சொன்னால் அனைவருக்கும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த மரபுக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. நம்முடைய இந்திய ஜனநாயகம் என்பது பிரிட்டிஷ் ஜனநாயகத்தைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது.இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்றம் எவ்வகையில் அமைக்கப்பட்டதோ அதே வகையில் அமைக்கப்பட்டது தான் இந்திய நாடாளுமன்றமும், இந்திய சட்டப் பேரவைகளும். அங்கே இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றம் வந்து விட்டது. அது மன்னராட்சி இருந்த காலம். சர்வ வல்லமை படைத்த மன்னரும் இருப்பார். நாடாளுமன்றமும் இருக்கும்.இங்கே இந்தியாவில் அந்த முறையைப் பின்பற்றிய போது மன்னர் இல்லை. ஜனாதிபதி இருக்கிறார். நாடாளுமன்றம் இருக்கிறது. அந்தக் காலத்தில் இங்கிலாந்து நாட்டில் மன்னர் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று விரும்புவார். அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும். பெரும்பாலும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மன்னருடைய விருப்பத்தை நிராகரித்து விடுவார்கள். இந்தச் செய்தியை யார் போய் மன்னரிடம் கூறுவது? அவர் தான் பேரவைத் தலைவர்.மரணதண்டனை கிடைக்கும்: அத்தகைய தலைவருக்கு நாடாளுமன்றத் தலைவர் என்று பெயரை வைக்காமல் ஸ்பீக்கர் என்று பெயர் வைத்தார்கள். நாடாளுமன்றத்தின் கருத்து என்னவோ அதைச் சென்று மன்னரிடம் எடுத்துக் கூறுபவர்தான் ஸ்பீக்கர். நாம்தான் இங்கே பேரவைத் தலைவர் என்று அழைக்கிறோமே தவிர, இன்று வரை அங்கே இங்கிலாந்தில் ஸ்பீக்கர் என்றுதான் அழைக்கிறார்கள்.மன்னர் விரும்பிய செயலை நாடாளுமன்றம் நிராகரிக்கும் போது அந்தச் செய்தியை ஸ்பீக்கர் சென்று துணிச்சலுடன் மன்னரிடம் கூறும்போது என்ன நடக்கும்? சில காரியங்கள் செய்வதற்குத்தான் மன்னருக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர, அந்த ராஜ்யத்தில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு.ஆகவே தான், விரும்பியது நடக்காது என்று ஸ்பீக்கர் எடுத்துரைப்பார். உடனே மன்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி உத்தரவிடுவார். தலையை வெட்டி எடுங்கள் என்று ஆணையிடுவார்.இது பலமுறை நடந்தால் யாருமே அந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். ஆகவே, புதிதாக நாடாளுமன்றம் அமையும்போது, ஒரு ஸ்பீக்கரை தேர்ந்தெடுக்கும் போது இன்னார்தான் ஸ்பீக்கர் என்று அறிவித்தவுடன் அவர் உடனே தப்பித்தால் போதும், தலை தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிப்பார்.அப்போது அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் அவரை ஓட விடாமல் தடுத்து நிறுத்தி அவர் கைகளைப் பிடித்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார்கள். இதுதான் அந்தக் காலத்தில் இருந்துவந்த மரபு. காலப்போக்கில் அதுமாறி இப்போது ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகு ஸ்பீக்கர் இப்போது ஓட்டம் பிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஸ்பீக்கரின் தலையை எடுங்கள் என்று சொல்லக்கூடிய மன்னரும் இங்கே இல்லை. ஆனால், அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் பேரவைத் தலைவரின் கரங்களைப் பிடித்து ஆசனத்தில் அமர வைக்கும் மரபு மட்டும் அப்படியே இருக்கிறது. நீங்கள் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடிக்கும் சூழ்நிலையை எந்த நாளிலும் நாங்கள் (ஆளும் கட்சியினர்) உருவாக்க மாட்டோம் என முதல்வர் ஜெயலலிதா கூறிய போது பேரவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கையை பிடித்து உட்கார வைக்கும் மரபு ஏன்? ஜெ., கூறிய ருசிகர கதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக