சனி, 26 பிப்ரவரி, 2011

what is the necessary for the bus day? :மாநகருக்குப் பேருந்துநாள் எதற்கு? (எதுக்குடே, பஸ் டே!)

வன்முறைக்கு வழிவகுக்கும் பேருந்து நாள் தேவையில்லை. கட்டுரையாளருக்குப் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி /


மாநகருக்கு எதுக்குடே, பஸ் டே!

சென்னை மாநிலக் கல்லூரி முன்பாக காமராஜர் சாலையில் நடந்த பஸ் தினக் கொண்டாட்டம் (கோப்புப் படம்).
"பஸ் டே' என்று சொல்லப்படும் பேருந்து விழா என்பது முதலில் மாநகரில் தொடங்கவில்லை. இந்த விழாவின் கருத்துரு தொடங்கியது சிறுநகரங்களில் மட்டுமே. அதுவும்கூட கிராமத்து மாணவர்கள்தான் இந்த விழாவுக்குக் காரணமானவர்கள்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு எண்ணிக்கையில் பேருந்துகள் கிடையாது. அதிலும், ஊரக வழித்தடங்களிலிருந்து நகர்ப்புறத்தில் உள்ள கல்லூரிக்கு வர வேண்டும் என்றால் மிகவும் கடினம். அந்த வழியாகச் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு அந்த கூட்டுரோடு-கள் பேருந்து நிறுத்தமாக அறிவிக்கப்படாத நிலையில் அவை நிற்காமல் பறந்து போகும். நின்று மாணவர்களை ஏற்றிக்கொண்டாலும், முழுக்கட்டணம் செலுத்தியாக வேண்டும். இப்போது இருக்கும் நடைமுறைபோன்று மாணவர் திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு கட்டணக் கழிவு வசதிகள் அமலில் இல்லாத நேரம்.அந்த நாள்களில் ஊரக மாணவர்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தவை தனியார் பேருந்துகள்தான். குக்கிராமங்களிலிருந்து கூட்டுரோடுக்கு வந்து காத்திருந்தால், தனியார் பேருந்துகள் அங்கே நின்று ஏற்றிச் செல்வார்கள். மாணவர்கள் கட்டணத்தில் பாதியைக் கொடுத்தால் போதும். சில நாள்களில் மாணவர்கள் கூட்டுரோடுக்கு நெருங்கி ஓடி வந்துகொண்டிருப்பதைக் கண்டாலும், வண்டியை நிறுத்தி ஏற்றிச் சென்ற பெருந்தன்மை அன்றைய தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இருந்தது. "நல்லா படிங்க தம்பிங்களா, படிச்சு நல்ல வேலைக்குப் போங்க, எங்கள மாதிரி நாய் பொழப்பு வேண்டாம்பா' என்று அன்புடன் டிக்கெட் கிழித்த நடத்துநர்கள் இருந்தார்கள். விழாக்காலங்களில், நிறைய இருக்கைகளில் மாணவர்கள் இருந்து, அமர இடம் இல்லை என்று பயணிகள் இறங்க முயன்றால், உக்கார வைக்கிறேன் வாம்மா என்று அழைத்து, "மாணவர்களை கொஞ்சம் இடம் கொடு ராஜா' என்று எழுப்புகிற உரிமையும்கூட அவர்களுக்கு இருந்தது. அவர்கள் எடுத்துக்கொண்ட இந்த உரிமையை மாணவர்கள் மதிக்கவும் செய்தார்கள். இதுபோன்றதான நட்புறவு ஊரக மாணவர்களுக்கும் தனியார் பேருந்து நடத்துநர்களுக்கும் ஏற்பட்டபோது, அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக பங்கேற்கவும் மொய் எழுதுவதுமான உறவாகவும், கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டு என்ற நிலையில் அடுத்த ஆண்டு இந்த தினசரி பயணம் இல்லை என்று பிரியாவிடை கொண்டாடவும் விழைந்ததன் விளைவுதான் பஸ் டே.அந்த பஸ் டே என்பதும்கூட, அந்தப் பேருந்தில் முன்னதாகவே அதிகாலையில் போய்- அந்த வண்டி வேறு ஊருக்குப் போய்த்தான் கல்லூரி நேரத்துக்கு அந்த வழித்தடத்தில் வரும் என்பதால்- கலர் காகிதங்கள் ஓட்டி, மஞ்சள் நீர் தெளித்து அழகுபடுத்த ஒரு மாணவர் குழு அமைப்பார்கள். ஓட்டுநர், நடத்துநர், கிளீனர் என 6 பேருக்கு (பதினைந்து நாளைக்கு ஒருமுறை ஆள் மாறுவார்கள்) துணி எடுத்துக் கொடுக்க மாணவர்கள் தங்களுக்குள் பணவசூல் செய்வதும், அன்று அந்த நடையின்போது பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு சாக்லெட் கொடுக்கவும் ஒரு குழு செயல்படும்.இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது. பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதில்லை. ஆனால், எந்த நோக்கத்துக்காக, எத்தகைய இணக்கமான அன்பின் வெளிப்பாடாக ஒரு நிகழ்வு ஏற்பட்டதோ அது இன்றைய மாநகரில் சீரழிந்து, நலமழிந்து, ரத்த நாற்றம் வீசுகிறது என்பதைப் பார்க்கும்போது, கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.சென்னை மாநகரப் பேருந்தின் ஓர் ஓட்டுநராகிலும், தினமும் தனது வண்டியில் வரும் மாணவர்களை அடையாளம் காண, அவர் படிக்கும் படிப்பைச் சொல்ல முடியுமா? அல்லது மாணவர்கள் பஸ் நிறுத்தத்தை நோக்கி ஓடி வருவது தெரிந்து, பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்வாரா? மாநகரைப் பொறுத்தவரை இந்தப் பேருந்து இல்லாவிட்டால் இன்னொரு நகர்ப்பேருந்து. அவ்வளவுதான். மாநகரப் பேருந்தில் எந்த நடத்துநராவது, போய் நல்ல படிய்யா என்று வாழ்த்தியிருப்பாரா, இதெல்லாம் சோத்துக்கு லாட்டரி அடிக்கப்போவுதுங்க என்று, மாணவர்கள் இறங்கிப் போனபிறகு திட்டாமல் இருந்தாலே அதிசயம்.பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பும் நட்பும் இல்லாமல் வெறுமனே வசூல் வேட்டையில் இறங்கி, காசைத் தண்ணியாக இறைத்து, பேருந்தின் வழித்தடத்திலிருந்து விலகிச் சென்று, இன்னொரு கல்லூரி முன்பாக தங்கள் கூச்சலின் வலிமையைப் பறைசாற்றிக்கொண்டு ஊர்வலம் செல்வதைத்தவிர, மாநகரில் கொண்டாடப்படும் பஸ் டே நிகழ்வுகளில் எதைக் காண முடிகிறது. இந்த பஸ் டே நிகழ்வுகளை கோஷ்டி கோஷ்டியாகவும் நடத்துகிறார்கள். எல்லாமும் இந்த விழாவுக்காகக் கிடைக்கும் வசூல் பணம் மீதான மோகம்தான் காரணம். இதற்கு அந்த மாணவர்களின் பின்புலத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவும் காரணம். அவர்கள் ஆதரவு தருவது மட்டுமல்ல, அந்த நேரத்தில் பாதுகாப்புக்காக வரும் போலீஸ் அதிகாரிகளில் யாராவது தங்கள் கோரிக்கைக்கு இணக்கமாகச் செயல்படாமல் இருந்தவராக இருந்தால், கொஞ்ச ரகளை பண்ணிவிடுங்க, நாம யாருன்னு புரியணும் என்று அறிவுரை சொல்லி அனுப்பும் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள். இல்லாவிட்டால், இத்தனை கற்களும் இரும்புக் கம்பிகளும் போலீஸ் தலையில் வந்து விழுவதற்கு, பச்சையப்பன் கல்லூரிக்குள் செங்கல்சூளை இருக்கிறதா? இல்லை காயலான் கடை இருக்கிறதா?மூன்று தினங்களுக்கு முன்பு மாநிலக் கல்லூரி வாசலில் ஒரு பஸ் கூரையின் மீது சுமார் 100 மாணவர்கள் நிற்க உள்ளே 100 மாணவர்கள் ஜன்னல்களில் பிதுங்கி எட்டிப் பார்க்க, பட்டாசுகள் வெடிக்கும் புகைப்படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நம்ம போக்குவரத்துக் கழகங்கள் எந்த லட்சணத்தில், மழைக்குக்கூட தாங்காத கூரையை அமைக்கின்றன என்பது தெரிந்ததுதான். இந்தக் கூரை பிரிந்து மேலே இருக்கும் மாணவர்கள் மொத்தமாகக் கீழே விழுந்தால், கம்பிகள் குத்தியும், எடை தாங்காமலும் செத்துப்போகும் மாணவர்கள் எத்தனை பேராக இருக்கும்?தங்கள் வழித்தட நடத்துநர் பேருந்துகளுக்கு உண்மையிலேயே சிறப்புச் செய்ய நினைத்தால் அவர்கள் கல்லூரி வளாகத்துக்கு வரவழைத்து, அனைவருமாக விருந்து உண்டு, அவர்களுக்குப் பரிசுப் பொருள்கள் வழங்குவதுதான் முறையாக இருக்கும். யாருக்கும் பாதிப்பு இல்லாமல், மாணவர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.
கருத்துகள்


உண்மையை பறை சாற்றிய கட்டுரை..இதை பார்த்த போது என்னுடைய கல்லுரி நாட்களில் நாங்கள் கொண்டாடிய பஸ் டே நினைவிற்கு வந்தது. நகர்புற பேருந்தில் நடக்கும் உண்மையை தெளிவாக சொன்னிர்கள். சில கிராமபுற பேருந்தில் நடத்துனர், ஓட்டுனருக்கு வாழைபழம், கீரை, காய்கறி எல்லாம் பொதுமக்கள் கொடுப்பார்கள் வழக்கமாக பேருந்தில் எடுத்து போகும்போது.
By உண்மை
2/25/2011 11:59:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக