திங்கள், 31 ஆகஸ்ட், 2009

ஆங்கிலேயரை எதிர்த்து
முதலில் போராடியவன் பூலித்தேவன்:
வைகோ புகழாரம்



சென்னை, ஆக. 30: இந்திய மண்ணைக் காப்பதற்காக ஆங்கிலேயரை எதிர்த்து நாட்டிலேயே முதலில் போராடியவன் பூலித்தேவன் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பில் மன்னன் பூலித்தேவனின் 294-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கழகத்தின் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் வைகோ பேசியது:
நம் இளைஞர்களுக்கு நம் முன்னோர்களின் தியாகமிக்க வீர வரலாறு குறித்த செய்திகள் தெரியவில்லை. எனவே அந்த வரலாற்றை நினைவுகூர்வது நமது கடமை.
இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்னரே, 1750-களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவன் பூலித்தேவன். அதாவது நாட்டிலேயே ஆங்கிலேயரை எதிர்த்து முதலில் போராடியவன்.
தான் மட்டுமின்றி தென் தமிழகத்திலிருந்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஆங்கிலேயருக்கு எதிராக ஓரணியில் திரட்டியவன் பூலித்தேவன். ஆங்கிலேயருக்கு மிகப்பெரும் சவாலாக அவன் திகழ்ந்தான் என்றார் வைகோ.
ஓ.பன்னீர்செல்வம்: கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், ஆங்கிலேயருக்கு எதிராக முதலில் போராடிய பூலித்தேவனுக்கு நமது இந்திய சரித்திரத்தில் உரிய இடம் அளிக்கப்படவில்லை. இது மிகவும் நெருடலுக்கு உரியது. நம் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பூலித்தேவனுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்வது நம் அனைவரது கடமை என்றார்.
கூட்டத்தில் மூவேந்தர் முன்னணிக் கழகப் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.
கருத்துக்கள்

இந்திய விடுதலை வரலாறு என்பதே வடவர் வரலாறாக மாறி விட்டது. எனவே, ஆங்கிலயேருக்கு எதிரான போர்களில் தமிழர்களின் பஙகளிப்பைத் தெரிவிக்கும் உண்மையான வரலாற்றைத் தமிழன்பர்கள் எழுதிப் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான வரலாற்றைப் பிறர் அறிய வாய்ப்பு ஏற்படும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/31/2009 3:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக