அப்துல் கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்துல் கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஜூலை, 2012

விடுதலை இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் அபுல்கலாமா? அப்துல் கலாமா?

பிரதமர் மடலில், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது பள்ளி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது.

இந்த நாளை, ஆண்டுதோறும் கல்வி உரிமை நாளாகக் கொண்டாட வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கையொப்பத்துடன் ஒரு மடல் அனுப்பினார்.

தமிழில் மடல்:இந்த மடல் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் இருந்தது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு, தமிழில் அனுப்பிய மடல், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.புதுச்சேரி அரசு பிரதமரின் மடலை நகலெடுத்து அனைத்து அரசு துறைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது. இந்த மடலில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர், "மவுலானா அபுல் கலாம் ஆசாத்' என்பதற்குப் பதிலாக, "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பதில் சொல்ல முடியவில்லை:இந்த பிழை கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், பிரதமரின் கையெழுத்திட்டு வந்திருப்பதால் மடலில் எந்த மாற்றமும், திருத்தமும் செய்யாமல், அப்படியே பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.வரலாறு பாடத்தில் மவுலானா அபுல் கலாம் ஆசாத் என குறிப்பிடப்பட்டுள்ள வேளை யில், பிரதமரின் மடலில் "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, எழுதப்பட்டுள்ளது ஏன்?இரண்டில் எது சரி என, ஆசிரியர்களை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

வெள்ளி, 2 டிசம்பர், 2011

shall abdul kalam help to srilanka? இலங்கைக்குக் கைகொடுக்கலாமா கலாம்?

இலங்கைக்கு கைகொடுக்கலாமா கலாம்?

பதிவு செய்த நாள் : 02/12/2011


தமிழர்கள் சிங்களம் படிப்பது கட்டாயம்:
இலங்கையில் அடுத்த ஆண்டிலிருந்து சிங்களம், ஆங்கிலம், தமிழ், என மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. தமிழர்களைக் கட்டாயமாக சிங்களம் படிக்க வைக்கும் முயற்சி இது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் கலந்து கொள்வது சரியல்ல என கொந்தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.
இலங்கையில் உள்ள லட்சுமண் கதிர்காமர் நினைவிடத்தில் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலையும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெறவேண்டும். இதற்கான செயல் திட்டம் ஜனவரியில் தொடங்கப்படுகிறது. அதில் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மத்திய அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பேசி தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இலங்கை அரசின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அப்துல் கலாம் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றும் தெரிகிறது. இந்நிலையில்தான் தமிழ் ஆர்வலர்கள் பலர் இதற்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
மத்திய அரசோ கபில் சிபலோ இலங்கை அரசுக்கு ஆதரவாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஒரு தமிழரான அப்துல் கலாம் இதற்கு ஆதரவளிப்பது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழர்களை கட்டாயமாக சிங்களம் படிக்க வைக்க இலங்கை அரசு சதி செய்கிறது. அதற்கு கலாம் உடந்தையாக்க் கூடாது என்று பல அமைப்புகள் கலாமுக்கு வேண்டுகோள் வைத்துள்ளன.
இந்தப் பிரச்னை குறித்து தமிழர் காப்பு கழகத்தின் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவனிடம் பேசினோம்.
இலங்கையில் உள்ள சிங்கள அரசு தமிழினத்தை அழித்துக் கொண்டே தமிழை வளர்ப்பதாகவும் தமிழினத்தைக் காப்பதாகவும் தொடர்ந்து நடிக்கிறது. இலங்கையில் தமிழர் குடியிருப்பில் பத்து தமிழ்க்குடும்பங்களைச் சுற்றி நூறு சிங்களக் குடும்பங்கள் இருக்கும்படி இலங்கை அரசு கவனமாக செயல்படுகிறது. தமிழர் வாழும் நிலம் என தனியாக எதுவும் இருக்கக் கூடாது என்பதுதான் இலங்கை அரசின் எண்ணம்.
உலக நாடுகளின் தண்டனைப் பார்வையில் இருந்து தப்பிக்கவும், நிதியுதவி பெறவும் இந்திய அரசின் துணையுடன் இலங்கை பல நாடகங்களை அரங்கேற்றுகிறது. அதில் ஒன்றுதான் இந்த மும்மொழிப் பயிற்சித் திட்டம். கடந்த மாவீர்ர் நாளில் கூட, அனுராதாபுரச் சிறையில் உள்ள அறுபத்தைந்து தமிழர்களை வெளியே திடலுக்கு கொண்டு வந்து ஆடைகளை அவிழ்த்து கடுமையாகத் தாக்கியுள்ளது. இலங்கை இராணுவம். தமிழர்களை அழித்துவிட்டு யாருக்காக தமிழை வளர்ப்பதாக நாடகம் ஆடுகிறது சிங்கள அரசு? என்று ஆவேசப்பட்டார்.
தொடர்ந்து வரும் டிசம்பர் மாதத்தில் பத்து நாட்கள் யாழ்பாணத்தில் உள்ள தமிழ் ஊழியர்களுக்கு சிங்களப் பயிற்சி அளிப்பதாக அறிவித்துள்ளது இலங்கை அரசு. அதே நேரம், சிங்கள ஊழியர்களுக்கு தமிழ்ப் பயிற்சி அளிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. தமிழீழப் பகுதிகளில் பெயர்ப் பலகைகளை சிங்கள மொழியில் மட்டும் வைப்பதுதான் மும்மொழிக்கொள்கையா? மும்மொழித் திட்டம் என்று சொல்லி இந்திய அரசு இந்தியை திணித்தது போல், இலங்கை அரசு சிங்களத்தைத் திணிக்கிறது.
1956-ம் ஆண்டில் இலங்கையின் பெயரை ஸ்ரீலங்கா என மாற்றியதுடன் சிங்களம் மட்டுமே தனி ஆட்சிமொழி என அறிவித்ததுதான் தமிழர்கள் ஆயுதம் ஏந்தக் காரணமாக இருந்தது. இப்போது மறுபடியும் அதேபோன்ற வேலைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. அப்துல் கலாமை விழாவிற்கு அழைப்பதன் மூலம் தாங்கள் தமிழர்களை நேசிப்பது போல இலங்கை அரசு காட்ட நினைக்கிறது. இலங்கையின் இந்த அழைப்பை அப்துல் கலாம் வெளிப்படையாக மறுக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் பிறந்த அவர், அக்கடலோர மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு இதுவரை ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை. தாம் குடியரசுத் தலைவராக இருந்தவரை, சமஸ்கிருத அறிஞர்களுக்கு செம்மொழி விருதுகள் வழங்கி வந்தவர் தமிழறிஞர்களுக்கு செம்மொழி அறிஞர் விருதுகள் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்ற ஆதங்கத்தைக் கொட்டினார் திருவள்ளுவன்.
அப்துல் கலாம் பெயரை மத்திய அரசுதான் இலங்கைக்குப் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. இது குறித்துப் பேசிய திருவள்ளுவன், தமிழரை இலங்கைக்கு அனுப்பி, தமிழர் உணர்வுகளை சோதிக்க மத்திய அரசு விரும்புகிறது. இதற்கு கலாம் துணை போகக் கூடாது. தமிழனாக இல்லாவிட்டாலும் மனிதநேய அடிப்படையிலும், உலகெங்கும் இளைஞர்கள் அவர்மேல் நல்மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை யோசித்தும் இலங்கைக்குச் செல்லக்கூடாது. குடியரசுத் தலைவராக இருந்தவரை இந்தியனாக தன்னை காட்டிக்கொண்டவர், இனியேனும் தமிழனாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளட்டும். என்று அப்துல் கலாமுக்கு ஆலோசனை வழங்கினார்.
இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானிடம் கேட்டபோது மனிதநேய அடிப்படையில் தமிழர்களுக்காக எப்போதுமே அப்துல் கலாம் குரல் கொடுத்ததே இல்லை. அவர் இலங்கைக்குச் செல்லும் முன் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்‌ஷே அரசைக் கண்டித்து குறைந்த பட்சம் அறிக்கையாவது கொடுக்க வேண்டும். எப்போதுமே தமிழர்களிடையே பிரச்னையும், பிளவையும் ஏற்படுத்த வழக்கமாக சிங்கள அரசு செய்கிற சதிதான் இது. இந்த சதியில் அப்துல் கலாம் சிக்கிவிடக் கூடாது. ஒருவேளை அவர் இலங்கை சென்றால் அது தேவையற்ற விமர்சனங்களையும் விவாதங்களையும் கொண்டு வரும். என்று முடித்துக் கொண்டார்.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பாரா கலாம்?
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 8.12.2011







0

செவ்வாய், 23 ஜூன், 2009

குறள் நெறிகளைப் பரப்ப படைப்பாளிகள் முன்வர வேண்டும்:
அப்துல் கலாம் வலியுறுத்தல்
தினமணி


சென்னை, ஜூன் 22: திருக்குறள் நெறிகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரியும், எழுத்தாளருமான காண்டீபன் என்ற பி.வி.ஜகன்மோகன் எழுதிய, "கங்கை கொண்ட செம்மொழி' நூல் வெளியீட்டு விழா ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அப்துல் கலாம் பேசியதாவது: உலகின் பல்வேறு பெரும் புலவர்கள், படைப்பாளிகளின் படைப்புகளை நாம் படித்துள்ளோம். எனினும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களில் இல்லாத கருத்துகள் எதுவும் இல்லை. திருவள்ளுவரின் இலக்கியப் பணி மகத்தானது. இணையற்றது.
இத்தகைய மாபெரும் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள் காட்டும் நெறிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும்.
சமுதாயத்துக்கு திருக்குறள் காட்டும் வாழ்வு நெறிகளையும், திருவள்ளுவரின் வரலாற்றையும் உலகம் முழுவதும் பரவச் செய்வதில் தாங்களும் பங்கேற்க தமிழ் இலக்கிய படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்றார் அப்துல் கலாம்.
வைரமுத்து: இந்தியாவுக்கு வெளியேயும் நாட்டின் மனித அடையாளமாகத் திகழ்பவர் கலாம். அரசியலையும் கடந்து தேசிய குடியரசுத் தலைவராக அவர் விளங்கினார்.
அவரால் நமது மாணவர்கள் உள்பட இளைய சமுதாயம் புத்துணர்வு பெற்றது. கலாம் வாழும் வரை நம்பிக்கையும் வாழும்.
"கங்கை கொண்ட செம்மொழி' நூலில், இந்தி மொழியில் வேரூன்றியுள்ள தமிழ்ச் சொற்களை திறனாய்வு செய்து நூலாசிரியர் நிறுவியுள்ளார்.
வணிகம், கலை, படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஒரு மொழி மற்றொரு மொழியுடன் கலந்து உறவாட நேரிடுகிறது.
உலக மயமாக்கலால் சமூகங்களிடையேயும், நாடுகளிடையேயும் வணிகத்திலும் நெருக்கம் ஏற்படுகிறது. இது குறித்து சமூக விஞ்ஞானக் கருத்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
உலகமயமாக்கலின் விளைவுகளால் நமது மாறுபாடுகள் தூக்கி வீசப்படும். பண்பாடுகள் சிதையும். சின்னச் சின்ன மொழிகளும் அழிந்து போகும்.
ஆனால், தமிழ், ஆங்கிலம், இந்தி, சீனம், அரபி, ஸ்பானிஷ் உள்ளிட்ட 6 மொழிகள் மட்டுமே நிலைத்து நிற்கும். இம் மொழிகளில் மட்டுமே, அழிக்க முடியாத வேர்ச்சொற்கள் நிறைந்துள்ளதே இதற்குக் காரணமாகும்.
ஒரு மொழியை மற்றொரு மொழி மற்றும் தேசிய இனங்கள் அங்கீகரிக்க வேண்டும். எந்த ஒரு மொழியையும் அரசுதான் காப்பாற்ற வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக மொழியைக் காக்க, ஆசிரியர்கள், படைப்பாளிகள், இதழியலாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் எந்த ஒரு தேசிய மொழியும் நிலைக்க முடியாது என்றார் வைரமுத்து.
முன்னதாக இந்நூலை வைரமுத்து வெளியிட, முதல் பிரதியை அப்துல் கலாம் பெற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர்கள் எஸ்.ரகு, ஆர்.ராமன் உள்ளிட்ட பலர் பேசினர். நூலாசிரியர் காண்டீபன் ஏற்புரை வழங்கினார்.

கருத்துக்கள்

எளிமையின் திலகம் கலாம் அவர்கள், நம் நாட்டின் முதல் குடிமகனாக வீற்றிருந்த பொழுது கூட அண்டை மாநிலமான கருநாடகாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் மூடப்பட்டே கிடந்தது. இன்றும் அதே நிலைதான். எனவே, குறள்நெறிகளையும் அதன் சிறப்பையும் முதலில் நம் நாட்டில் பரப்ப வேண்டும். இவ்விழாவில் போகிற போக்கில் அள்ளித் தெளித்த அலங்கோலமாக வைரமுத்து அழிக்க முடியாத வேர்ச் சொற்கள் நிறைந்த மொழியாக இந்தியைக் குறிப்பிட்டுள்ளார். இதுவே தவறாக படிப்பவரால் தவறாக மேற்கொள்ளப் பட்டு அறிவுக்கும் மொழி அறிவியலுக்கும் பொருந்தாத உண்மைக்கு மாறான செய்தி நிலைத்து விடும். இவ்வாறு இடம் பெற்றது செய்தியாளரின் தவறு எனில் திருத்தம் வெளியிடுக! இல்லையேல் வைரமுத்துதான் கூறினார் எனில் மத்திய ஆளும் கட்சியைக் குளிர்விப்பதாகக் கருதிக் கொண்டு இது போன்ற அபத்தச் செய்திகளைப் பேசாதிருக்கட்டும்! தான் அறிந்த கவிதைச் சிறப்புகளைப் பற்றி மட்டும் பேசினால் போதுமானது. தான் அறியா மொழியியல் துறைபற்றி அமைதி காப்பது நல்லது! தமிழால் வாழும் அவர் தமிழுக்குத் தன் பாடல்களால் அணி செய்துள்ள அவர் தன்னுடைய உரையால் களங்கம் ஏற்படுத்த வேண்டா!

By Ilakkuvanar Thiruvalluvan
6/23/2009 4:08:00 AM