புதன், 31 அக்டோபர், 2012

சீரஞ்சீவியின் அரிசி ஒவியங்கள்



சீரஞ்சீவியின் அரிசி ஒவியங்கள்

எந்த ஒரு மனிதனுக்குள்ளும் ஏதேனும் ஒரு திறமை ஒளிந்திருக்கும் என்பதற்கான அடையாளம்தான் சீரஞ்சீவி.திருமலையைச் சேர்ந்தவர், படிக்கிற காலத்தில் படிப்பு வராததால் பெற்றோரின் கவலைக்குள்ளானார். ஆனால் இவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லையே தவிர ஒவியத்தில் ஆர்வம் இருந்தது.
தனது ஒவிய திறமையை வித்தியாசமாக வெளிப்படுத்த எண்ணி அரிசியில் ஒவியம் தீட்ட துவங்கினர். இதற்காக தனியாக யாரிடமும் பயிற்சி எடுக்காமல் சுயம்புவாக முயற்சி செய்து முன்னேறியுள்ளார்.

நிறைய பயிற்சி, இரவு பகலாக முயற்சி, அரிசி உடைந்த போதும் உடையாத மனசு.ஒவியம் சிதைந்த போதும் சிதையாத உள்ளத்துடன் பாடுபட்ட சீரஞ்சிவியை இன்று "மைக்ரோ ஆர்டிஸ்ட்டாக' மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.
ஒம் கணேசா, சீனிவாசப்பெருமாள் போன்ற தெய்வப்படங்களும் காந்தி, பகத்சிங், நேதாஜி, அம்பேத்கார், ரபீந்திரநாத்தாகூர், புத்தர் போன்ற ஐம்பதிற்கும் மேலானவர்களின் படங்களையும் தத்ரூபமாக வரைந்துள்ளார். வரைந்த படங்களை முதல் முறையாக திருமலையில் உள்ள தோட்டக்கலை துறையில் கண்காட்சியாக வைத்திருந்தார். பூதக்கண்ணாடி இணைக்கப்பட்ட பெட்டியில் அரிசி ஒவியங்களை வைத்துள்ளதால் பார்வையாளர்களுக்கு ஒவியங்களை பார்த்து ரசிப்பதும் எளிதாக இருந்தது.

அரிசியில் பெயர் எழுதி தருபவர்கள் நிறைய பேர் உண்டு, படம் வரைபவர்கள் குறைவே, அப்படியே படம் வரைந்தாலும் வண்ணம் வரைவது சிரமமான விஷயம், ஆனால் எனது படத்தில் படங்கள் சீராகவும், வண்ணங்கள் தெளிவாகவும் இருப்பதாக ஒவியர்களே வியந்து பாராட்டியுள்ளது இவருக்கு மிகவும் உற்சாகத்தை தந்துள்ளது.
இந்த உற்சாகத்துடன் இன்னும் ஐம்பது தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று திருப்பதியில் கண்காட்சி நடத்த இருப்பதாகவும், தொடர்ந்து இந்த கலை மூலம் கின்னஸ் சாதனை புரிய இருப்பதாகவும் தெரிவித்தார்.

-தினமலர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக