புதன், 29 ஆகஸ்ட், 2012

இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடு இந்தியாவின் எதிரியா? சீமான் கேள்வி

இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடு இந்தியாவின் எதிரியா? சீமான் கேள்வி



 சென்னை, ஆக. 28: இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடும், தமிழர்களும் இந்திய நாட்டின் எதிரிகளா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும் என்று மத்திய அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்தையே அவமதிப்பதாகும்.  தமிழக மீனவர்கள் 546 பேரை கொன்று குவித்த ஒரு நாட்டின் ராணுவத்துக்கு தொடர்ந்து பயிற்சி கொடுப்போம் என்று கூறுவார்களேயானால், இந்திய மீனவர்கள் மீதும், அந்நாட்டு தமிழினத்தின் மீதும் இலங்கை படைகள் நடத்திய, நடத்திவரும் தாக்குதல்கள் நியாயமானது என்பதுதான் மத்திய அரசின் நிலையா?  இலங்கையின் நட்பைப் பெற இந்தியா தாரை வார்த்த கச்சத் தீவில் சீனாவின் ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கையை நட்பு நாடு என்கிறார். எந்த அடிப்படையில் இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு என்பது புரியவில்லை.  இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடும், தமிழர்களும் இந்திய நாட்டின் எதிரிகளா? இந்த நாட்டின் மீனவர்களை பல நூற்றுக்கணக்கில் கொன்று குவித்தது இந்த நாட்டின் இறையாண்மையை அவமதிக்கும் நடவடிக்கையல்லவா? தமிழர் நலன் பற்றி பேசினாலே இறையாண்மைக்கு எதிரான பேச்சு என்று கூறும் காங்கிரஸ் கட்சியினர் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொல்லும்போது இறையாண்மையை இலங்கை மீறிவிட்டது என்று ஒருபோதும் கண்டிக்காதது ஏன்?  தனது நட்பு நாடு என்று மத்திய அரசு கூறும் இலங்கை, ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் அது சீனாவிடம் நெருங்கிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. தனது நட்பு நாடு என்று இந்தியா இன்று பறைசாற்றும் இலங்கை, உண்மையில் சீனத்தின் நட்பு நாடாக ஆவதையும், தனது எதிரி நாடாக நின்று இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக ஆகப் போவதையும் இந்தியா பார்க்கத்தான் போகிறது என்றார் சீமான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக