திங்கள், 30 ஜூலை, 2012

ஈக்களைக் கட்டுப்படுத்தும் "சமூகச்சிலந்தி' வலை


தாம்பரம்:நகர்ப்புறங்களில் ஈக்களை கட்டுப்படுத்த மக்கள் திணறி வரும் நிலையில், "சமூக சிலந்தி' வலைகள் மூலம், ஈக்களை கட்டுப்படுத்தும் முறை, கிராமப்புறங்களில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் வாழிடங்களில் பரவலாக காணப்படும் பூச்சி வகைகளில், ஈ குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு பெண் ஈ, அதிகபட்சம், 500 முட்டைகள் இடும். முட்டைகளை ஒரே இடத்தில் இடாமல், ஒவ்வொரு இடத்திலும், 75 முதல் 100 முட்டைகள் வரை இடும். இவை சாப்பிடும் இடங்களில் கழிவை வெளியேற்றுவதால், அதன் மூலம் மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படுகிறது.

ஒரு மாதம் மட்டும்:திரவப் பொருட்களை மட்டுமே சாப்பிடும் ஈக்கள், திடப்பொருட்கள் மீது எச்சியை துப்பி, திரவமாக மாற்றும் தன்மை கொண்டது. இவை ஒரு மாதம் மட்டுமே வாழும். இரவு நேரத்தை காட்டிலும், பகலில் சுறுசுறுப்பாக இருக்கும். ஆடி மாதம் மாம்பழம் சீசன் என்பதால், ஈக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.ஈக்களை கட்டுப்படுத்த காடுகளில் உள்ள "சமூக சிலந்தி' வலைகள், கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. காடுகளில், காரைச் செடி மற்றும் முட்புதர்களில் கட்டப்பட்டுள்ள "சமூக சிலந்தி' வலைகளை உடைத்து வந்து, ஈத்தொல்லை அதிகமாக உள்ள இடத்தில் வைத்து விடுகின்றனர். அவற்றின் மீது அமரும் ஈக்கள், சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. சிறிது நேரத்தில், வலையில் உள்ள சிலந்திகள் வெளியே வந்து, ஈக்களை பிடித்து தின்று விடுகின்றன. இப்படி ஒவ்வொரு வலையிலும், நூற்றுக்கணக்கான ஈக்கள் சிக்கிக் கொள்கின்றன.

அழிந்து வரும் இனம்"சமூக சிலந்தி'கள் (ஞிணிட்ட்ணிண ண்ணிஞிடிச்டூ ண்ணீடிஞீஞுணூ) இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் மட்டும் காணப்படுகின்றன. வறண்ட காடுகள், முட்புதர்களில் இந்த சிலந்திகள் வலை பின்னும். ஒவ்வொரு வலையிலும், மூன்று அல்லது நான்கு சிலந்திகள் இருக்கும். சில நேரங்களில் சிலந்தி குஞ்சுகளே, தாய் சிலந்தியை தின்று விடும்.

இது குறித்து, வண்டலூர் உயிரியல் பூங்கா மருத்துவர் திருமுருகன் கூறுகையில், "இந்த சிலந்திகள் அழியும் நிலையில் உள்ளன. எனவே, காடுகளில் இருந்து கொண்டு வரப்படும் சிலந்தி வலைகளை, அழித்து விடாமல் மீண்டும் காடுகளிலேயே கொண்டு போய்விட மக்கள் முன் வரவேண்டும்,' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக