திங்கள், 23 ஏப்ரல், 2012

வாக்குறுதிக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை! மனித நேயம்தான் வறண்டு கிடக்கிறது.

சுசுமாவிடம் மகிந்த கொடுத்த வாக்குறுதி – கருத்துக்கூற மறுக்கிறார் அவரது பேச்சாளர்

mahinda_sushma
13வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கொடுத்த வாக்குறுதி தொடர்பாக சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் கருத்து வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஆறுநாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, கொழும்பில் தாஜ் சமுத்ரா விடுதியில் நேற்றுக்காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசியது.
இதன் போது, குழுவின் தலைவரான சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா அதிபரைச் சந்தித்தபோது, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை காண்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
அப்போது, ஊடகவியலாளர் ஒருவர், முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி கொடுத்த போதும், சிறிலங்கா அமைச்சர்கள் அவ்வாறான வாக்குறுதி ஏதும் கொடுக்கப்படவில்லை என்று மறுத்து விட்டதை சுட்டிக்காட்டினார்.
அதற்கு சுஸ்மா சுவராஜ், “அமைச்சர்கள் என்ன கூறினர், எதை மறுத்தனர் என்ற கேள்வியே இல்லை.
சிறிலங்காஅதிபர் 13வது திருத்தம் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட இரண்டையும் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார்“ என்று குறிப்பிட்டார்.
இந்தச்செய்தியாளர்கள் சந்திப்பில் சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகரவும் கலந்து கொண்டிருந்தார்.
அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, கருத்து எதையும் கூற மறுத்து விட்டார்.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, சிறிலங்கா அதிபரைச் சந்தித்த பின்னர், 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக