சனி, 30 ஜனவரி, 2010

முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன்

பதிந்தவர்_வன்னியன் on January 29, 2010
பிரிவு: கட்டுரைகள், செய்திகள்

[ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே.

ஈழத்தமிழர்களைக்காக்க சென்னையில் மாநாடு, தஞ்சையில் மாநாடு, அங்கே மாநாடு இங்கே மாநாடு எழும் தமிழீழம் மாநாடு என்று கூறிக்கொண்டு பின்னால் ஈழம் எழாத வகையில் உட்குத்து செய்த பெருமை தொல்.திருமாவளவன் அவர்களையே சாரும். இவர் செய்ததில் மிகக்கொடுமையான காரியம் எதுவென்றால் கூட்டணிக்கட்சித்தலைவர் மு.கருணாநிதிக்கு நன்றிக்கடனாக தோழர் முத்துக்குமரன் அவர்களால் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியை அடக்கி ஒடுக்கியதே.

கடந்த சனவரி 29 வியாழன் அன்று முத்துக்குமரன் தீக்கு தன்னை இரையாக்கி தமிழக மாணவர்களிடம் எழுச்சியை உண்டாக்கிய தொடக்கத்திலிருந்து தொல்.திருமாவளவனின் சகுனித்தனம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. இம்மாணவர் எழுச்சியை வளரவிட்டால் ஆளும் கட்சியான திமுக அரசு கலைக்கப்படும். இதனால் தனக்கு நட்டம் என்று தொல்.திருமாவளவனின் மூளை வேலை செய்துவிட்டது. ஏனென்றால மாணவர்கள் எழுச்சி என்பது எப்படிப்பட்டது என்பது அனைத்து மக்களும் அறிந்ததே.

முத்துக்குமரனின் கோரிக்கையான “எனது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்று சொன்னதற்கிணங்க மாணவர்கள் அவரின் உடலை மருத்துவமனைக்கு அருகிலேயே பெரிய மைதானம் எதிலாவது அனைத்து மக்களும் பார்வையிடும் வகையில் வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் திமுக வின் கூட்டணி கட்சியினரும் ஆளும் அரசின் காவல்படையுன் இணைந்து முத்துக்குமரனின் வீடு உள்ள கொளத்தூருக்குதான் கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவர்களை மிரட்டி கொண்டு சென்றனர்.

சென்னையிலிருந்து முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூருக்கு உடலை கொண்டு சென்று தமிழகம் முழுக்க எழுச்சியை ஏற்படுத்தலாம் என்று மாணவர்கள் முடிவு செய்தனர். ஆனால் “உடல் அழுகிவிடும்” என்றுக்கூறி ஐஸ் பாக்ஸ் இருக்கும் இக்காலத்தில் திமுக அரசின் கூட்டணியிலுள்ள தலைவர் தடுத்துவிட்டார்.

சரி அடக்கத்தினையாவது தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள் வரும் வகையில் அடக்கத்தினை ஞாயிறு(பெப் 1) அன்று வைக்கலாம் என்று மாணவர்கள் கூறினார்கள். ஆனால் திமுக அடிவருடி கட்சிகளின் முயற்சியால் சனிக்கிழமை( சனவரி 31) அன்று வைக்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது.

சனவரி 31 அன்று கொளத்தூரிலிருந்து ஈகி முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. போகும் வழியில் பெரம்பலூரிலிருந்து புரசைவாக்கம் வழியாக சென்றால் இன்னும் அதிகமாக மக்களிடம் எழுச்சி உண்டாகும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என்று மாணவர்கள் வற்புறுத்தி மறியல் செய்தனர். அப்பொழுது வாகனம் ஒன்றில் நின்றுகொண்டு வந்த தொல்.திருமாவளவனின் வழிகாட்டலில் திருமாவளவனின் உடன் இருக்கும் வன்னியரசு என்பவர் சில ஆட்களுடன் ஓடி வந்து மாணவர்களிடம் புரசைவாக்கம் வழி செல்ல இயலாது என்று கூறினார். மாணவர்களும் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருந்தனர். இதனால் வெகுண்ட திருமாவளவனின் கையாட்கள் அண்ணன் திருமாவின் பேச்சை கேட்க மாட்டீர்களா என்று முதன்முறையாக இரு மாணவர்களை அடித்து மிரட்டினர். அப்பொழுதுதான் திமுக அரசின் கையாளாக மாணவர் எழுச்சியை ஒடுக்க காக்கிச்சட்டை போடாத அரசின் கையாளாக திருமாவளவன் வந்துள்ளார் என்பது மாணவர்களுக்கு தெரியவந்தது.

அந்த மாணவர்களுக்கு அமைப்போ, தலைமையோ ஏதும் கிடையாது. இதனால் தங்களால் இவர்களை எதிர்க்க இயலாது என்று பின்வாங்கிவிட்டனர். பின்னர் திமுக அரசின் எண்ணம் போல் திருமாவளவன் வழிநடத்திச்சென்றார். பின்னர் மயானத்தினை நெருங்கும் வேளையில் இரவு 9.30 மணியளவில் திமுக அரசு முத்துக்குமரனின் தியாகத்தினால் ஏற்பட்ட ஈழ ஆதரவு எழுச்சியை கண்டு பயந்து அதை ஒடுக்க அடுத்த திட்டமாக இரவோடு இரவாக கல்லூரிகளை காலவரையற்று மூட உத்தரவிட்டது.

திமுக அரசின் இவ் அறிக்கையினால் வெகுண்டெழுந்த மாணவர்கள் ஈகி முத்துக்குமரன் கூறியபடி “எமது உடலை துருப்புச்சீட்டாக வைத்து போராடுங்கள்” என்பதற்கிணங்க “திமுக அரசின் உத்தரவினை திரும்பப் பெறாவிடில் முத்துக்குமரனின் சடலத்தினை எரிக்க விடமாட்டோம்” என்று சாலையின் நடுவில் வைத்து மறுபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனைத்து பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து துணைநின்றனர்.

அப்பொழுது மறுபடியும் திமுக அரசின் கையாளான திருமாவளவனின் கையாள் வன்னியரசு மாணவர்களிடம் வந்து “இந்த உடலை துருப்பு சீட்டாக வைத்து போராடுவது முத்துக்குமாரை அவமானப் படுத்துவதாகும் என்று கூறியுள்ளார். அபொழுதுதான் மாணவர்களுக்கு புரிந்தது முத்துக்குமரனின் கொள்கை என்ன என்பதும் அவரது நோக்கம் என்ன என்பதும் விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசு சுத்தமாக தெரியாது என்பது. அப்பொழுது, திருமாவளவனின் கையாட்கள் இரண்டாவது முறையாக மிகவும் மோசமாக மாணவர்களை தாக்கினர். ஊர்தியின் மேல் அமர்ந்து இருந்த செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து கீழே தள்ளிவிட்டு ஊர்தியை கைப்பற்றி சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்பொழுது வன்னியரசு மாணவர்களை திருமா அண்ணாவின் சொல்லை கேட்காத உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி உடலை எரித்துவிட்டு வந்து உங்களை கவனித்துக்கொள்கிறேன் என்று மிரட்டிவிட்டுச்சென்றார். இவைகள் எல்லாம் தொல்.திருமாவளவனின் பார்வையில்தான் நடைபெற்றது.

உண்மையான உணர்வோடு முத்துக்குமரன் தீக்குளித்ததிலிருந்து இறுதி வரை வந்த அம்மாணவர்கள் இவர்களின் செயல்பாடுகளால் தங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தங்கள் இரு சக்கர வண்டிகளை நிறுத்தி வைத்திருந்த கொளத்தூருக்கு வேக வேகமாக ஓடிவந்தோம்.

இதைப்பற்றிய செய்தியினை தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை. ஆனால் இந்திய எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழ் மட்டும் வெளியிட்டிருந்தது. செய்தியினை முழுவதும் போடாமல் சிறிதளவு வெளியிட்டிருந்தது. அப்படி முழுவதும் போட்டிருந்தால் அப்பத்திரிக்கை அலுவலகத்தினை குண்டர்கள் எரித்திருப்பார்கள்.

அப்பத்திரிக்கை செய்தியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

அப்பொழுது மட்டும் திருமாவளவன் என்ற நபரும், விடுதலைச்சிறுத்தைகள் என்ற கட்சியும் இல்லாமலிருந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் மாணவர் பேரெழுச்சி 1983 காலகட்டத்தில் ஏற்பட்டதைப்போல் உண்டாகியிருக்கும் திமுக அரசு கலைந்திருக்கும் அல்லது தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். ஈழமக்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறி இருக்கும்.

ஈழமக்களைப்பற்றி வாயில் மட்டும் பேசி வரும் இப்படிப்பட்ட பச்சைத் துரோகி தொல்.திருமாவளவனை தமிழக மக்களும், தமிழீழ மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்..

தொடரும்….

இராவணன்

(Visited 286 times, 286 visits today)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக