சனி, 28 நவம்பர், 2009

'தூரிகையில் தமிழகம்': முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்



சென்னை, நவ. 27: தமிழக சுற்றுலாத் துறை தயாரித்துள்ள "தூரிகையில் தமிழகம்' என்ற நூலை முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்டார். தமிழ்நாடு சுற்றுலாத் துறை தனியார் நிறுவனத்துடன் இணைந்து "தூரிகையில் தமிழகம்' என்று நிகழ்ச்சியினை சென்னை கிண்டியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் அண்மையில் நடத்தியது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்கள் பலர் கலந்து கொண்டு தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களை ஓவியங்களாகத் தீட்டினர். அதனை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். அந்த ஓவியங்களைத் தொகுத்து "தூரிகையில் தமிழகம்' என்ற தலைப்பில் புத்தகமாக தமிழக சுற்றுலாத் துறை தயாரித்துள்ளது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஓவியங்களுக்கு கீழே தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி ஆகிய மொழிகளில் அதுகுறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் தொன்மையான சின்னங்களையும், பாரம்பரிய பண்பாட்டு கூறுகளையும் உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறை அலுவலகங்கள், விருந்தினர் இல்லங்கள், இதர மாநிலங்களில் உள்ள சுற்றுலா அலுவலகங்கள் அனைத்திலும் இந்த புத்தகம் பார்வைக்கு வைக்கப்படும். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இப்புத்தகத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட முதல் பிரதியை தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி பெற்றுக் கொண்டார். சுற்றுலா, பண்பாட்டுத்துறை செயலர் வெ. இறையன்பு, சுற்றுலா வளர்ச்சி இயக்குநர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

தமிழ்நாட்டின் கலை பண்பாட்டு உணர்வுகளை வெளிப்படுத்தும் பாராட்டிற்குரிய முயற்சி. புத்தகத்தைப பார்வையாக மட்டும் வைத்தால் பயனில்லை. ஒவ்வோர் உணவகங்களிலும் இந்நூலில் உள்ள படங்களைக் காட்சிக்கு வைக்க வேண்டும. அப்பொழுதுதான் சுற்றுலாப் பயணிகளும பொது மக்களும் பயனுறுவர்; நம் நோக்கமும் நிறைவேறும். மேலும் அறைகளின் பெயர்களைத் தமிழக வரலாற்று நாகரிகப் பண்பாட்டுச் சிறப்புகளை அறியும் வண்ணம் தமிழில் வைக்க வேண்டும். நவீனப் படங்கள் என்று இல்லாமல் மரபு சார்ந்த படங்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும். இது குறி்த்து நான் 1995 இல் தமிழ்நாடு உறைவகத்தின் மதுரை மண்டல மேலாளரிடம் அறிக்கை அளிததிருந்தேன். ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கும் பொழுது ஏனோ நின்று விட்டது. துடிப்பான செயற்பாடும் சிந்தனையும் மிக்க முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இதன் செயலராக உள்ளதால் எண்ணினால் விரைந்து நிறைவேற்றுவார். சுற்றுலாத் துறைக்கும் அரசிற்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/28/2009 3:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

Top City news update

சென்னை: தமிழகத்தில் உள்ள சுற்றுலா மையங்களை ஓவியங்களாக தீட்டி உருவாக்கப்பட்டுள்ள, "தூரிகையில் தமிழகம்' என்ற புத்தகத்தை முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, "தூரிகையில் தமிழகம்' என்ற நிகழ்ச்சியை தனியார் நிறுவனத்தின் பங்கேற்புடன் சென்னை ராஜாஜி மண்டபத்தில், முன்பு நடத்தியது. இதில், தமிழகத்தின் புகழ்பெற்ற ஓவியர்கள் பலர் கலந்து கொண்டு, தமிழகத்திலுள்ள சுற்றுலா மையங்களையும், பண்பாட்டுச் சாரங்களையும் ஓவியங்களாக தீட்டினர். இந்த ஓவியங்களைப் பொதுமக்கள் பார்த்து பாராட்டினர். இந்த ஓவியங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, "தூரிகையில் தமிழகம்' என்ற பெயரில் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவிங்கள் பற்றிய குறிப்புகள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் ஜெர்மன் மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விளக்கங்களோடு இப்புத்தக்தைக் காணும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், தமிழகத்தின் தொன்மைச் சின்னங்களையும், பாரம்பரியப் பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து உணர்ந்து மகிழ வாய்ப்பு ஏற்படும். சென்னையில் நேற்று, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி இப்புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை, கனிமொழி பெற்றுக் கொண்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக