சேலம், பிப். 7: மாணவ, மாணவிகள் தங்களது ஞாபக சக்தியை மேம்படுத்த குறுக்கு வழிகள் எதுவுமில்லை என்று தமிழக சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலர் வெ.இறையன்பு கூறினார்.சேலத்தில் மனித நேய மக்கள் சேவை மன்றம் சார்பில் நடத்தப்பட்ட பிளஸ் 2 மாதிரித் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் எம்.குணசேகரன் வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் ராஜராஜன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி இறையன்பு பேசியது:பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு அடுத்து வரும் 20 நாள்களும் மிகவும் முக்கியமானவை. பிளஸ் 2 தேர்வு ஆரம்பிக்கப்பட்டபோது முதல் பிரிவில் நான் தேர்வு எழுதினேன். ஏற்கெனவே இத் தேர்வு நடைபெறவில்லை என்பதால் எந்தெந்த கேள்விகள் வினாத்தாளில்இடம் பெறும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது எந்தெந்த பாடத்தில் இருந்து எத்தனை கேள்விகள் வரும், எந்த மாதிரியான வினாக்கள் இடம்பெறும் என்றெல்லாம் அனைவருக்கும் தெரியும்.ஒரு காலத்தில் தமிழகம் தான் வணிகத்தில் உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வங்கக் கடல் சோழர்களின் ஏரியாகத் திகழ்ந்தது. ஆனால் அதன் பிறகு அறிவை விருத்தி செய்யாததாலும், அடிவருடி பிழைத்ததாலும் நமது பெருமைகளை இழக்க நேரிட்டது. ஆனால் ஒவ்வொரு நொடியிலும் விழிப்புடன், ஆக்கப்பூர்வமாகச் செயல்படுபவர்களை இந்த சமுதாயம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. இதை மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட வேண்டும்.தேர்வு நேரத்தில் பயத்தை விலக்க மனதில் தொடர்ந்து நேர்மறை எண்ணங்களை திரும்பத் திரும்ப கூறிக் கொள்ள வேண்டும். நல்லவற்றை தொடர்ந்து காட்சிப்படுத்த வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடனும், விருப்பத்துடனும் படித்தால் அது மனதில் பதிந்து விடும். வெண்டைக்காய், வல்லாரை கீரை சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று கூறுவதை நம்பி குறுக்கு வழியில் செல்ல முயற்சிக்கக் கூடாது.ஒரு விஷயத்தை நீண்ட நாள்கள் நடைமுறையில் பயன்படுத்தாமல் இருந்தாலும், ஒரு விஷயத்தை படிக்கும்போது கவனச்சிதறல் இருந்தாலும், விருப்பமின்றி படித்தாலும் நிச்சயம் அது மறதிக்கு வழி வகுக்கும்.எந்த ஒரு விஷயத்தையும், பழக்கத்தையும் தொடர்ந்து 21 நாள்கள் மேற்கொண்டால் அதுவே நம் வழக்கமாகி விடும். மேலும் சுழற்சி முறையில் பாடங்களைப் படித்தால் நினைவில் கொள்ள முடியும். கடினமான பகுதிகளை குழுவாக சேர்ந்தோ, ஆசிரியர் முன்னிலையிலோ படிக்க வேண்டும். தேர்வுக் காலத்தில் மோர், இளநீர் போன்ற சத்தான உணவையே உண்ண வேண்டும்.ஒரு மணி நேரம் படிப்பதை 10 நிமிஷங்கள் மனதில் சொல்லிப் பார்க்க வேண்டும். மனப்பாடம் செய்தே ஆக வேண்டும் என்று உள்ள பகுதிகளை எழுதி வைத்து தினமும் ஒரு மணி நேரம் படிக்க வேண்டும். தேர்வுக்கு இரண்டு மணி நேரம் இருக்கும்போதே படிப்பதை நிறுத்திவிட்டு தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்றார் இறையன்பு.
By thangaraja
2/9/2010 9:22:00 PM
By sano
2/9/2010 5:32:00 PM
By jayadeva
2/9/2010 5:19:00 PM
By jayadeva
2/9/2010 5:19:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*