புதன், 25 நவம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 176: ராஜபட்சவின் அதிரடிகள்!



ராஜபட்ச ஆட்சிக்கு வந்ததும் ராணுவ நிலைகளான ஆயுதக்கிடங்குகள், முகாம்கள், கட்டடங்கள் ஆகியவை புலிகளால் குறிவைத்துத் தகர்க்கப்பட்டன. இத்தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இதனையொட்டி, ராணுவத்தின் அத்துமீறல் உச்சகட்டத்தை அடைந்ததும், சர்வதேச நாடுகள் போர் நிறுத்த மீறல்களை உடனே நிறுத்தும்படி வலியுறுத்தியதன்பேரில் ராஜபட்ச பேச்சுவார்த்தைக்குப் போகலாம் என்றார். ஜெனிவாவில் பிப்ரவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை நடந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தையில், ஒப்பந்த நடவடிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா, பெருமாள் உள்ளிட்ட பிரிவினர் ஆயுதங்களைக் கீழே போட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புலிகள் தரப்பில் பேசிய பாலசிங்கம் வலியுறுத்தினார். அரசுப் பிரதிநிதிகள் இக் கோரிக்கையை ஏற்றபோதிலும் அதனை நடைமுறைப்படுத்தாது கிடப்பில் போட்டனர். வடக்கு-கிழக்கில் கடும் ராணுவத் தாக்குதலை நடத்திக்கொண்டே பேச்சுவார்த்தை என்ற இரண்டாவது குதிரையிலும் ராஜபட்ச சவாரி செய்தார். சிங்களப் பகுதிகளில் ராஜபட்சவின் ஆட்கள், புலிகளை சமாதானப் பேச்சில் ஈடுபடுவதற்குண்டான நெருக்குதல் கொடுக்கவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்று பிரசாரம் செய்தனர். அதே பிரசாரத்தை உலகின் முன்னும் ராஜபட்ச வைத்தார். இதே வேளையில், கருணாவின் குழுவினரும் ராணுவத்துடன் சேர்ந்துகொண்டு கிழக்கில் தாக்கினர். நார்வே சமாதானக் குழுவிடம், இருதரப்பும் புகார்களை அளித்துக் கொண்டே தாக்குதல்களையும் நடத்திக்கொண்டிருந்ததால், சமாதானக்குழுவினர் திணறினர். இந்நிலையில், ராணுவத் தாக்குதலுக்கு ராஜபட்சவின் தம்பி கோத்தபய ஆலோசனை வழங்குபவராக மாறினார். அவரே பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்ததால், இது சுலபமாகியது. சரத் ஃபென்சேகாவும் இத் தாக்குதலுக்கு ஆலோசனை வழங்குபவராக இருந்தார்.இரண்டாம் கட்ட ஜெனிவா பேச்சில் (ஏப்ரல் 2006) ராஜபட்ச பதவிக்கு வந்ததும் மூடப்பட்ட ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே புலிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அரசு, தனது போர் ஆயுதங்களில் ஒன்றாக உணவு, மருந்துப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்தைத் தடுப்பதைப் புலிகள் கடுமையாக விமர்சித்தனர். இந்தப் புகாரை அரசு பிடிவாதமாக மறுத்தது. சிங்களத் தீவிரவாத இயக்கங்களைப் போலவே, புலிகளுக்கு எதிரான தமிழ்க் குழுக்களும் அரசு சார்பில் சேர்ந்து கொண்டன. திருகோணமலை சந்தையைச் சேர்ந்த ஓரிடத்தில் வெடித்த குண்டில் 5 பேர் உயிரிழந்ததையொட்டி, இதற்குப் பதில் தாக்குதல் என்று இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த கடற்பிரிவினர், சிங்கள வன்முறையாளர் துணையுடன் தமிழர்களது வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களைத் தேர்ந்தெடுத்து பொருள்களைக் கொள்ளையடித்து, தீவைத்துக் கொளுத்தினர். இந்த வன்முறையில் திருகோணமலை நகரத்தில் தமிழர்கள் வசித்த இடங்கள் முழுவதுமே தீக்கிரையானது. இதில் 20 அப்பாவிகள் உயிர் துறந்தனர். சந்தைப் பகுதியில் குண்டு வைத்தது புலிகள் என்று சொல்லப்பட்டாலும், இதனைப் புலிகள் இயக்கம் மறுத்தது. 1983-ஆம் ஆண்டுக் கலவரத்தைப் போன்ற இக் கலவரத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தடுக்கவேண்டும் என்று, தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஏப்ரல் 25, 2006 அன்று இலங்கையின் ராணுவத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிர் இழந்ததுடன், ராணுவ உயர் அதிகாரியான சரத் ஃபொன்சேகா படுகாயமுற்று, இலங்கையில் வைத்தியம் செய்ய முடியாமல் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். இதற்கான பதில் தாக்குதலாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் விமானத் தாக்குதலை ராணுவம் நடத்தியது. மே மாதத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த கப்பல்படைத்தளத்தில், புலிகள் குண்டுவீசித் தாக்கியதில் பல கப்பல்கள் நாசமாயின. இலங்கை அரசு தீவிரமாக முயன்று, அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய யூனியனையும் வற்புறுத்தி, புலிகள் இயக்கத்தை தடை செய்ய வைத்தது (மே-19). இதனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் அடங்கியிருந்த 27 நாடுகளில், விடுதலைப் புலிகளின் சார்பில் வெளிப்படையாக இயங்கமுடியாத நிலையும், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதும் நேர்ந்தது. இதனையொட்டி நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையும் நின்றுபோனது. சரத் ஃபொன்சேகாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் குலதுங்க. இவர் தற்காலிகத் தளபதியானார். இவரும் மோட்டார் சைக்கிள் மோதலில் குண்டு தாக்கி உயிரிழந்தார்.ஜூலை மாத இறுதியில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவிலாறு பகுதியில் இருந்த தமிழர்கள், மாவிலாறு நீர்த் தேக்கத்தைக் கைப்பற்றி, சிங்களர் பகுதிக்குச் செல்லும் மதகின் கதவை மூடினார்கள். தமிழர் பகுதிகளுக்குச் சீரான நீர் வினியோகம் செய்யாததே இச் செயலுக்குக் காரணமாகக் கூறப்பட்டது. இதில் தமிழர்கள் பக்கம் விடுதலைப் புலிகள் நின்றனர். சிங்களவர் தரப்பில் ராணுவம் இறங்கியது. இரு தரப்புக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. அணையைத் திறந்துவிட்ட நிலையிலும் தாக்குதல் நீடித்தது. ஆனாலும் தொடர் தாக்குதல் மூதூரில் மையம் கொண்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 சமூகத் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தை திசை திருப்ப முயன்று ராணுவம் தோற்றது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இந்தப் படுகொலைகளைச் செய்தது ராணுவத்தினரே என்று வெளிப்படையாகக் கூறியதுடன் கண்டிக்கவும் செய்தது. இதனைத் தொடர்ந்து சர்வதேச நெருக்கடி காரணமாக வெளிநாட்டுப் பிரதிநிதி ஒருவர் இந்தச் சம்பவத்தை ஆராய வேண்டும் என்று சர்வதேச சமூகம் அறிவித்தது. முடிவில் இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி பகவதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. வேறுவழியின்றி இதனை ஏற்ற ராஜபட்ச, நீதிபதி பகவதிக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட எந்தவித உதவியும் செய்ய மறுத்தார். அதாவது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார். மாவிலாறு அணை விடுவிப்பு என்கிற ராணுவத் தாக்குதல், கிழக்கு மாவட்டத்தை முழுவதுமாகக் கைப்பற்றுவது என்று தீவிரமானது. திருகோணமலை கப்பல்படைத் தளம் மற்றும் துறைமுகம் ஆகியவை சம்பூர் பகுதியில் இருந்து தாக்கப்படலாம் என்ற யோசனையில் சம்பூர் மிகப் பெரிய தாக்குதலுக்கு ஆளானது. அதனையடுத்து வாகரை குறிவைக்கப்பட்டது. மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது ராணுவம். புலிகள் எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். இருதரப்பிலும் கணிசமான உயிர் இழப்புகள் ஏற்பட்டன. வாகரையில் கடும் யுத்தம் நடைபெற்றது. 60 ஆயிரம் பேர் உணவுக்கும், மருந்துக்கும் ஆலாய்ப் பறந்தனர். இந்தப் பகுதியில் உணவு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்த ராஜபட்ச உத்தரவிட்டார். இவ்வகையாக மக்களுக்குத் கூட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. ஆகஸ்டு 16-ஆம் தேதியன்று, இலங்கையின் போர் விமானங்கள் "செஞ்சோலை' என்னும் ஆதரவற்ற சிறுமிகள் புகலிடம் (1991-இல், போரில் தாய் தந்தையரை, உறவினர்களை இழந்தவர்களுக்காக பிரபாகரனால் உருவாக்கப்பட்டது) மீது பறந்து குண்டுகளை வீசியது. இதில் நூற்றுக்கணக்கான சிறுமிகள் படுகாயமுற்ற நிலையில், 61 சிறுமிகள் இறந்துபோனார்கள். இதேபோன்று, சிறுவர்களுக்கான ஆதரவற்றோர் இல்லமான "காந்தரூபன் அறிவுச்சோலை' மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இவ்விரு படுகொலைகளுக்கும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இவ்வாறு கண்டனம் எழுந்ததும், குழந்தைப் போராளிகள் மீதுதான் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் அறிவித்தது. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெஃப் மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆகியவை சம்பவம் நடந்த இரு இடங்களையும் பார்வையிட்டு, அங்கிருந்தவர்கள் போராளிகள் அல்ல; குழந்தைகளே என்று இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கையிட்டன.ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் இணைந்த பகுதியாக 18 மாதம் ஆட்சியதிகாரம் செய்யப்பட்ட மாகாணங்களை ஒன்றிணைத்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என என்.டபிள்யூ.எம். விஜயசேகரா (காந்தளாய்), எல்.பி. வசந்த பியதிச (உசுணை), எ.எல். முகமது புகாரி (சம்மாந்துறை) ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் மனுச் செய்தவர்கள், வாதம் புரிந்தவர்கள், எதிர்வாதம் புரிந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அனைவருமே சிங்களவர்கள். இதுபோன்ற இனங்கள் சார்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வில் பெரும்பான்மை இனத்திலான நீதிபதிகளுடன் சிறுபான்மையோராகிய தமிழ் மற்றும் முஸ்லிம் நீதிபதிகள் கட்டாயம் இணைக்கப்படவேண்டும் என்பது திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது. இந்த வழக்கு, பல மாதங்களையும், ஆண்டுகளையும் தாண்டி நடந்துவந்த நிலையில் 27-10-2006 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 1989-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக எழுந்த 13-வது அரசியல் சாசனத் திருத்தம் சொல்கிற வடக்கு-கிழக்கு இணைந்த மாநிலமாக ஏற்பு என்கிற ஒன்று, அவசரச் சட்டத்தின் காலத்தின் நிறைவேற்றப்பட்டதால், மாகாணச் சபைச் சட்டத்தின் 42-ஆம் பிரிவின் 37 (1) (4) உட்பிரிவாக அதிபரால் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டமை செல்லாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் தீர்ப்பளித்தனர். இதுகுறித்து, "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்' என்கிற நூலின் ஆசிரியர் கலாநதி ஆ.க.மனோகரன் கூறுகையில், "இனவாத சிங்கள சட்டத்தரணிகள், முழுமையான சிங்கள நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மீண்டும் பிரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலான தீர்ப்பு போன்றவற்றைப் பார்க்கும் எந்தத் தமிழ்மக்களும் உச்சநீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்' என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.நாளை: நான்காம் கட்ட ஈழப் போர்!
கருத்துக்கள்

தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் வீரமின்மையால் வீழ்ந்ததில்லை-துரோகத்தால்தான் வீழ்ந்து வருகிறார்களென்பதற்கு கருணா மீண்டுமொரு உதாரணமானான்.புலிகளின் முதல்பிழை இந்த ஈனப்பிறவியை உயிரோடுவிட்டது. இன்று எம் இனத்தைக்காவுகொண்டுவிட்டது.

By uasnthan
11/25/2009 1:44:00 AM

Yes பாவை சந்திரன் அவர்களே வாழ்த்துக்கள்

By Srini
11/25/2009 1:33:00 AM

Alponse pig went to pick shit, Read this article before he comes & open his stinking mount

By Alphonse Pig
11/25/2009 1:32:00 AM

தெளிவான கட்டுரை .தமிழன் தமிழ்னாக சிந்திக்கவேண்டும் .மனிதனாக மாறவேண்டும் பாவை சந்திரன் அவர்களே உங்களுடைய கருத்துகள் இன்னும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள். தொடர்ந்தும் வாசிக்க காத்திருக்கிறோம் . நன்றி

By uasnthan
11/25/2009 1:32:00 AM

பாவை சந்திரன் அவர்களே உங்களுடைய கருத்துகள் இன்னும் தொடர வேண்டும் வாழ்த்துக்கள். தொடர்ந்தும் வாசிக்க காத்திருக்கிறோம் . நன்றி

By uasnthan
11/25/2009 1:27:00 AM

ராஜபக்சக்கு யாரும் தண்டனை கொடுக்க மாட்டர்கள் கொடுத்தால் இந்தியா காப்பாற்றும் விரைவில் பொட்டுஅம்மான் தண்டனை கொடுப்பார்

By uasnthan
11/25/2009 1:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக