புதன், 11 நவம்பர், 2009

குடியாட்சி குடிகளுக்காக இல்லையா?



"மக்களின் நலன் கருதி நாங்கள் இணக்கமாகப் போய்விட்டோம்' என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளுக்கு இனிப்பூட்டி மகிழ்ந்திருக்கிறார். எந்த மக்களின் நலன் என்பதை எடியூரப்பா விரித்துரைக்கவில்லை!
ஒரு தொடர்பும் இல்லாத ஒகேனக்கல்லுக்குச் சொந்தம் கொண்டாடி வம்படி அரசியலில் ஈடுபாடு காட்டுகிற எடியூரப்பாவா, இப்படி வாலைக் குழைத்துக் கொண்டு ரெட்டி உடன்பிறப்புகளிடம் மண்டியிட்டு நிற்கிறார் என்பதை நம்ப முடியவில்லை!
ஒரு சாதாரண ஏட்டையாவாக என்றாவது ஒருநாள் ஆகிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில், நாடு விட்டு நாடு சென்று, மொழி அறியாக் கன்னட தேசத்துக் காவல்துறையில் சேர்ந்து, கண்டவனுக்கெல்லாம் "சல்யூட்' அடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்ட ஆந்திரத்துச் செங்கரெட்டிக்குத் தன்னுடைய மக்கள் மூவருக்கும் ஒருநாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவே "சல்யூட்' அடிப்பார் என்று கடவுளே நேரில் தோன்றிச் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டார்.
செங்கரெட்டியின் காலம் அப்படிப்பட்ட காலம்; அது நேரு நாடாண்ட காலம். சோஷலிச பாணி சமுதாயத்தை உருவாக்க நேருவுக்கு நம்முடைய ஊரான ஆவடி அடியெடுத்துக் கொடுத்த காலம்.
""டாட்டா பிர்லா கூட்டாளி, பாட்டாளிக்குப் பகையாளி'' என்ற முழக்கங்களால் பெருமுதலாளிகள் ஒரு வரையறைக்குள் வைக்கப்பட்டிருந்த காலம். ஆயினும் காலத்தின் சுழற்சியை யார் மறிக்க முடியும்? மேற்கு வங்கப் பொதுவுடைமை முதலமைச்சர் புத்ததேவ்பட்டாச்சாரியா, டாட்டா பிர்லாக்களுக்குக் கூட்டாளியாகி விடுவார் என்று யார்தான் கருதியிருக்க முடியும்?
நவீன உற்பத்தி முறைகள் தோற்றுவித்திருக்கும் "பகாசுர' முதலாளிகளிடமிருந்தும், பன்னாட்டு முதலாளிகளிடமிருந்தும் தொழிலாளி வர்க்கத்தைக் காப்பாற்றப் பிறப்பெடுத்த பொதுவுடைமைக் கட்சிகள், பிறப்பு நோக்கம் மாறி, டாட்டாக்களுக்கு ஏழை உழவர்களின் நந்திகிராமத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கப் புறப்பட்டுவிட்ட காலம்தானே, ஆந்திரத்துச் செங்கரெட்டியின் மக்கள் பெல்லாரியில் செழித்து வளர்வதற்குரிய காலமாகவும் இருக்க முடியும்.
முன்பெல்லாம் பணமுதலைகள் தங்களின் சிறுசிறு தேவைகள் நிறைவேற அரசின் தயவுக்காகக் காத்துக் கிடப்பார்கள். தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளுக்குக் குறிப்பாக ஆளும் கட்சிகளுக்குச் சிறு சிறு கொடைகள் கொடுப்பதுண்டு.
அதற்காகப் பிரதமர் நேருவைச் சந்திப்போர் பட்டியலில் டாட்டா பிர்லாக்களின் பெயர்கள் என்றுமே இடம்பெற்றது கிடையாது. அண்ணல் காந்தி அடிகள் தில்லியில் தாழ்த்தப்பட்ட மக்களின் சேரிகளிலும் தங்குவார்; பிர்லா மாளிகையிலும் தங்குவார்! ஆனால் பெருமுதலாளியான பிர்லா, காந்தியைப் பொறுத்தவரை இன்னொரு சேவாதள ஊழியர்; அவ்வளவே!
ஆனால் இன்று முதலமைச்சர்களெல்லாம் சேவாதள ஊழியர்களாகிவிட்டனர். ஆளுநரின் நெஞ்சுக்கு உகந்த நிலை நீடிக்கும் வரை ஓர் அரசு பதவியில் நீடிக்கலாம் என்பது எழுதப்பட்ட அரசியல் சட்டம். பகாசுர முதலாளிகளின் நெஞ்சுக்கு உகந்த நிலை நீடிக்கும் வரைதான் ஓர் அரசு பதவியில் நீடிக்க முடியும் என்பது இன்றைய எழுதப்படாத அரசியல் சட்டம்.
கர்நாடகத்தில் ஒருவர் முதலமைச்சராக நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்பது, பெல்லாரியில் சுரங்கத் தொழில் நடத்தும் மூன்று ரெட்டி உடன்பிறப்புகள் கையில் இருப்பதை நாடு அதிர்ச்சியோடு பார்த்து உறைந்து போனது. நாட்டின் பிரதமர் நாற்காலிக்கு அறிவிக்கப்பட்ட அத்வானியால்கூட நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையே.
சிறுத்தை கவ்வி விட்ட தொடையைச் சிறுத்தையிடமே விட்டுவிட்டு, மீதி உடலோடு எப்படியோ உயிர் பிழைத்து ஓடிப் போய் மீதிக் காலத்துக்கு ஆட்சி நடத்த முயல் என்றுதானே அத்வானியாலேயே சொல்ல முடிந்தது. ரத்த ருசி கண்டுவிட்ட சிறுத்தை ஊருக்குள் மீண்டும் மீண்டும் வராதா? இது ஒரு தொடைதானே என்று முடித்துக் கொள்கிற கதையா?
இரும்புத்தாது ஏற்றிச் செல்லும் சரக்குந்து (லாரி) ஒன்றுக்குச் சுங்கவரி ஒரு நடைக்கு ஆயிரம் ரூபாய் என்று அரசு விதித்திருப்பதை முற்றிலுமாக நீக்கிவிட வேண்டும் என்பது ரெட்டி உடன்பிறப்புகள், எடியூரப்பா அரசின் தலைக்குக் கேட்ட விலைகளில் ஒன்று.
தனியொரு நிறுவனம் தனக்கு என்ன வரி விதிக்க வேண்டும்; எவ்வளவு விதிக்க வேண்டும் என்னும் உரிமையை எடுத்துக் கொள்வது என்றால், இதற்கு அரசு எதற்கு?
ஒருவன் வங்கியிலே வாங்குகிற கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை அளவுக்குப் போகிறான். தனியாள்கள் கடன் கொடுத்தால் நூறு ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய்தான் வட்டி வாங்க வேண்டும். இல்லாவிட்டால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்ட கந்துவட்டிச் சட்டம் கடன் கொடுத்தவனைச் சிறையில் தள்ளும். ஆனால் இதே சட்டம் மத்திய அரசின் பார்வையில் இயங்கும் தனியார் வங்கிகளுக்குப் பொருந்தாதாம். அந்த வங்கிகள் தனியாரைப்போல் மூன்று மடங்கு, அதாவது முப்பத்தாறு விழுக்காடுவரை வட்டி வாங்குகின்றன. கட்டத் தாமதமானால் அபராத வட்டி வேறு! இந்த வட்டியைக் கட்டவே வழியில்லை; இந்த வட்டிக்குச் சேவை வரி வேறு போட்டார் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
இப்படி ஈரக்குலையை அறுக்கும்வண்ணம் வரிமேல் வரியாகப் போட்டு மக்களை அடிவரை அரசு சுரண்டுவது ஒருபக்கம். அரசுக் கருவூலத்துக்கு வரவேண்டிய வருவாயை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, அலைக்கற்றை உரிமம் போன்றவற்றை மத்திய அமைச்சர் ஆ. ராசா போன்றவர்கள் அடிமாட்டு விலைக்கு விற்றுக் கருவூலத்தின் வருவாய் வரத்தை அடைத்துவிடுவது இன்னொரு பக்கம். அதே பாணியில்தானே பெல்லாரியில் இரும்புத்தாதுச் சுரங்கங்கள் அடிமாட்டு விலைக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
அரசுக் கருவூலம் நிறைந்தால்தானே அது சாலைகளாகவும் சோலைகளாகவும் மாறும்; ஏரிகளாகவும் வாய்க்கால்களாகவும் மாறும்; மருத்துவமனைகளாகவும் பள்ளிகளாகவும் மாறும்; ஏழைகளுக்கு அளிக்கப்படும் உணவு மானியங்களாக மாறும். அரசின் வருவாய்க் கால்கள் தனியாருக்குத் திருப்பிவிடப்பட்டால், தனியாரும், அவ்வாறு திருப்பிவிட்ட மந்திரிகளும்தானே கொழுப்பார்கள்.
""எங்கள் கையில் அறுபது சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நீ ஆட்சியில் இருப்பதும் இல்லாததும் எங்கள் கையில்; எங்களுக்குச் சுங்க வரி போட நீ யார்? எங்களுக்குச் செய்யும் சேவையை ஏழுமலையானுக்குச் செய்யும் சேவையாக எண்ணி மகிழும் அதிகாரிகளை மட்டுமே பெல்லாரியில் நியமிக்க வேண்டும்; எங்களுக்குப் பாதபூஜை செய்பவர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருக்க வேண்டும். எங்களுடைய பதிலாளாக இருந்து எங்களுக்காக ஆட்சி நடத்து; இன்னோர் ஆறு மாதம் பார்ப்போம். இல்லையென்றால் உன்னுடைய லிங்காயத் ஜாதியைச் சேர்ந்த பேரவைத் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் முதலமைச்சராவார்.''
இவையெல்லாம் பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளின் வெளிப்படையான அறிவிப்புகள். கூரைமேல் ஏறிக்கொண்டு இவற்றையெல்லாம் அறிவிப்பதில் அவர்களுக்கு எந்தக் கூச்சமுமில்லை. எடியூரப்பாவின் தலையைத் தப்பச் செய்வதற்கு எல்லா நிபந்தனைகளும் தில்லி மேலிடத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதுதான் பேரவலம்.
இனி முதல்வர் எடியூரப்பாவுக்கு மக்களிடம் என்ன மதிப்பிருக்கும்; அதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு வழியாகத்தான் அதிகாரிகள் நியமனம், அவர்களின் இடமாற்றம், வரி விதிப்புகள் மற்றும் முக்கிய முடிவுகளும் முடிவாகும் என்றால் முதலமைச்சர் எதற்கு? எந்த அதிகாரி எடியூரப்பாவுக்குக் கட்டுப்படுவான்? எந்த அமைச்சருக்காவது ரெட்டி உடன்பிறப்புகளை எதிர்க்கத் துணிவு வருமா? தலைமைச் செயலகம் பெங்களூரில் இருக்குமே தவிர, அரசு பீடம் பெல்லாரியில் அல்லவா இயங்கும்.
ரெட்டி உடன்பிறப்புகள் கர்நாடகத்தை வேட்டைக்காடாக்குவதற்கு உடன்பட்டுப் பதவியிலிருப்பதைவிடச் சட்டமன்றத்தைக் கலைக்கச் சொல்லிப் பரிந்துரைத்துவிட்டு, மக்களைச் சந்தித்திருக்கலாமே எடியூரப்பா. அது முன்மாதிரி அரசியலாகவும் இருந்திருக்குமே.
ஒருவேளை நெறியற்ற தேவ கௌடாவும், அவருடைய மகனும், நெறிமுறையற்ற காங்கிரஸýம் ஒன்றுகூடி, ரெட்டி உடன்பிறப்புகளின் "கையாள்' ஒருவரை முதலமைச்சராக்கி, அரசமைக்கும் இழி செயலில் ஈடுபட்டால் என்ன செய்வது என்று கேட்டால், இவற்றை எதிர்கொள்வதுதானே நெறி சார்ந்த அரசியல்?
நெறிசார்ந்த அரசியலை இந்தியாவுக்குக் கற்றுக் கொடுப்பதற்குத்தானே ராமன் அவதாரம் எடுத்தான். கர்நாடகத்தை ராமராஜ்யம் ஆக்காமல், அயோத்தியில் ராமனுக்குக் கோயில் கட்டி ஆகப் போவதென்ன?
ரெட்டி உடன்பிறப்புகள் இந்த அளவுக்கு அசுர வலிமை அடைய முடிந்ததற்குக் காரணம் ஆந்திர முதல்வராக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பதவிக்கு வந்ததும், அவருடைய குடும்பத்துக்கு ரெட்டி உடன்பிறப்புகளின் சுரங்கத் தொழிலில் கணிசமான பங்கு ஏற்பட்டதும்தான்.
ஆந்திர எல்லையிலுள்ள பெல்லாரியிலிருந்து இரும்புத்தாது கடத்தல் ஆந்திரம் வழியாகத்தான் நடக்கிறது. ஆந்திரத்தில் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான அதன் முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தில் இறந்தபோது, அவர் வைத்துவிட்டுச் சென்ற எல்லையில்லாத பணமும், சொந்தத் தொலைக்காட்சியும், சொந்தச் செய்தித்தாள் பின்னல்களும் அடுத்து முதல்வராக வந்த ரோசய்யாவுக்கு எதிராக ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியால் ஏவப்பட்டன.
பெல்லாரி ரெட்டி உடன்பிறப்புகளின் சுரங்கத் தொழில் போன்ற பகாசுர நிறுவனங்கள் எடியூரப்பாவை மட்டுமன்று, ஆந்திர முதல்வர் ரோசய்யாவையும் தவித்துத் தண்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் முந்நூற்றைம்பதுக்கு மேற்பட்டவர்கள் பல நூறு கோடிகளுக்கு அதிபதிகள். அவர்கள் அரசியலில் இருப்பதே அம்பானிகளுக்கு நிகராகத் தங்களை உயர்த்திக் கொள்வதற்குத்தான். இவர்கள் கையில் சட்டம் செய்யும் அதிகாரம். அவர்கள் யாருக்காகச் சட்டம் செய்வார்கள்?
பாக்சைட்டையும், இரும்புத் தாதுக்களையும், கனிம வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் தவிக்கிறது மத்திய அரசு. அந்தப் பகுதிகளிலெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களும் ஆதிவாசிகளும் வாழ்கிறார்கள். டாட்டா மற்றும் எஸ்ஸôர் ஸ்டீல் அங்கே காலூன்ற அறுநூறு எழுநூறு கிராமங்களிலுள்ள மக்கள் அகதிகள் ஆக வேண்டும்.
நாட்டின் வளம் அரசுக்குச் சொந்தம்; அரசு அடிமட்ட மக்களுக்குச் சொந்தம் என்னும் நிலை இங்கு கிடையாதே.
கனிமங்களை அரசு தோண்டும்; அந்தந்தப் பகுதி மக்கள் அதன் காரணமாக ஒளி பெறுவார்கள் என்னும் நிலை இங்கு இல்லையே.
ஒரிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களின் கனிம வளங்களையும், மலைவாழ் மக்களையும் பன்னாட்டு முதலாளிகள் சூறையாடி விடாதபடி, ஊருக்கு வெளியே இருக்கும் ஐயனார்களைப்போல பாதுகாத்து நிற்பவர்களே இந்த நக்சலைட்டுகள்தானே. குடியாட்சி தீர்வாக முடியவில்லை என்னும்போது மக்கள் வேறு ஏற்பாடுகளைத் தேடிக் கொள்கிறார்கள். இது குடியாட்சியின் குற்றமா? மக்களின் குற்றமா?
சோற்றுப் பதம் பார்ப்பதுபோல் சொல்லப்பட்ட தீமைகள் சிலவே. நாட்டின் உயிர்ப்புக் கொஞ்சம் கொஞ்சமாக நாடெங்கிலுமுள்ள கயவர்களின் கையில் அடங்கிக் கொண்டிருக்கிறது. குடியாட்சி, விழி பிதுங்கி நிற்கிறது.
இன்னொரு பக்கம் நக்சலைட்டுகள் நாட்டின் நாற்பது விழுக்காடு மாவட்டங்களில் வேரூன்றி நிற்கிறார்கள். நாட்டைச் சந்தைப் பொருளாதாரத்தின் பேரால் பன்னாட்டு முதலாளிகளிடம் கூறு போடுவதற்கு இவர்களே தடை என்று மத்திய அரசு நினைக்கிறது.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஜாதிக்கட்சி, மதக்கட்சி, உதிரிக்கட்சி என்று அனைத்துமே தீமைகளுக்கு முன்னால் அவிந்து அடங்கிப் போய் விடுகிறபோது, தீமையின் பலன்களைப் பங்கிட்டுக் கொள்ள முண்டி அடித்துக் கொண்டு நிற்கும்போது, குடியாட்சி குடிகளுக்காக இல்லை என்று ஆகிவிடாதா?
நாடு நக்சலைட்டுகளிடம் சென்று கொண்டிருக்கிறது என்பது ஆட்சியாளர்களின், அரசியல் தலைவர்களின் அச்சமானால், அதை ராணுவம் கொண்டு களைய முடியாது. நாட்டை அவர்களிடம் செலுத்துவதே நீங்கள்தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக