புதன், 11 நவம்பர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-162: பிரபாகரன் விதித்த கெடு!



போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில், ஆறு பகுதிக்கும் ஆறு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். ஆனால் நான்கு பிரதிநிதிகள் மட்டுமே இருந்தனர். அதிலும்கூட, இரு வெளிநாட்டுப் பிரதிநிதிகளை புலிகளுக்கு அறிமுகம் செய்யாமலேயே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளுக்கு அரசு அனுப்பி வைத்தது. இதுகுறித்த ஆட்சேபணையை சுப. தமிழ்ச்செல்வன் எழுப்பிய போது, ஜனவரி 17-ஆம் தேதி அவர்களை அனுப்பி வைப்பதாக சந்திரிகா தெரிவித்தார்.
இந்நிலையில் கிழக்கு மாவட்டங்களில் புலிகளின் கொரில்லாப் பிரிவினர் நடமாட சிங்கள ராணுவம் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தது. ஆயுதம் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி, கடலிலும் சில பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இரவில் கண்டிப்பாக மீன்பிடிக்கக் கூடாது என்றும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் அமைதிச் சூழலை சீர்குலைக்கும் என்று புலிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தடை என்று சொல்லப்பட்டாலும், அப்படியொரு தாக்குதல் நடவடிக்கை ஏதுமில்லை. மீன் பிடிப்பது என்பது ராணுவம், கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே தடை செய்யப்பட்டதை புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், ஜனவரி 14-ல் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை அதே இடத்தில், அதே இருதரப்புப் பிரதிநிதிகளிடையே நடைபெற்றது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி பேச்சு அமையாமல் கிழக்கில் புலிகள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் வைத்திருப்பதைத் தடுப்பது, கடலில் புதிதாக விதிக்கப்பட்ட தடை, அதே போன்று இரவிலும் மீன்பிடிக்கக் கட்டுப்பாடு விதித்தது போன்ற விஷயங்களில் முக்கிய அம்சமாயிற்று.
மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டிருப்பதற்குக் காரணம் கடற்புலிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத்தான் என்று அதிபரின் செயலாளர் வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். அதேபோன்று பூநகரி முகாமை அப்புறப்படுத்த இயலாது என்றும், பொதுமக்கள் பயணிக்க 600 மீட்டர் இடைவெளி விட்டு ராணுவம் உள்வாங்கும் என்றும், அதேசமயம் அந்த வழியே செல்பவர்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர் என்றும் பாலபட்டபெந்தி தெரிவித்தார். மீன்பிடித் தடை குறித்தும், கிழக்கில் புலிகள் ஆயுதத்துடன் நடமாடும் உரிமை குறித்தும், அரசிடம் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இதுகுறித்து எடுக்கப்படவில்லை. இது போர்நிறுத்தச் சூழல் குறித்த ஒப்பந்தத்தையும், அமைதிச் சூழலையும் சீர்குலைக்கும் என்று தமிழ்ச்செல்வன் மீண்டும் சந்திரிகாவுக்கு கடிதம் எழுதினார். பதிலாக சில பொருள்களுக்குத் தடை நீக்கப்பட்டிருப்பதான கடிதம் ஒன்றை சந்திரிகா அனுப்பி வைத்தார். அதில் விளையாட்டுப் பொருள்கள், பொம்மைத் துப்பாக்கிகள், மின்சார வயர், மின்சாரம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள், பொம்மைகள், அலுமினியம் பொருள்கள், சணல் பைகள், பால் பேரிங்குகள், மோட்டார் உதிரிப் பாகங்கள், அச்சு எந்திரம், அதன் உதிரி பாகங்கள், அச்சுப் பொருள்கள், தங்கம், ரசாயனப் பொருள்கள், பேட்டரிகள் அனைத்து வகையும் அடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இறுதியாக பிப்ரவரி 5-ஆம் தேதி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், அதுன்ஹோல்ம், ஜோகன் காபிரியல்சன் (நார்வே), பால் ஹென்றி ஹோஸ்டிங் (நெதர்லாந்து), மேஜர் ஜெனரல் கிளைவ் மில்னர் (கனடா) ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பாணத்தில் உள்ள செயின்ட் ஜான் கல்லூரி திடலில் வந்து இறங்கினர். அவர்களை பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பாலசிங்கம் உள்ளிட்டோர் வரவேற்று, சுண்டிக்குளியிலுள்ள தங்களது தலைமை நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பிரபாகரனே நேரில் வந்து வரவேற்றார். அவரை நேரில் சந்திக்க கிடைத்த வாய்ப்பைக் கண்டு அவர்கள் வியந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கம் பூரண ஒத்துழைப்பு கொடுக்கும் என்று அவர்களிடம் பிரபாகரன் உறுதியளித்தார். போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க உறுப்பினர்களை அனுப்பி வைத்த அவர்களது நாட்டுத் தலைவர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இவர்களின் ஆலோசனைக் கூட்டம், மூடப்பட்ட தனி அறையில் நடைபெற்றது.
இச் சந்திப்பின்போது அரசுப் பிரதிநிதியாக பிரிகேடியர் பீரிஸ் இருந்தார். புலிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிக்கு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துக் கொண்ட அதேவேளையில், "எந்தப் பிரச்னையானாலும் இருவரும் தாமதிக்காமல் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தால், பிரச்னைகள் நீண்டுகொண்டே போவதைத் தவிர்க்கலாம்' என்றும் கூறினர்.
இருதரப்பினரும் அதுநாள் வரை செய்த போர் நிறுத்த மீறல்களை, அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இதரப் பகுதிகளுக்கும் நெதர்லாந்து, கனடா நாட்டுப் பிரதிநிகளையே நியமிக்கலாம் என்று புலிகள் கருத்து தெரிவித்தனர்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்க்காமல், மீன்பிடி உரிமையைத் தராமல், புலிகள் ஆயுதங்கள் வைத்திருப்பதைத் தடுக்கும் நிலையில், யாழ்குடாவில் இருந்து வவுனியா பகுதிக்குத் தாராளமாகச் சென்று வர வழி ஏற்படுத்தாத நிலையில்,
சந்திரிகா, இனப் பிரச்னைக்குத் தீர்வு காண உகந்த நேரம் வந்துவிட்டதாகவும், ஹைதி, எத்தியோப்பியா நாடுகளில் பிரெஞ்சு நாட்டின் தூதுவராக இருந்து ஓய்வுபெற்றுள்ள ஃபிராங்காய்ஸ் மிச்சலை நடுவராகக் கொண்டு பேசலாம் என்றும், இந்தப் பேச்சு வார்த்தை ரகசியமாக இருக்கும் என்றும், அவர் தற்போது கொழும்பில் இருப்பதால், இதுகுறித்த புலிகளின் கருத்துகளைத் தெரிவித்தால் நல்லது என்றும், வேண்டுமானால் மிச்சலை யாழ்ப்பாணம் அனுப்பி வைப்பதாகவும் பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் (20.2.1995).
இந்தக் கடிதம் கிடைத்ததும், தங்களின் கோரிக்கைகளான அன்றாடப் பிரச்னைகள் தீர்வு, மீன்பிடி உரிமை மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்பை நடைமுறைப்படுத்திய பிறகு இனப் பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்றும், அப்படியே பேசினாலும் அந்த முயற்சிக்கு பிரெஞ்சுக்காரர் தேவையில்லை என்றும், பிரச்னையைத் தீர்க்க மூன்றாவது நபர் தேவையில்லை என்றும், அப்படியே தேவைப்பட்டாலும் இருவரும் ஏற்கத்தக்க ஒருவரைப் பிறகு பேசி முடிவு செய்யலாம் என்றும்-பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்த முயற்சிகள் நடக்கும்போது, வெளிப்படையாக நடப்பதையே தாங்கள் விரும்புவதாகவும் புலிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்தச் செய்திகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண பத்திரிகைகளில் செய்தியாகக் கசிந்த நிலையில், இதுகுறித்து பத்திரிகையாளர் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு, நிலைமையைப் புலிகள் விளக்கினர். இந்தச் செய்தி ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கப்பட்டு, அவ்வாறான தமிழாக்கத்தை, மீண்டும் ஆங்கில வடிவமாக்கி லண்டன் அலுவலகம் மூலம் சர்வதேசப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இதில் தான் சொல்லாதது வெளிவந்ததாக சந்திரிகா, பிரபாகரனுக்குக் கடிதம் எழுதினார். மேலும் அந்தக் கடிதத்தில், பேச்சுவார்த்தை நடத்த வேறு எந்த நாட்டுப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதைத் தெரிவித்தால் நல்லது என்றும், அதுகுறித்துப் பேச எமது பிரதிநிதிகள் ஏப்ரல் 2 முதல் 10 தேதிகளுக்குள் வந்து சந்திப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் எந்தப் பிரச்னையும் தீராத நிலையில், போர் நிறுத்தத்தையே நடுநிலையாகக் கண்காணிக்க முடியாத நிலையில் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண நேரம் வந்துவிட்டதாகப் பேசுவதும், அதற்கான பிரதிநிதியைத் தேர்வு செய்வதும், பேச்சுவார்த்தைக்குள் தங்களை முடக்க சந்திரிகா விரும்புகிறார் என்றே புலிகள் இயக்கம் கருதியது. எனவே பிரபாகரன் மார்ச் 16, 1995-ல் சந்திரிகாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் ""எங்களது எந்தக் கோரிக்கையையும் அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோன்று எதையும் நிறைவேற்றவும் தயாராக இல்லை. யாழ்குடாவிலிருந்து வன்னிப் பகுதிக்குச் செல்லும் உரிமை கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை. நிரந்தரப் போர் நிறுத்தம் என்கிற கோரிக்கை ஏற்கப்படவில்லை. பூநகரி ராணுவ முகாம், மீன்பிடி உரிமை போன்றவை பாதுகாப்பு சார்ந்தது என்று மறுக்கப்படுகின்றது. இவையெல்லாம் நடந்து கொண்டிருக்க, இனப் பிரச்னை தீர்க்க பேச்சுவார்த்தை என்பது சரியல்ல. எங்களின் கோரிக்கைகள் மார்ச் 28-ஆம் தேதிக்குள் நிறைவேறாவிட்டால் பேச்சுவார்த்தையில் நாங்கள் இருக்கிறோமா இல்லையா என்பதை முடிவு எடுக்க நேரும்'' என்று பிரபாகரன் கெடு விதித்திருந்தார்.
அதிபர் சந்திரிகா, மார்ச் 24, ஏப்ரல் 1 மற்றும் 12 ஆகிய தேதிகளில், பிரபாகரனுக்கு எழுதிய கடிதங்களில் அரசுக்கு கெடு விதிப்பது, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் விஷயமென்றும், அது நட்புரீதியான சொல் ஆகாது என்றும், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது, தான் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என நிபந்தனை விதிக்கவில்லை என்றும், ஆனால் வழக்கில் அப்படித்தான் சொல்லப்படும் என்றும் (மார்ச் 24 கடிதத்தில்) தெரிவித்ததோடு, எரிபொருள், மீன்பிடித் தடையை (குறிப்பிட்ட பகுதி தவிர) நீக்கவும் முடிவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இவை சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு (ஏப்ரல் 14-ல்) நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு வெளியே பன்னாட்டு நிதியகங்களிலிருந்து பெறப்படும் நிதியாதாரங்களைக் கொண்டு, ஆயுதங்கள் வாங்கி குவிக்கப்படுவதான, விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அவ்வாறு பெறப்படும் நிதி, மறு கட்டமைப்புக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் ஏப்ரல் 1 கடிதத்தில் கூறியிருந்தார்.
இவ்வாறு பிரபாகரனுக்கும், அதிபர் சந்திரிகாவுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்குமான 86 கடிதங்கள் பெறப்பட்ட நிலையில், (சந்திரிகா -பிரபாகரனிடையே மட்டும் 46 கடிதங்கள்) ஏப்ரல் 19-ஆம் தேதி இறுதிக்குள், புலிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இறுதிக்கெடு விதித்து பிரபாகரனால் எழுதப்பட்டது. அதன்பிறகு கடிதம் இல்லை.
அமைதிப் பேச்சு-அமைதி என்று கூறி, அதிபராக வந்த சந்திரிகா, நாளடைவில் வழக்கமான கடிதப் போக்குவரத்தில், வெறும் வார்த்தைகளில் மட்டுமே நம்பிக்கையை வளர்த்தார். அறிவிப்புகள், மக்களைச் சென்றடைய முடியாத நிலை. ராணுவ முகாம்களின் நெருக்கடிகள் வழக்கம்போல் தொடரவே செய்தன. இதற்கும் அப்பால் ராஜீவ் காந்தி கொலையில் பிரபாகரனும், பொட்டு அம்மானும், அகிலாவும் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களைப் பிடித்துத் தருமாறு இந்தியா அளித்த நெருக்குதல் காரணமாகவும் சந்திரிகா காலம் தாழ்த்தும் உத்திகளில் இறங்கியதாகவும், விமர்சனங்கள் உண்டு. ஆறு மாதங்கள் உருண்டோடின.

நாளை: மூன்றாவது ஈழப் போர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக