செவ்வாய், 21 ஜூலை, 2009

"மன்மோகன் கருத்துகளால் இந்தியா- இலங்கை இடையே
புதிய நட்புறவு மலர வாய்ப்பு'



கொழும்பு, ஜூலை 20: "விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்றது குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த ஆக்கப்பூர்வமான கருத்துகள், இரு நாடுகளுக்கு இடையே புதிய நட்புறவு ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் சூழல் நிலவியது. இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் தெரிவித்த கருத்துகளால், இரு நாடுகளுக்கு இடையே புதிய நட்புறவு மலர்வதற்கு வழியேற்பட்டுள்ளது' என அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை நாளிதழில் திங்கள்கிழமை வெளியான தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தலையங்கத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எகிப்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அணி சாரா நாடுகள் மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவும் சந்தித்துப் பேசினர். அப்போது "விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நீங்கள் (ராஜபட்ச) வெற்றி பெற்று விட்டீர்கள். இதேபோல, இலங்கையில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவதிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்' என மன்மோகன் நம்பிக்கை தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடனான கடைசிக் கட்டப் போரின் போது, இந்தியா இதில் தலையிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வரும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அதோடு, இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு சந்தேகங்களும், தவறாகப் புரிந்துகொள்ளுதலும் ஏற்பட்டன. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், இந்தியப் பிரதமர் ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

ஈழத் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்வதற்கும் உயிருடன் புதைத்ததற்கும் எரிகுண்டுகள், கொத்துக் குண்டுகள், நவீன படைக் கருவிகள் அளித்ததற்கும் சதித் திட்டங்கள் வகுத்து வழிகாட்ட நாராயணன்கள் மேனன்களை அனுப்பியதற்கும் பேரழிவுகளைத் தடுக்க அமெரிக்கா முதலான நாடுகள் முன் வந்துபோது அவற்றை வெற்றிகரமாகத் தடுத்ததற்கும் பன்னாட்டு அவைகளில் சிங்களக் கொடுங்கோன்மைக்கு ஆதரவாக வாக்ஙகுகளைத் திரட்டியதற்கும் திமுகவின் வாயையும் கைகளையும் கட்டிப் போட்டதற்கும் அடுத்த 'லங்காரத்னா விருது' இவருக்குத்தான்! கொடுமையடா கொடுமை! படுகொலைகளில் பங்காளிகளுக்கோ பெருமையடா பெருமை! உண்மையில் இது சிறுமையடா சிறுமை!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/21/2009 4:15:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக