medium of instruction லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
medium of instruction லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

தமிழால் ஆட்சியை ப் பிடித்தவர்கள் தமிழை க் கண்டுகொள்ளவில்லை

தமிழால் ஆட்சியை ப் பிடித்தவர்கள் தமிழை க் கண்டுகொள்ளவில்லை

சென்னை: ""தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழை கண்டுகொள்ளவில்லை,'' என, தமிழறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் நேற்று, தமிழறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில், முன்னாள் துணைவேந்தர்கள், பொன்னவைக்கோ, முத்துக்குமரன், முன்னாள் காங்., தலைவர் குமரிஅனந்தன், தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழறிஞர்கள் கூறியதாவது: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தாய்மொழி, பயிற்று மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே இது தலைகீழாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் பயிற்று மொழி, தமிழ்மொழியாக இருந்து வந்தது. விதிவிலக்காக ஆங்காங்கு ஒரு சில தனியார் பள்ளிகள் மட்டுமே இயங்கி வந்தன. இப்போது, ஆங்கில வழியில் பயிற்று விக்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகி விட்டன.

கண்டுகொள்ளவில்லை: தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க வேண்டிய ஆட்சியாளர்கள், ஆங்கில கல்விக் கொள்கையை செயல்படுத்தி வருவதால், தனியார் பள்ளிகள் பெருகி விட்டன. இதனால், தமிழகத்தில் எங்கும் ஆங்கிலமே கோலோச்சி நிற்கிறது. இதை தடுத்து நிறுத்த பல களப் போராட்டங்கள் நடத்தியும், இறங்கி வரவே இல்லை. இன்று வரை ஆங்கில வழிக் கல்வி பயிற்றுமொழியே அதிகரித்து வருகிறது.

அரசுக்கு கண்டனம்: இன்று வரை தனியார் பள்ளிகளில் மட்டுமே முதன்மை பெற்று வந்த ஆங்கில வழி பயிற்று மொழியை, தற்போது தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் கொண்டு வர முயன்று வருகிறது. அண்மையில், தமிழக அரசு, அரசு துவக்கப்பள்ளிகளில் பலவற்றை தேர்ந்தெடுத்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க முடிவு எடுத்து, செயல்பட்டு வருகிறது. இச்செயல்பாடு, அனைத்து அரசுப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வி ஆதிக்கம் அதிகமாகி, தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமில்லாத நிலைமையை ஏற்படுத்தும்.

உளவியல் காரணம்: நெதர்லாந்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ழாக் வெர்பைலே, கற்றலின் அடிப்படையை மொழியே தீர்மானிக்கிறது. பார்ப்பவை, கேட்பவை மூலமாகவே குழந்தைகள் தொடர்புபடுத்திக் கொள்ள பழகிக் கொள்கின்றனர். முதலில் வரன்முறைப்படுத்தாத தாய்மொழிக் கல்வி அறிமுகம், பின் முறைப்படுத்தப்பட்ட தாய்மொழிக் கல்வி. அதன் பின், மொழி அறிமுகம், தொடர்ந்து மூன்றாவது மொழி அறிமுகம் என, படிப்படியாக தொடரப்படும் கல்வி முறையே, குழந்தைகளுக்கு எளிமையானதாக இருக்க முடியும். தாய்மொழிப் புலமை இன்றி, ஆழமான அறிவாற்றலும் பெற முடியாது,'' என்றார்.

பிற நாடுகளை பாருங்கள்: ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு, இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து மேற்படிப்புக்கு செல்லும் அனைவரும், முதலில் ஒரு பருவத்தில் அந்நாட்டு மொழியினைப் பயின்று, பிறகு அம்மொழி வழியாகவே உயர்கல்வி பெற்று, ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகின்றனர். ஆனால், தமிழக அரசு துவக்கப்பள்ளி மாணவர்களிடையே ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர முயற்சிப்பது தவறானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

செவ்வாய், 25 மே, 2010

'தமிழ் வழி மருத்துவப்​ ப​டிப்பு வேண்டும்': முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்



சென்னை, ​​ மே 24:​ மருத்துவப் படிப்பை தமிழ் வழியில் கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.​ இச்சங்கத்தின் மாநிலக் குழுக்கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது.​ கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள்:​ தமிழ்வழி படித்தோருக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.​ 8-வது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளிலும் மக்களவையில் பேசுவதற்கும்,​​ உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.​ சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்காடு மொழியாக்கிட மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.​ தமிழ் ஆட்சிமொழி குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து அரசாணைகளையும் அரசு நிர்வாகத்திலும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் நிர்வாகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.​ மாறிவரும் காலச்சூழலுக்கும் கணினிக்கும் ஏற்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவர உரிய மொழி அறிஞர்களைக் கொண்ட குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொல்காப்பியம் தொடங்கி இடைக்கால இலக்கியங்களை ஊடக ஆய்வு மேற்கொண்டு தமிழிசை இயல் உருவாக்கப்பட வேண்டும்.​ இதன் தொடர்ச்சியாக முந்தைய முன்னோடி ஆய்வுகளை முன்வைத்தும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டும் இசைத்தமிழ் வரலாறு எழுதப்பட வேண்டும்.​ தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் தவிர தமிழகத்தில் வேறு எங்கும் நாடகத்துறை இல்லை.​ நாடகத்துறை தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திலும் ஆய்வு நிலையில்தான் உள்ளது.​ தமிழ்த்துறையில் நாடகத்துறையை இணைப்பது அவசியம்.​ கூத்து மற்றும் நாடகப் பயிலரங்குகளை தமிழ்ப் பாடத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும்​ புதிதாக அனுமதிக்கப்படும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ற விகிதத்தில் தமிழாசிரியர்களை நியமிக்க தமிழக அரசு விதித்துள்ள தடையாணையை நீக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்

உண்மைத் தமிழர்களின் உள்ளக்கிடக்கையை எதிரொலிக்கும் இக் கோரிக்கைளை அரசு உடனே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். செம்மொழி மாநாட்டின் பயனாகச் செந்தமிழ் எல்லா இடங்களிலும் ஆட்சி செலுத்தும் நிலை உருவாக வேண்டும். தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழே தலைமை பெற வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/25/2010 3:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்