புதுக்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுக்கோட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஏப்ரல், 2013

மனைவிக்குக் கோவில்: மனைவி சிலையை வழிபடும் கணவன்





http://img.dinamalar.com/data/gallery/gallerye_001959625_688958.jpg

பாச மனைவிக்கு வீட்டில் எழுப்பிய கோவில்: மனைவி சிலையை வழிபடும் கணவன்



புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மனைவி மீது கொண்ட பற்றுதல் காரணமாக, அவரது மறைவுக்கு பின் வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக்கி அதில் மனைவியின் சிலையை வைத்து வழிபட்டு வரும், 78 வயதான முதியவரின் பாசப்பிணைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

புதுக்கோட்டை அடுத்த உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா, 78. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி செண்பகவல்லி. இவர்கள், பத்து குழந்தைகளை (ஆண்-5, பெண்-5) பெற்றெடுத்தனர். இவர்களில் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பருவத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர்.தற்போது மகேந்திரவர்மன், நரேந்திரவர்மன், சவரணபவன், கணேசன் என, நான்கு ஆண் பிள்ளைகள், குழல்வாய்மொழி, அருள்மொழி, பொய்யாமொழி, வாசுகி என, நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

பிள்ளைகளில் மூத்தமகன் மகேந்திரவர்மன், இளைய மகன் கணேசன் ஆகியோர் மட்டுமே உசிலங்குளத்தில் உள்ள தந்தை சுப்பையா வீட்டில் அவருடன் வசித்துவருகின்றனர்.திருமணத்துக்கு பின், 48 ஆண்டு வரை, இணை பிரியா தம்பதியராக சுப்பையா - செண்பகவல்லி வாழ்க்கை நடத்திவந்தனர். சிறுநீரக கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்ட செண்பகவல்லி, 2006 செப்.,7ல் மரணமடைந்தார்.
மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மனம் வருந்திய சுப்பையா அதிலிருந்து மீள்வதற்காக ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களை படிப்பது வழக்கம். ராமாயணத்தில் சீதையின் உருவபொம்மையை வைத்து ராமன் அஸ்வமேத யாகம் நடத்திய வரலாற்றுத் தகவல் சுப்பையா நினைவுக்கு வந்தது.

மனைவியின் மீது கொண்ட பாசத்தால், பொம்மையை ராமன் அஸ்வமேத யாகம் நடத்தியது போல, தன்னுடைய அன்பு மனைவிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உயரிய எண்ணம் உருவானது.ஆரம்பத்தில் மனைவியின் படத்தை வைத்து வணங்கி வந்த சுப்பையா, நாளடைவில் அவருக்கு சிலை வடிக்க முடிவு செய்தார். இதற்காக திருச்சியில் உள்ள ஒரு பாத்திரக்கடை உரிமையாளரை (மங்கள் அன்ட் மங்கள்) தொடர்புகொண்டு தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.அவரது ஏற்பாட்டில் கும்பகோணத்தைச் சேர்ந்த சிற்பி ஒருவரிடம் ஐம்பொன்னால் ஆன சிலை வடிவமைக்கப்பட்டது. பின்னர் சிலையை வைத்து வழிபடுவதற்காக வீட்டின் ஒரு பகுதி கோவிலாக மாற்றப்பட்டு, அதில் இரண்டு அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதன்மீது மூன்றரை அடி உயரம் கொண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. கோவில் மற்றும் சிலைக்காக அவர் மூன்று லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளார்.

மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கூடிய கோவில் எழுப்பிய மகிழ்ச்சியில் சுப்பையா நாள்தோறும் காலை, 6 மணிக்குள் எழுந்து குளித்துவிட்டு, விபூதி பூசியபின் கோவிலுக்கு சென்று மனைவியின் சிலைக்கு விளக்கேற்றியும், சூடம் காண்பித்தும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.தனக்கும் சரி, பிள்ளைகளுக்கும் சரி, ஏதாவது காரியங்கள் கைகூட வேண்டும் என்பதற்காக மனைவின் சிலை முன் நின்று, வேண்டுவதையும் கணவர் சுப்பையா வழக்கமாக கொண்டுள்ளார்.மனைவியின் பிறந்தநாள் மற்றும் நினைவு(திதி) நாள் அன்று அன்னதானம் வழங்கி வருகிறார். அம்மா மீதான அன்பு காரணமாக, அப்பா நடத்தும் நிகழ்ச்சிகளில் அவரது பெண் குழந்தைகள் குடும்பத்துடன் பங்கேற்றுவருகின்றனர். ஆரம்பத்தில் தவிர்த்த ஆண் பிள்ளைகள், தற்போது ஆதரவு தெரிவிப்பதாக சுப்பையா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:திருமணத்துக்கு பின், 48 ஆண்டு வரை, நானும் என் மனைவி செண்பகவல்லியும், இணை பிரியா தம்பதியினராக வாழ்ந்துவந்தோம். பத்து குழந்தைகளை பெற்றெடுத்தோம். இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. என் மனைவி செண்பகவல்லி நோய்வாய்பட்டு, 2006ம் ஆண்டு இறந்துவிட்டார். மனைவியின் மரணம் என்னை நிலைகுலைய செய்தது. அவருக்கு ஏதாவது செய்தாகவேண்டும் என, எண்ணினேன். அப்போது ராமாயணத்தில் சீதையின் பொம்மையை வைத்து, ராமன் அஸ்வமேத யாகம் நடத்தியது நினைவுக்கு வந்தது.ராம பக்தன் என்பதால் அவரைப் போன்று மனைவிக்கு சிலை வடித்து வழிபட முடிவு செய்தேன். வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக்கி அதில் மூன்றடி உயரம் உள்ள மனைவி செண்பகவல்லியின் ஐம்பொன் சிலையை வைத்து வணங்கி வருகிறேன். என் வேண்டுதல்களை அவர் நிறைவேற்றி வருகிறார்.இவ்வாறு கண்கலங்க கூறினார்.

மனைவிக்கு ஐம்பொன் சிலையுடன் கோவில் எழுப்பி வழிபட்டுவரும், 78 வயதான முதியவரின் பாசப்பணிவிடைகள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.




சனி, 21 ஜூலை, 2012

புதுக்கோட்டை அருகே சங்கக் காலத் தமிழ்ப்பிராமி நடுகல்!

புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி நடுகல்!



நடுகல்லை பார்வையிட்ட தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. திருமலை உள்ளிட்டோர். (உள்படம்) நடுகல்லில் உள்ள வரிகள்.
தஞ்சாவூர், ஜூலை 20: புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட நடுகல்லை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.  கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லை ஆய்வு செய்ததன் மூலம் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த வேளாண், கால்நடை மேய்ப்புச் சமூக மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது என்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை.  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது:  இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் - தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் த. தங்கதுரை, எஸ். பாண்டியன், அ. மோசஸ் ஆகியோர் புதுக்கோட்டை பகுதியில் கடந்த வாரம் கள ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டைக்கு அருகே துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நடுகல்லை கண்டெடுத்தனர்.  இதையடுத்து, புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் க. ராஜன், இந்திய தொல்லியல் துறை தெற்கு வட்டார இயக்குநர் து. தயாளன் உள்ளிட்டோர் அதைப் பார்வையிட்டனர்.  இந்த நடுகல்லில் கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இது இந்தியக் கல்வெட்டியலில் மிக முக்கியமானது. தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 5-வது கல்வெட்டு இது.  நம் நாட்டிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்களில் காலத்தால் முற்பட்ட நடுகல்களில் இதுவும் ஒன்று என்றார் அவர்.  இந்த நடுகல்லை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு. ராசவேலு, ந. அதியமான், வி. செல்வகுமார், ம. பவானி, முன்னாள் பேராசிரியர் எ. சுப்பராயலு, கல்வெட்டு ஆய்வாளர் வெ. வேதாசலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து ராசவேலு தெரிவித்தது:  தலா 2 அடி அகலம், நீளமுடைய இந்த நடுகல் முக்கோண வடிவில் உடைக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது. இதில் கோவென் கட்டிற் நெதிர, ணறு பொன்கொங்கர் விண்ணகோன், ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு, அங்கபடைத தாணையன் கணங், குமரன் கல்  என 5 வரிகள் எழுதப்பட்டுள்ளன.  அதாவது, கோவன் கட்டி என்பவருக்கு அடுத்து வந்த பொன் கொங்கர் விண்ணகோன் காலத்தில் அதவன்னூரைச் சார்ந்த கணங்குமரன் என்பவர் ஆநிரைப் போரில் பசுக் கூட்டத்தைக் கைப்பற்றி இறந்தமைக்காக எடுக்கப்பட்ட நடுகல்.  கணங்குமரன் என்பவர் மெய்க்காவல் படைத் தலைவராகவும், கோட்டையைக் காக்கும் தலைவனாகவும் இருந்துள்ளது இந்தக் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. தாணையன் என்பது கோட்டை அல்லது அரணைக் காக்கும் தலைவன் எனப் பொருள்படும். மேலும், அங்கப் படை என்பது அக்காலத்தில் இருந்த மெய்க்காவல் படையைக் குறிக்கும்.  இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பொற்பனைக்கோட்டை, சங்கக் காலத்தில் கோட்டைப் பகுதியாக இருந்துள்ளது. இப்போதும், இந்தக் கோட்டையின் இடிபாடுகள் காணப்படுகின்றன.  எனவே, இந்தக் கோட்டையைக் காக்கும் தலைவனாக இப்போரில் இறந்த கணங்குமரன் இருந்திருக்க வேண்டும்.  இந்த நடுகல் கல்வெட்டில் உள்ள தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளின் அமைப்பைப் பார்க்கும் போது, அரச்சலூர், அம்மன்கோவில்பட்டி, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.  எழுத்தமைப்புப்படி, இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டாகவும், கரூர் அருகே புகலூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கல்வெட்டுக்குப் பிற்பட்டதாகவும் உள்ளது என்றார் அவர்.  இந்தக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ள கட்டி மரபினர் குறித்து அகநானூறில் உள்ள பாடல் வரிகள் மூலம் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர் வ. குருநாதன் விளக்கினார். பின்னர், நடுகல்லை கண்டெடுத்த மாணவர்களையும், ஆய்வு செய்த பேராசிரியர்களையும் துணைவேந்தர் பாராட்டினார்.