நடுகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நடுகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 நவம்பர், 2012

திருவில்லிபுத்தூர் : புலிகளைக் கொன்ற வீரர்களின் நடுகல்


திருவில்லிபுத்தூர் அருகே புலிகளைக் கொன்ற வீரர்களின் நினைவு நடுகல்
First Published : 13 November 2012 01:04 PM IST


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, இலந்தைக்குளத்திற்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள சுரைக்காய்பட்டியில் பல புலிகளைக் கொன்ற வீரர்களின் நினைவாக 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் உள்ளது.
இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட கற்கள் இந்தியாவின் வடக்கே இமாச்சலப் பிரதேசம் முதல் தெற்கே கேரளா மாநிலம் வரை காணப்படுகிறது. பண்டைக்கால மனிதன் வீரத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ வேண்டியிருந்தமையால், வீரம் காட்டி வீழ்ந்தவன் நினைவாகக் கற்கள் அமைத்திருக்கக்கூடும். சங்க இலக்கியங்கள் நடுகல் பற்றி விரிவாகக் கூறுகின்றன.
புலிகளுடன் சண்டையிட்டு இறந்த வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்ட கற்கள் தமிழகப் பகுதிகளில் காணப்படுகின்றன. புலிகளைத் தேடிச் சென்று வேட்டையாடிக் கொன்றதற்கான சான்றினைத் தமிழகப் பகுதியிலுள்ள வீரக்கற்கள் காட்டவில்லை. நாட்டிற்குள் வந்த புலிகளைத் தற்காப்பின் பொருட்டுக் கொன்றதை வீரக்கற்கள் காட்டுகின்றன. வீரர்கள் புலிகளைக் குத்திக் கொன்றதன் நினைவாக எடுக்கப்பட்ட கற்கள் புலிக்குத்திக் கற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சுரைக்காய்பட்டியில் உள்ள நடுகல் கி.பி. 10-ம் நூற்றாண்டிற்குப் பின் எழுப்பப்பட்ட வீரக்கற்களுள் பல புலிகளைக் கொன்ற வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டனவாகும். இந் நடுகல்லில் எவ்வித எழுத்துக்களும் இல்லை. மேலும் இப் பகுதியில் பிற்காலப் பாண்டியர்களின் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
நடுகல்லில் உள்ள வீரனுக்கு வலப்புறத்தில் மூன்று பெண்கள் காட்சியளிக்கின்றனர். வீரன் தனது மார்பில் நீண்ட ஆரமும், இடுப்பில் கச்சையுடனான பூவாடையும், இடுப்பில் குறுவாளும், இரு கால்களிலும் வீரத்தண்டையும் அணிந்துள்ளான். வீரனுக்கு முன்பு வேட்டை நாய் வாலை நிமிர்த்திக் கொண்டு, புலியின் வயிற்றில் தாக்குவது போன்று காணப்படுகிறது. புலியை வீரன் தனது வேலால் குத்துவது போன்றும், அதனைத் தாங்கிக் கொண்டு இரண்டு பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி அவனைத் தாக்குவது போன்றும் சிற்பத்தில் காணப்படுகிறது.
முதல் பெண்ணின் மார்பில் ஆடையின்றி, இடுப்பில் மடிப்புடன் கூடிய புடவையை அணிந்து காணப்படுகிறார். இரண்டு கைகளால் வணங்குவது போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.



இரண்டாவது பெண் இடுப்பு முதல் பாதம் வரை மடிப்புப் புடவை அணிந்துள்ளார். வலது கை அபயக்குறியுடனும், இடது கையை இடுப்பில் வைத்தும் காட்சியளிக்கிறாள். மூன்றாவது பெண்ணும் இடுப்பு முதல் பாதம் வரை மடிப்பு ஆடை உடுத்தியும், வலது கை அபயக்குறியுடனும், இடது கையை இடுப்பில் வைத்தும் காட்சியளிக்கிறார்.





   
  • புலிகுத்தி மண்டபத்தின் மேற்பகுதியில் உள்ள மீன் சின்னம்.
  • புலிகுத்தி வீரனின் நடுகல்லுக்கு அருகில் குறுநிலத் தலைவரும் அவரது மனைவியும்.
  •  
  • இடது: சுரைக்காய்பட்டி புலிகுத்தி வீரன் மண்டபத்தில் முதல் தூணினி்ன் (கீழ்பகுதி) வடக்குப் பகுதி. வலது: முதல் தூணின் (கிழக்கு) தெற்குப் பகுதி.
  • சுரைக்காய்பட்டியில் உள்ள புலிகுத்தி நடுகல்.
  • சுரைக்காய்பட்டியில் உள்ள நடுகல் மண்டபத்தின் நுழைவாயிலின் கிழக்குப் பகுதியில் முதல் தூணின் தெற்குப் பகுதியில் மேலே உள்ள சிவலிங்கம், கீழே அதனை வழிபடும் பக்தர்.













  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  •  
  • படப்பதிவுகளில் தவறு நேர்ந்துள்ளது. மூலத்தைப் பார்க்கவும் 

சனி, 21 ஜூலை, 2012

புதுக்கோட்டை அருகே சங்கக் காலத் தமிழ்ப்பிராமி நடுகல்!

புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி நடுகல்!



நடுகல்லை பார்வையிட்ட தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. திருமலை உள்ளிட்டோர். (உள்படம்) நடுகல்லில் உள்ள வரிகள்.
தஞ்சாவூர், ஜூலை 20: புதுக்கோட்டை அருகே சங்க காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட நடுகல்லை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.  கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லை ஆய்வு செய்ததன் மூலம் பண்டைய தமிழகத்தில் வாழ்ந்த வேளாண், கால்நடை மேய்ப்புச் சமூக மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது என்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை.  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்தது:  இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் - தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் த. தங்கதுரை, எஸ். பாண்டியன், அ. மோசஸ் ஆகியோர் புதுக்கோட்டை பகுதியில் கடந்த வாரம் கள ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டைக்கு அருகே துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நடுகல்லை கண்டெடுத்தனர்.  இதையடுத்து, புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் க. ராஜன், இந்திய தொல்லியல் துறை தெற்கு வட்டார இயக்குநர் து. தயாளன் உள்ளிட்டோர் அதைப் பார்வையிட்டனர்.  இந்த நடுகல்லில் கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இது இந்தியக் கல்வெட்டியலில் மிக முக்கியமானது. தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 5-வது கல்வெட்டு இது.  நம் நாட்டிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்களில் காலத்தால் முற்பட்ட நடுகல்களில் இதுவும் ஒன்று என்றார் அவர்.  இந்த நடுகல்லை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சு. ராசவேலு, ந. அதியமான், வி. செல்வகுமார், ம. பவானி, முன்னாள் பேராசிரியர் எ. சுப்பராயலு, கல்வெட்டு ஆய்வாளர் வெ. வேதாசலம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  இதுகுறித்து ராசவேலு தெரிவித்தது:  தலா 2 அடி அகலம், நீளமுடைய இந்த நடுகல் முக்கோண வடிவில் உடைக்கப்பட்டு, எழுதப்பட்டுள்ளது. இதில் கோவென் கட்டிற் நெதிர, ணறு பொன்கொங்கர் விண்ணகோன், ஆ எறிஇத்து ஏவ அதவ்வனரு, அங்கபடைத தாணையன் கணங், குமரன் கல்  என 5 வரிகள் எழுதப்பட்டுள்ளன.  அதாவது, கோவன் கட்டி என்பவருக்கு அடுத்து வந்த பொன் கொங்கர் விண்ணகோன் காலத்தில் அதவன்னூரைச் சார்ந்த கணங்குமரன் என்பவர் ஆநிரைப் போரில் பசுக் கூட்டத்தைக் கைப்பற்றி இறந்தமைக்காக எடுக்கப்பட்ட நடுகல்.  கணங்குமரன் என்பவர் மெய்க்காவல் படைத் தலைவராகவும், கோட்டையைக் காக்கும் தலைவனாகவும் இருந்துள்ளது இந்தக் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. தாணையன் என்பது கோட்டை அல்லது அரணைக் காக்கும் தலைவன் எனப் பொருள்படும். மேலும், அங்கப் படை என்பது அக்காலத்தில் இருந்த மெய்க்காவல் படையைக் குறிக்கும்.  இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பொற்பனைக்கோட்டை, சங்கக் காலத்தில் கோட்டைப் பகுதியாக இருந்துள்ளது. இப்போதும், இந்தக் கோட்டையின் இடிபாடுகள் காணப்படுகின்றன.  எனவே, இந்தக் கோட்டையைக் காக்கும் தலைவனாக இப்போரில் இறந்த கணங்குமரன் இருந்திருக்க வேண்டும்.  இந்த நடுகல் கல்வெட்டில் உள்ள தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளின் அமைப்பைப் பார்க்கும் போது, அரச்சலூர், அம்மன்கோவில்பட்டி, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளுக்கு முற்பட்டதாக உள்ளது.  எழுத்தமைப்புப்படி, இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டாகவும், கரூர் அருகே புகலூரில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கல்வெட்டுக்குப் பிற்பட்டதாகவும் உள்ளது என்றார் அவர்.  இந்தக் கல்வெட்டில் இடம் பெற்றுள்ள கட்டி மரபினர் குறித்து அகநானூறில் உள்ள பாடல் வரிகள் மூலம் பல்கலைக்கழக இலக்கியத் துறைத் தலைவர் வ. குருநாதன் விளக்கினார். பின்னர், நடுகல்லை கண்டெடுத்த மாணவர்களையும், ஆய்வு செய்த பேராசிரியர்களையும் துணைவேந்தர் பாராட்டினார்.