வெள்ளி, 11 அக்டோபர், 2013

சாலையிலும் இயங்கும் சரக்குத் தொடரிப் பெட்டிகள் அறிமுகம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_824096.jpg

சாலையிலும் இயங்கும் வகையில் சரக்கு த் தொடரிப் பெட்டிகள் திசம்பரில் அறிமுகம்
இரயில் பாதையிலும், சாலையிலும் செல்லும் சரக்கு ரயில் போக்குவரத்து, "டோர் டூ டோர்' என்ற பெயரில், முதற்கட்டமாக, சென்னை புதுடில்லி இடையே, வரும் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லக் கூடிய, சரக்குப் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. பஸ், லாரி சரக்குப் போக்குவரத்தை விட, ரயில்களில் ஏற்றப்படும் சரக்குகள், குறிப்பிட்ட நேரத்திற்கு, செல்ல வேண்டிய இடத்தை அடைகின்றன என்பதால், ரயில் சரக்கு போக்குவரத்திற்கு, அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்து மூலம், இந்திய ரயில்வேக்கு, அதிக வருவாயும் கிடைத்து வருகிறது. எனினும், சரக்கு அனுப்ப வேண்டிய இடத்திலிருந்து, ரயில் நிலையத்திற்கு எடுத்து வருவதில் சிக்கல், நேரமின்மை, சரக்கை பாதுகாப்பதில் ஏற்படும் பிரச்னைகள், சென்று சேர வேண்டிய இடத்திற்கு, பெட்டியிலிருந்து சரக்கை இறக்கி அனுப்புவதில் ஏற்படும் தாமதம், ஏஜன்டுகள் கட்டணம் ஆகிய பிரச்னைகளை கருத்தில் கொண்டு, ரயில் பெட்டியையே, சாலைப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் வகையிலான திட்டம் குறித்து, ரயில்வே சிந்தித்தது. அதன்படி, பெட்டிகளின் அடியில், இரும்புச் சக்கரத்துக்குப் பக்கத்தில், டயர் சக்கரம் பொருத்தி, அதன் உதவியுடன் சாலையில் இயக்கிக் கொள்ளும் வகையில், பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் பெட்டிகள் பயணிக்கும் போது, மேலேறிய நிலையில் இருக்கும் டயர் சக்கரங்கள், சாலையில் இறங்கும் முன், கீழிறங்கும். தார் சாலையில், வாகன இன்ஜின் உதவியுடனும், தண்டவாளத்தில் மின்சார ரயில் இன்ஜின் மூலமும், இவை இயங்கும். மொத்தம், 51 பெட்டிகள் இவ்வகையில் மாற்றப்பட்டுள்ளன. முதல் முறையாக, சென்னை - புதுடில்லி இடையே, "டோர் டூ டோர்' சரக்கு ரயில் போக்குவரத்து திட்டம், வரும் டிசம்பரிலிருந்து துவங்குகிறது. இந்திய ரயில்வேயுடன், கிர்லோஸ்கர் பெனுமேட்டிக் நிறுவனம் இணைந்து, இப்புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த நவீன சரக்கு ரயிலில் இணைக்கப்படும், 51 பெட்டிகளிலும், 1,200 டன்கள் வரை சரக்குகள் ஏற்றிச் செல்லாம். இந்த சரக்கு ரயில் போக்குவரத்திற்காக, சென்னை பேசின் பிரிட்ஜ் யார்டில், ரயில்வே பணியாளர்கள், 126 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த வசதி குறித்து, ஏஜன்ட்கள் கூறியதாவது:
எங்கள் அலுவலகத்தில் இருந்து, சரக்குப் பெட்டகங்களை பெரிய லாரிகளில் ஏற்றி, ரயில் நிலையத்திற்கு அனுப்பி, லாரியிலிருந்து ரயிலில் ஏற்ற வேண்டும். இந்தப் பணிகள் முடியும் வரை, நாங்கள், கூடவே இருக்க வேண்டும். இனி அறிமுகமாகக் கூடிய சரக்கு ரயிலில், பெட்டகங்களை, நேரடியாக, ரயில் பெட்டிகளில் ஏற்றி விடுவதுடன், எங்கள் பணி முடிந்து விடும். சரக்கு ஏற்று, இறக்கு செலவு, சரக்கு காத்திருக்கும் இடத்திற்கான வாடகை, கண்காணிப்பு ஆட்கள் செலவு குறைவதுடன், சரக்குகள் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று விடும். இந்த சரக்கு ரயில் போக்குவரத்து துவங்க, ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- தினமலர் செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக