புதன், 20 மார்ச், 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவந்திருக்க வேண்டும்: உருத்திரகுமாரன்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவந்திருக்க வேண்டும்: உருத்திரகுமாரன்

தெற்காசிய பிராந்தியத்தில், அதிகார மையமாகத் திகழும் இந்தியாதான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்திரகுமாரன். இது குறித்து சென்னையில் இணையவழி காணொளி மூலம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமை சபையினை மையப்படுத்திய இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாகக் கருத்தபடுகிறது. மேலும், இந்திய மத்திய அரசினை நோக்கி தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தம் வலுத்துவரும் நிலையில், அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிரான வலுவானதொரு தீர்மானத்தினை இந்தியா கொண்டு வந்தால், உலக சமூகமும் அதனைப் பின்தொடரும் என்றார் அவர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான அவைப் பிரதிநிதி, தமிழக தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி ஏற்பாட்டின் பேரில் இந்த ஊடக மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய ருத்திரகுமாரன், தமிழகத்தில் உணர்வெழுச்சியுடன் நடந்துவரும் 'மாணவர் போராட்டத்தை' பாராட்டினார். மாணவர்கள் மட்டுமே ஒரு இனத்தின் விடுதலைக்கு, எழுச்சியை ஏற்படுத்தும் சக்திகள். மாணவர்களால் மட்டுமே, இந்திய அரசை நிர்ப்பந்திக்க முடியும் என்றார்.
இலங்கையில் ஈழத் தமிழர் மீது நடந்தது ஒரு 'இனப் படுகொலையே' என்பதை பலமுறை வலியுறுத்திப் பேசிய அவர், அத்தகைய இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.மனித உரிமைச் சபையில், இந்திய அரசு 'அனைத்துலக சுதந்திரமான விசாரணையை' முன்னெடுக்க வலியுறுத்தும் வகையில், தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை, தாய்த் தமிழக மாணவர் போராட்டங்கள் மூலமும், மக்கள் போராட்டங்கள் மூலமும், வலியுறுத்த வேண்டும் என்றார்.
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, 'வலுவான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிட்டால் ஐ.மு.கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் எனக் கூறியிருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்த முடிவில் திமுக தலைவர் உறுதியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி, 'அனைத்துலக விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை' ஆகியவற்றைக் கோரியிருப்பது பாராட்டத்தக்கது. அதேபோல, தமிழக ஆளுநர் உரையிலும், முதல்வரின் உரையிலும், 'இலங்கையில் நடந்தது ஒரு இனப் படுகொலையே' என்பதை கோரியிருப்பது வரவேற்கத் தக்கது; மத்திய அரசை தமிழகம் நிர்பந்திக்க வேண்டும் எனக் கூறினார்.
உலக நாடுகள் இலங்கையை எதிரி நாடாகக் கருத தயாராயில்லை. தங்களது அரசின் நலனில் நின்று கொண்டு, இலங்கைப் பிரச்னையை அணுகுகின்றன. அதனால்தான் தெரிந்து இருந்தும், 'இனப்படுகொலை' என்ற சொல்லை பயன்படுத்த மறுக்கின்றன. அவர்கள் தங்களது அரசுகளின் நலனில் நின்று பார்ப்பதை மாற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களது நலனும், நமது கோரிக்கையும், சேரும் இடங்களை நாம் கண்டு அணுக வேண்டும்.
தாய்த் தமிழகம், தமிழீழத் தாயகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்ற மூன்று பிரிவுகளும் இணைந்து போராடும் சூழல் வந்துள்ளது. புலிகளின் தாகமாக இருந்த 'தமிழீழம்' இப்போது, உலகத் தமிழர்களின் தாகமாக மாறியுள்ளது என்று கூறிய ருத்திரகுமாரன், தமிழீழத்தைப் பெற்றுத் தர இந்திய முயற்சி செய்ய வேண்டும். தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவினால், அது காஷ்மீரை இந்தியா தனிநாடாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற குரலை வலுப்படுதுவதாக ஆகுமே? என்ற கேள்விக்கு இடமில்லை என்று கூறினார். காரணம், காஷ்மீர் விவகாரம் வேறு, ஆனால் இலங்கையில் நடப்பது 'இனப்படுகொலை' என்பதை உணர வேண்டும் என்றார்.
உலக நாடுகள் வடக்கு-கிழக்குப் பகுதிகளான தமிழர் தாயகப் பிரதேசங்களில் தங்களது தூதரகங்களைத் திறக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தார் ருத்திரகுமாரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக