ஞாயிறு, 10 ஜூன், 2012

மறைமுகமாக இந்தியைத் திணிக்க முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

நேரடியாகவே பல வகைகளிலும் இந்தித்திணிப்பு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதற்கு எதிராகத் தமிழக அரசியல் வாதிகள் என்ன செய்கிறார்கள்? ஆண்டிற்கு ஒரு முறை வீர வணக்க நாள் நடத்துவதாலோ எப்பொழுதாவது வீரமாகப் பேசுவதாலோ இந்தித் திணி்ப்பு நிற்காது.  தேசிய மொழிகளின் வளர்ச்சி குறித்தும்  இந்தித்திணிப்பால் அவை தாழ்வுறுவது குறித்தும் பிற மொழியாளர்களிடமும் விளக்கி  அவர்களுடன் இணைந்து வலிமையாக  எதிர்த்தால்தான் வெற்றி காண இயலும்.




மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

First Published : 10 Jun 2012 06:34:47 PM IST


புதுச்சேரி, ஜூன் 10: மறைமுகமாக இந்தியை திணிக்கும் முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.இது குறித்து அவர் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சிபிஎஸ்இ பாடத்திட்டம் 12-ம் வகுப்பு புத்தகத்தில் விடுதலைக்கு பின் இந்தியா என்ற தலைப்பில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கேலி செய்யும் சித்திரம் இடம் பெற்றுள்ளது. 1965-ம் ஆண்டு அப்போது நடைபெற்ற போராட்டத்தை எதிர்த்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வந்த கார்ட்டூனை பாடப்புத்தகத்தில் போட வேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசு உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து இந்த கார்ட்டூனை நீக்க வேண்டும். இதை போடுவதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக