செவ்வாய், 12 ஜூன், 2012

வேதியியலும் வேளாண்மையும்


சொல்கிறார்கள்



"படித்தது வேதியியல் பிடித்தது விவசாயம்!'

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அபிதா: என் அப்பா ஜெயராமன், வங்கி மேலாளர். வீட்டிற்கு நான் ஒரே பெண். சென்னை வைஷ்ணவா கல்லூரியில், பி.எஸ்சி., வேதியியல் படித்தேன். திருமண வயது வந்தபோது, கிராமத்தில் வாழ்க்கை அமைய வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்கு காரணம், சின்ன வயதில், கிராமத்தை மையமாக வைத்து வந்த நாவல்களை, நான் அதிகம் விரும்பி படித்தது தான். நான் எதிர்பார்த்தது போலவே, சத்தியமங்கலம் அருகிலிருந்து ஒரு வரன் வந்தது. உடனே, திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டேன்.திருமணத்திற்கு பின், என் புகுந்த வீட்டினரிடம், விவசாய வேலைகளை ஆர்வமாக கற்றுக் கொண்டேன். எங்கள் குடும்பத்திற்கு, 20 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. அதில், நெல், கரும்பு, மஞ்சள் பயிர் செய்கிறோம். நாட்டு மாடு, வெள்ளாடு என, கால்நடைகளையும் வளர்க்கிறோம். படிப்பறிவையும், கிராமத்து மக்களின் அனுபவ அறிவையும் இணைத்து விவசாயம் செய்தால், பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை இருந்தது. இதற்காக, அரசு மற்றும் தனியார் நடத்திய, விவசாய பயிற்சிகளில் தவறாமல் பங்கேற்றேன்.ஒரு முறை, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நடத்திய, விவசாயக் கருத்தரங்கில் பங்கேற்றேன். அதிலிருந்து, இயற்கை விவசாயத்தின் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டதுடன், அதைத்தான் எங்கள் வயல்களில் பின்பற்றுகிறோம்.விவசாயம் தவிர, மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்கிறேன். நாங்கள் உற்பத்தி செய்யும் பால், முழுக்க முழுக்க இயற்கையான பால் என்பதால், அதற்கு தனி மரியாதையே உள்ளது. அதேபோல், வெள்ளாடுகளை நன்றாக வளர்த்து, குட்டிகளாக விற்பனை செய்கிறேன்.தினமும் வயலுக்குப் போய், நடவு, களை, அறுவடை என்று அனைத்து வேலைகளையும் செய்வேன். மாட்டுத் தொழுவத்தில், மாடுகளுக்குத் தீனி போடுவது, சாணம் அள்ளி எருக்குழியில் கொட்டுவது, கோஜலம் சேமிப்பது என்று என் பொழுது மகிழ்ச்சியாக கழிகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக