புதன், 13 ஜூன், 2012

"வெற்றிக்கு அகவை தடையல்ல!' - சொல்கிறார்கள்


சொல்கிறார்கள்

"வெற்றிக்கு வயது தடையல்ல!'


தன் 34 வயதிலும், 18 வயது இளம் வீரர்களை சமாளித்து விளையாடி வரும் டென்னிஸ் வீராங்கனை ரூஷ்மி: என் இளமைப் பருவம், 80 களில் கடந்தது. என் அப்பா, தோல் ஏற்றுமதி தொழிலில் இருந்தார். அம்மா கட்டுமானப் பொறியியலில் விரிவுரையாளர். நான் மற்றும் தம்பி என அழகான குடும்பம். என் பெற்றோருக்கு விளையாட்டில், அதிக ஆர்வம் உண்டு. இருவரும் வேலைக்குச் சென்றதால், வீட்டில் நான் தனித்திருக்கும் பொழுதுகளைத் தவிர்க்க, ஆறு வயதிலேயே, டென்னிஸ் வகுப்பிற்கு அனுப்பினர். பொழுதுபோக்காக இல்லாமல், போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு, ஆர்வம் வளர்த்தேன். டென்னிசில், நான் சீனியர் பிரிவிற்கு போனபோது, பல போட்டிகளில் ஜெயித்தாலும், முக்கியமான போட்டிகளில், தோற்றுக் கொண்டே இருந்தேன். எங்கு, எதில் தப்பு என, சுய பரிசோதனை செய்தேன். அப்போது தான் புரிந்தது... எல்லா ஆட்டங்களிலும், 14 வயதுப் பெண்ணிற்கே உரிய, பரபரப்பு மற்றும் அவசரத்துடன் நான் இழைத்த தவறுகள். அதில் இருந்து, நிதானமாக ஆடத் துவங்கினேன். 30 வயதிற்குள் ஐந்து முறை தேசிய சாம்பியன் ஆனேன். ஸ்பான்சர் பிரச்னைகளால், அதிக அளவில், உலக அளவிலான போட்டிகளில், வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை. இருந்தாலும், ஆர்த்தி பொன்னப்பா எனும் நம் ஊர் பெண்ணுடன் இணைந்து, உலக டென்னிஸ் சம்மேளத்தின் போட்டிகளில், 25 முறை இரட்டையர் பட்டங்களைத் தட்டியிருக்கிறேன். என், 30 வயதிற்குப் பிறகும், விளையாட்டில் என் வேகம் குறையவில்லை. ஆனால், தோள்பட்டையில் ஏற்பட்ட ஒரு காயம், என்னை இரண்டு ஆண்டுகள் ஓய்வெடுக்க வைத்தது. அதிலிருந்து மீண்டு வந்து, போட்டிகளில் பங்கேற்றேன். டென்னிசில் இருந்த ஆர்வம், திருமணம் உட்பட எதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை. எந்த வெற்றிக்கும், வயது ஒரு தடையல்ல! எனக்குப் பிடிக்கும் வரை தொடர்ந்து ஆடிக்கொண்டே தான் இருப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக