செவ்வாய், 27 டிசம்பர், 2011

Social service by railway labourers: இதுவல்லவோ மனித நேயம்! :




கோவை: கோவையில், ஆதரவற்ற குழந்தைகளை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதற்கு ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்கள், பிளாட்பார வியாபாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்களை கொண்ட, 50க்கும் மேற்பட்ட, சமூக தன்னார்வ பாதுகாப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுவினர், 74 குழந்தைகளை மீட்டுள்ளனர். அந்த சிறுவன் பெயர் சுரேஷ் பாபு. 20 ஆண்டுகளுக்கு முன், கோவையின் ஏதோ ஒரு தெருவில் இருந்து, மீட்டு வரப்பட்ட அந்த சிறுவனுக்கு, கோவை டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில், அடைக்கலம் கிடைத்தது. அந்த சிறுவன் இன்று வளர்ந்து, அதே அன்பு இல்லத்தில் பணியாற்றுகிறார்.
தன்னைப் போன்ற, ஆதரவற்ற சிறுவர்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பது தான், அவரது குறிக்கோள். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில், உற்றார் உறவினர்களை இழந்து, நிர்கதியாக நிற்கும் ஆதரவற்ற குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறார். இதனால், ரயில்வே தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், பிளாட்பார கடை வியாபாரிகள் என பலருக்கும் அறிமுகம் ஆனார். இவர்களை இணைத்து, "சமூக தன்னார்வலர் குழு' என்ற, மீட்புக்குழுவை அமைத்துள்ளார், சுரேஷ்பாபு.
இவரது முயற்சியால், இன்று ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் 50 சமூக தன்னார்வ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74.

சமூக தன்னார்வ குழுவின் பணி குறித்து, சுரேஷ்பாபு கூறியதாவது: ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்கும், டான் பாஸ்கோ அன்பு இல்லம், சைல்டுலைன் மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இப்பணியை மேற்கொள்கிறோம். எங்கள் குழுவில் இருப்பவர்கள், சாதாரண தொழிலாளர்கள் தான். அன்றாட வருமானத்திற்காக தினக்கூலி செய்யும் ரயில்வே பார்சல் தொழிலாளர்கள், ஆட்டோ - டாக்சி டிரைவர்கள் என, சிலரை தேர்வு செய்து, இந்த குழுவை அமைத்துள்ளோம். ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் குன்றியோர் என யாராவது ஒருவரைப் பார்க்க நேரிட்டால், தன்னார்வ குழுவினர், உடனடியாக சைல்டுலைன் மற்றும் போலீசாருக்கு, தகவல்களை தெரிவிப்பர். முதலில் குழந்தைகளை மீட்டு, உணவு மற்றும் உதவிகளை அளிப்பர். குழந்தைகள் பேசும் நிலையில் இருந்தால், "சைல்டுலைன்' கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவர். விபத்தில் சிக்கியவர்களை, மருத்துவமனையில் அனுமதிப்பது, ரத்தம் தேவைப்பட்டால் ரத்த தானம் செய்வது,பெற்றோரிடம் கோபித்து வந்த குழந்தைகளுக்கு கவுன்சலிங் அளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். இவ்வாறு, சுரேஷ் பாபு கூறினார்.

சமூக பாதுகாப்பு குழுவில், இடம்பெற்றுள்ள, ரயில்வே பார்சல் தொழிலாளிகள் ராமமூர்த்தி, செந்தில்குமார் கூறியது: வழியும், மொழியும் தெரியாத வட மாநில குழந்தைகள், குடிகார தந்தையால் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட குழந்தைகள், வீட்டு எஜமானர்களின் சித்ரவதையை தாங்க முடியாத வேலைக்கார சிறுவர்கள், தாயின் கள்ளக்காதலனால் விரட்டப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், மனநலம் குன்றியோர் என, பலரும், கோவையின் பல்வேறு தெருக்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, கோவை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில், சித்தபிரமை பிடித்தது போன்று, முழு நிர்வாணமாக நின்ற 13 வயது சிறுவன் மீட்கப்பட்டான். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உடலும், மனமும் சோர்ந்த நிலையில் நின்ற, அந்த சிறுவனை மீட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டது' என்றனர்.

50 குழுக்களில் 900 உறுப்பினர்கள் : சமூக தன்னார்வ பாதுகாப்பு குழுவின், ஒருங்கிணைப்பாளர் ஜாக்குலின் கூறியதாவது: மீட்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் அல்லது உறவினர்களிடம் சேர்ப்பது, பெற்றோரை இழந்த குழந்தைகளை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்து, அவர்களுக்கு கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறோம். சமூக தன்னார்வலர் குழுவில் சேர்ந்துள்ள, ரயில்வே தொழிலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளோம். 50 குழுக்களில் மொத்தம் 900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுடன் அடிக்கடி தொடர்பு வைத்துக்கொண்டு, பணி குறித்து ஆய்வு செய்வோம். மாதாந்திர கூட்டங்கள் நடத்தி பணியின் மேம்பாடு குறித்து விவாதிக்கப்படுகிறது. சிறந்த பணிக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகள் மனோபாவம், குழந்தைகள் நல திட்டங்கள், சமூக பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். குழந்தைகள் கடத்தல், துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வு குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு, ஜாக்குலின் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக